மத்திய அரசின் புது ஐடி விதி.. தனியுரிமைக்கு எதிரானது என வாட்ஸ்ஆப் புகார்.. டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கு
டெல்லி: இந்தியாவில் மத்திய அரசு மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் புதிய ஐடி விதிகளுக்கு எதிராக வாட்ஸ் அப் நிறுவனம் டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளது.
இந்தியாவில் மத்திய தகவல்கள் தொழில்நுட்ப துறை மூலம் சமூக வலைத்தளங்களுக்கும், ஓடிடி தளங்களுக்கும் புதிய விதிகள் கொண்டு வரப்பட்டன. கடந்த பிப்ரவரி மாதம் இந்த விதிகள் அறிவிக்கப்பட்டன. இந்த புதிய ஐடி விதிகள் மூலம், சமூக வலைதள நிறுவங்கள், ஓடிடி தளங்கள் கன்டென்ட்கள் குறித்த புகார்களை விசாரிப்பதற்காக இந்தியர் ஒருவர் அதிகாரியாக நியமிக்கப்பட வேண்டும்.
மத்திய அரசு தொடர்பு கொள்ள வசதியாக இந்த அதிகாரி நியமிக்கப்பட வேண்டும். அதேபோல் புகார்கள், கன்டென்ட்கள் குறித்து விசாரிப்பதற்காக மத்திய அமைச்சர்கள் அடங்கிய தனி குழு நியமிக்கப்பட வேண்டும்.

என்ன விதி
சமூக வலைதள நிறுவனங்கள், ஓடிடி தளங்களில் எந்த போஸ்ட்கள், கன்டென்ட்கள், வீடியோக்களை நீக்க வேண்டும் என்று இந்த குழுவே இறுதி முடிவு எடுக்கும். ஒரு போஸ்ட்டை அல்லது வீடியோவை நீக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டால் 36 மணி நேரத்திற்குள் அதை நீக்க வேண்டும் என்று இந்த விதிகள் சொல்கிறது. பேஸ்புக் நிறுவனம் மத்திய அரசின் இந்த புதிய ஐடி விதிகளை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளது.

நேற்று முடிந்தது
இதை ஏற்றுக்கொள்ள மூன்று மாத கால அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில், நேற்றே கால அவகாசம் முடிந்துள்ள நிலையில், இன்னும் டிவிட்டர் இந்த விதிகளை ஏற்கவில்லை. இன்னொரு பக்கம் வாட்ஸ் ஆப் நிறுவனம் தற்போது டெல்லி ஹைகோர்ட்டில் இது தொடர்பாக வழக்கு தொடுத்துள்ளது. இந்த விதியின்படி இனி வாட்ஸ் ஆப்பில் ஒரு தகவல் பரவுகிறது என்றால், அதை முதலில் யார் அனுப்பினார் என்று வாட்ஸ் ஆப் நிறுவனம் மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.

பார்வேர்ட் மெசேஜ்
அதாவது மத்திய அரசுக்கு எதிராக ஒரு பார்வேர்ட் மெசேஜ் பரவுகிறது என்றால், அதை மத்திய அரசு விசாரிக்கும்பட்சத்தில், அதை முதலில் யார் அனுப்பினார் என்று வாட்ஸ் ஆப் நிறுவனம் சொல்ல வேண்டும். இது வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் எண்ட் - டூ எண்ட் என்கிரிப்ஷன் முறைக்கு எதிரானது. அதாவது நாம் அனுப்பும் மெசேஜ்களை நம்மையும், மெசேஜை பெறுபவரையும் தவிர வேறு யாரும் பார்க்க முடியாது என்ற விதி உள்ளது.

தவறு
எண்ட் - டூ எண்ட் என்கிரிப்ஷன் காரணமாக வாட்ஸ் ஆப் கூட இந்த மெசேஜ்களை பார்க்க முடியாது. ஆனால் தற்போது மத்திய அரசின் விதியால் யாருக்கு யார் மெசேஜ் அனுப்பிக்கிறார் என்று சோதிக்க வேண்டும். இது எண்ட் - டூ எண்ட் என்கிரிப்ஷன் விதியை மீறுவதாக இருக்கும். அதேபோல் இந்தியர்களின் தனிப்பட்ட உரிமைகளில் அத்துமீறுவதாக இருக்கும் என்று வாட்ஸ் ஆப் கருதுகிறது.

எதிர்ப்பு
இதை தொடர்ந்தே தற்போது வாட்ஸ்ஆப் நிறுவனம் டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளது. இது இந்தியர்களின் தனி உரிமைக்கும், வாட்ஸ் ஆப்பின் சர்வதேச விதிக்கும், மனிதர்களின் பிரைவஸிக்கும் எதிரானது. இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது இந்த புதிய ஐடி விதி என்று கூறி வாட்ஸ் ஆப் சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications