உங்களிடம் 1 கோடி இருந்தாலும் நிம்மதியாக செட்டிலாக முடியாது.. ஏன் தெரியுமா? ஒரு ஷாக் கணக்கு
சென்னை: பலருக்கும் சீக்கிரம் ஓய்வு பெற்று ஜாலியாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஒரு கோடி ரூபாய் சேர்த்துவிட்டால் போதும் வேலையைக் கூட ரிசைன் செய்துவிடுவேன் என்று பலரும் சொல்லி கேட்டு இருப்போம். ஒரு கோடி ரூபாய் இப்போது பெரிய தொகையாக இருந்தாலும் வரும் காலத்தில் இது உங்கள் தேவைகளைக் கூட பூர்த்தி செய்யாது என்பதே அதிர்ச்சி தரும் உண்மை.. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில், 1 கோடி ரூபாய் என்பது உங்களுக்குப் பெரிய தொகையாகத் தோன்றலாம்.. ஒரு கோடி ரூபாய் மட்டும் பேங்கில் இருந்தால் போதும் இப்போதே கூட ஜாலியாக ஓய்வு பெறலாம் என்று நீங்கள் நினைக்கலாம்.

பெரும்பாலான இடங்களில் இப்போது வீட்டை வாங்க இந்த ஒரு கோடி ரூபாய் போதும். குழந்தையை வளர்த்து கல்யாணம் செய்து வைக்கக் கூட என்று எல்லாம் சேர்த்தால் கூட ஒரு கோடி ரூபாய் போதும் என்றே உங்களுக்குத் தோன்றலாம்..
ஒரு கோடி: இப்போது ஒரு கோடி ரூபாய் என்பது பெரிய தொகையாக இருந்தாலும். வரும் காலத்தில் விலைவாசி உயர்வு, பண வீக்கம் உள்ளிட்ட காரணங்களால் ஒரு கோடி ரூபாயின் மதிப்பு குறையவே செய்யும். எனவே, 10, 20 அல்லது 30 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் ஓய்வு பெற்றால் இந்தத் தொகை போதுமானதாக இல்லாமல் கூடப் போகலாம்..
என்னப்பா ஒரு கோடி ரூபாய் பத்தாதா எனக் கேட்கிறீர்களா.. உண்மையில் பணவீக்கம் காலப்போக்கில் பணத்தின் மதிப்பைக் குறைக்கிறது.. இன்று மிகப் பெரிய தொகையாகத் தோன்றும் இந்த தொகை ஓய்வு பெற்ற பிறகு உங்கள் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லாமல் போகலாம். பணவீக்கம் எப்படி நமது சேமிப்பின் மதிப்பை படிப்படியாகக் குறைக்கிறது என்பதை நாம் இதில் பார்க்கலாம். அப்போது தான் நீண்ட கால நிதித் திட்டமிடல் எந்தளவுக்கு முக்கியம் என்பது நமக்கு புரியும்.
பணவீக்கம்: பணவீக்கம் பணத்தின் மதிப்பை எப்படிக் குறைக்கிறது? இதுதான் நம்மில் பலருக்கும் இருக்கும் கேள்வி. இதற்கான பதிலை நாம் எளிமையாகப் பார்க்கலாம். விலைவாசி உயர உயர உங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்க ஆகும் செலவும் அதிகரிக்கும். அதாவது 10 ஆண்டுகளுக்கு முன்பு 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.3000 என்ற ரேஞ்சில் இருந்தது. ஆனால், இன்று அது ரூ.7100ஐ தாண்டிவிட்டது. 10 ஆண்டுகளுக்கு முன்பு உங்களால் ரூ.3000ஐ வைத்து ஒரு கிராம் தங்கத்தை வாங்க முடியும். ஆனால், இன்று அதே பணத்தை வைத்து அரை கிராம் கூட வாங்க முடியாது.
10 ஆண்டுகளுக்கு முன்பும் சரி, இப்போதும் சரி உங்களிடம் இருக்கும் பணம் ஒரே தொகை தான் என்ற போதிலும், அதன் மதிப்பு குறைந்துள்ளதையே இது காட்டுகிறது. இதன் காரணமாகவே இப்போது உங்கள் வங்கிக் கணக்கில் ரூ. 1 கோடி இருந்தாலும் அது வரும் காலத்தில் உங்கள் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் என சொல்ல முடியாது என்கிறோம். பணவீக்கத்தால் இதுபோல பணத்தின் மதிப்பு குறைகிறது.
மளிகை பொருட்கள்: மற்றொரு உதாரணம் வேண்டும் என்றால் 10 அல்லது 15 ஆண்டுகளுக்கு முன்பு மளிகைப் பொருட்கள் அல்லது வாடகைக்கு நீங்கள் எவ்வளவு செலவு செய்தீர்கள் என்பதை ஒப்பிட்டு பாருங்கள்.. இன்னும் தெளிவாகப் புரியும். எனவே, இப்போது பெரிய தொகையாகத் தோன்றும் ஒரு கோடி ரூபாய் கூட வரும் காலத்தில் போதுமானதாக இருக்காது.
குறையும் மதிப்பு: சரி விஷயத்திற்கு வரும்.. 10, 20 மற்றும் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.1 கோடியின் மதிப்பு என்னவாக இருக்கும் என்பதை பார்க்கலாம். ஒரு உதாரணத்திற்கு 6% பணவீக்கம் இருக்கிறது என வைத்துக் கொள்வோம். ரிசர்வ் வங்கி தரும் டேட்டாவில் பணவீக்கம் சுமார் 4%ஆக இருப்பதாகக் கூறினாலும், வல்லுநர்கள் பலரும் 5 முதல் 6% வரை நமது நாட்டில் பணவீக்கம் இருப்பதாகவே கூறுகிறார்கள். இதன் காரணமாகவே 6% பணவீக்கம் என நாம் எடுத்துக் கொள்ளலாம்.
என்னவாக இருக்கும்: 6% பணவீக்கம் என்று வைத்துக் கொண்டால், அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.1 கோடியின் மதிப்பு ரூ.55.84 லட்சமாகக் குறையும். அதேநேரம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, ரூ.1 கோடியின் மதிப்பு சுமார் ரூ.31.18 லட்சமாகச் சுருங்கிவிடும். கடைசியாக 30 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்றைய மதிப்பில் ரூ.1 கோடியாக உள்ள தொகை சுமார் ரூ.17.41 லட்சமாகக் குறைந்துவிடும். பணவீக்கம் குறைவாக இருந்தால் இதை விட சற்று கூடுதல் மதிப்பைக் கொண்டு இருக்கும். அதேநேரம் பணவீக்கம் அதிகமாக இருந்தால் மதிப்பு மேலும் குறையும்.
கடந்த காலங்களில் பார்த்தாலும் ரூபாய் மதிப்பு சரிந்தே வந்துள்ளது. நடுத்தர மக்கள் எவ்வளவு தூரம் கவனமாக தங்கள் ஓய்வூதியத்தைத் திட்டமிட வேண்டும் என்பதையே இது காட்டுகிறது. இன்று இருக்கும் விலைவாசியைக் கொண்டு நாம் எதிர்காலத்திற்குத் திட்டமிட்டால் அது சரியாக இருக்காது என்பதையே இது காட்டுகிறது.
மேலும், நீங்கள் எதிலாவது முதலீடு செய்கிறீர்கள் என்றால் 6% மேல் லாபம் வருவது போலப் பார்த்துக் கொள்ளுங்கள். சரியாக 6% வந்தால் அது பணவீக்கத்திற்கே போய்விடும். உங்களுக்கு லாபமும் இல்லை நஷ்டமும் இல்லை. 6% கீழ் இருந்தால் உங்கள் முதலீடு நஷ்டத்தையே தருகிறது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.












Click it and Unblock the Notifications