விறுவிறு ஓட்டுப்பதிவு.. இலங்கை அதிபர் தேர்தலில் இந்தியா - சீனா ஆதரவு யாருக்கு தெரியுமா? முழு விபரம்
டெல்லி: இலங்கை அதிபர் தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரம்மதேசா, அனுரகுமார திஸாநாயக்கா, மஹிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே உள்பட 38 பேர் போட்டியிட்டுள்ளனர். இதில் இந்தியா, சீனாவின் ஆதரவு யாருக்கு உள்ளது என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
இலங்கையில் இன்று அதிபர் தேர்தல் நடந்து வருகிறது. இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. மாலை 4 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 1.7 கோடி மக்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களுக்காக நாடு முழுவதும் மொத்தம் 13,134 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இன்று மாலை 4 மணிக்கு தேர்தல் முடிவடைந்த பிறகு சிறிது நேரம் இடைவேளை விடப்படுகிறது. அதன்பிறகு ஓட்டு எண்ணும் பணி தொடங்கி நடைபெறும். அதாவது இன்று இரவு 9 மணிக்கு ஓட்டு எண்ணும் பணி தொடங்கி நடைபெற உள்ளது. இலங்கையை பொறுத்தவரை வாக்குச்சீட்டு முறை தான் நடைமுறையில் உள்ளது.
இதனால் இன்று இரவு தொடங்கும் ஓட்டு எண்ணிக்கை என்பது நாளை வரை நடக்கும். நாளை மதிய வேளையில் இலங்கை அதிபர் தேர்தலில் வெல்லப்போவது யார்? தெரிந்துவிடும். இலங்கை அதிபர் தேர்தலை பொறுத்தவரை தற்போதைய அதிபர் ரணில் விக்கிரம சிங்கே சுயேட்சையாக போட்டியிடுகிறார். அதேபோல் தேசிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த அனுர குமார திஸனநாயகே, எதிர்க்கட்சி தலைவராக உள்ள எஸ்ஜேபி எனும் சமாகி ஜன பலவேகய கட்சியின் சஜித் பிரேமதாசா, முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் போட்டியிடுகின்றனர். இதுதவிர ஈழத் தமிழர் பொதுவேட்பாளராக அரியநேந்திரன் களமிறங்கி உள்ளார். இவர்கள் உள்பட மொத்தம் 38 பேர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.
இலங்கை என்பது நம்முடைய அண்டை நாடாக உள்ளது. இதனால் இந்த நாட்டின் ஆதரவு என்பது நமக்கு நிச்சயம் தேவை. அப்போது தான் கடல்வழி பாதுகாப்பு உறவில் பிரச்சனை இல்லாமல் இருக்கும். குறிப்பாக இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் உள்ளது. சீனா நமக்கு எதிரான நிலைப்பாட்டில் செயல்பட்டு வருவதால் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் என்பது நமக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இதனால் இந்த தேர்தலில் நம் நாடு மற்றும் சீனா ஆகியவை தங்களின் ஆதரவு வேட்பாளரை வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறது.
அந்த வகையில் தற்போது நடக்கும் இலங்கை அதிபர் தேர்தலில் நம் நாட்டின் ஆதரவு என்பது முதலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி வேட்பாளராக அனுர குமார திஸநாயக்காவுக்கு இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கடைசி நேரத்தில் நம் நாடு நிலைப்பாட்டை மாற்றி உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது அனுர குமார திஸநாயக்காவுக்கு பதில் நம் நாடு எதிர்க்கட்சி தலைவரும், தற்போதைய அதிபர் வேட்பாளருமான சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் தான் அவரை டெல்லி வரவழைத்து மத்திய அரசு பிரதிநிதிகள் சார்பில் பேசப்பட்டுள்ளது. மேலும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக அங்குள்ள தமிழர்களை வாக்களிக்க வைக்க வேண்டும் என்பதற்காக தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் இந்தியா சார்பில் வாக்கு சேகரிப்பு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படியாக இந்தியாவின் நிலைப்பாடு இலங்கை அதிபர் தேர்தலில் சஜித் பிரேமதாசவின் பக்கம் உள்ளது. அதேபோல் ஈழத்தமிழர்களின் அரசியல் கட்சியான தமிழரசு கட்சியும் சஜித் பிரேமதாசவின் பக்கம் உள்ளது.
மறுபுறம் சீனாவை எடுத்து கொண்டால் அந்த நாடு அனுர குமார திஸநாயக்காவுக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. அனுரகுமார திஸநாயக்கா தொடர்ந்து சீனா ஆதரவு நிலைப்பாட்டில் தான் இருந்து வருகிறார். இதனால் இலங்கை அதிபர் தேர்தலில் அனுர குமார திஸநாயக்காவை வெல்ல வைக்க சீனா காய்நகர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் கூட இந்த தேர்தலில் கருத்து கணிப்பு முடிவுகளின்படி கடும் போட்டி நிலவுவதை சுட்டிக்காட்டி உள்ளது.
இலங்கையை பொறுத்தவரை ஒவ்வொரு அதிபர் தேர்தலிலும் வேட்பாளர்கள் 50 சதவீத வாக்குகளை முதல் சுற்றிலேயே எடுத்து வெற்றி பெறுவார்கள். ஆனால் இந்த முறை அப்படி எதுவும் நடைபெற வாய்ப்பில்லை என்று கருத்து கணிப்புகள் கூறுகின்றன. மேலும் இந்த தேர்தலில் இலங்கையின் தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே வெல்வது கடினம் என கருத்து கணிப்புகள் கூறுகின்றன.
அதேவேளையில் சில கருத்து கணிப்புகள் சஜித் பிரேமதாசவுக்கும், சில கருத்து கணிப்புகள் அனுரகுமார திஸநாயக்காவுக்கும் ஆதரவாக வந்துள்ளன. இதனால் இலங்கையில் நேரடி போட்டி என்பது இந்தியா ஆதரவு தெரிவித்துள்ள தற்போதைய எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாசவுக்கும், சீனா ஆதரவு பெற்ற அனுர குமார திஸநாயக்காவுக்கும் தான் இருக்கும் என்று கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன. இதில் யார் வெல்வார்கள் என்பதை பொறுத்து தான் இலங்கையில் கை ஓங்கப்போவது இந்தியாவா? அல்லது சீனாவா? என்பது தெரியவரும்.












Click it and Unblock the Notifications