பதிலடி கொடுக்க வேண்டியது எனது பொறுப்பு.. நீங்கள் விரும்புவது நிச்சயம் நடக்கும்! ராஜ்நாத் சிங் ஆவேசம்
டெல்லி: இந்தியாவை காயப்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பது எனது பொறுப்பு என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். மேலும், பிரதமர் மோடி தலைமையின் கீழ், நீங்கள் விரும்புவது நிச்சயம் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் இந்தியர்களின் மனதில் ஆறாத ரணத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பாவி பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் பயங்கரவதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தியா பதிலடி
பஹல்காம் தாக்குதலையடுத்து, பாகிஸ்தானுக்கு தக்க பாடம் கற்பிக்கும் வகையில் இந்தியா பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம், சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, வணிகம் - இறக்குமதிகளுக்கு தடை, பாகிஸ்தான் நாட்டு கப்பல்களுக்கு இந்திய துறைமுகங்களில் தடை என அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஆதரவு அளிப்பதாக எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன. தாக்குதலை நடத்தியவர்களும், பின்னணியில் இருந்தவர்களும் கற்பனையில் கூட நினைத்து பார்த்திராத பதிலடியை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி உறுபதிபட கூறியுள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதில் உறுதியாக இருக்கும் இந்தியா, இந்த பதிலடியின் தன்மை, இலக்குகள் மற்றும் நேரத்தை நிர்ணயிப்பதில் இந்திய ஆயுதப் படைகளுக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளது.
அச்சத்தில் பாகிஸ்தான்
இதனால் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகி இருக்கிறது. இது பாகிஸ்தானுக்கு பெரும் அச்சத்தை கொடுத்துள்ளது. இந்தியா எந்த நேரத்திலும் தங்களை தாக்கும் என அந்த பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள் பீதியில் உளறி வருகிறார்கள். இத்தகைய பதற்றத்திற்கு இடையே, திடீரென்று போலீசார் பஞ்சாப்பின் ஃபெரோஸ்பூர் கண்டோன்மென்ட்டில் மின்சார தடையை ஏற்படுத்தி சோதனை மேற்கொண்டுள்ளனர்.
சுமார் அரை மணி நேரம் இந்த பயிற்சி நடைபெற்றது. அதேபோல, கடந்த சில தினங்களுக்கு முன்பாக போர் விமானங்களை எக்ஸ்பிரஸ்வே சாலையில் தரையிறக்கி சோதனை நடைபெற்றது. இப்படி இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகள் பாகிஸ்தானை கதி கலங்க வைத்துள்ளது. இதனால், இந்தியாவுக்கு எதிராக ஆத்திரமூட்டும் கருத்துக்களை பேசி வருகிறார்கள்.
பதிலடி கொடுப்பது எனது பொறுப்பு
இந்த நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ரஜ்நாத் சிங், இந்தியாவை காயப்படுத்த நினைப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பது எனது பொறுப்பு என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராஜ்நாத் சிங் கூறியதாவது:- "உங்களுக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
பிரதமர் மோடி தலைமையின் கீழ், நீங்கள் விரும்புவது நிச்சயம் கிடைக்கும். நமது நாட்டை தாக்க நினைப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டியது எனது பொறுப்பு.. பிரதமர் மோடியின் நெறிமுறை மற்றும் விடா முயற்சி பற்றி நீங்கள் அனைவரும் அறிவீர்கள்" இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக மனதின் குரல் நிகழ்ச்சியின் போது பிரதமர் மோடி, பயங்கரவாதிகளுக்கு மறக்கு முடியாத தண்டனை வழங்கப்படும் என்று கூறியிருந்தார். காஷ்மீரில் அமைதி நிலவுவதை பயங்கரவாதிகள் விரும்பவில்லை என்றும், பயங்கரவாதிகளுக்கு கனவிலும் நினைத்து பார்த்திடாத அளவுக்கு பெரிய பதிலடியை இந்தியா கொடுக்கும் என்றும், இந்தியாவுக்கு உலக நாடுகள் அனைத்து ஆதரவளித்துள்ளன என்றும் மோடி கூறியிருந்தார். தற்போது ரஷ்ய அதிபர் புதினும் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு, இந்தியாவுக்கு ரஷ்யா முழு ஆதரவு அளிக்கும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications