டெல்லியில் அதிகாரம் யாருக்கு? உச்ச நீதிமன்ற தீர்ப்பால் கெஜ்ரிவால் அரசுக்கு பின்னடைவு
டெல்லி: டெல்லி யூனியன் பிரதேசத்தில், அதிக அதிகாரம் கொண்டது துணை நிலை ஆளுநரா அல்லது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முதல்வரா என்பது தொடர்பான வழக்கில், அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு பின்னடைவு ஏற்படும் வகையிலான தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று வழங்கியது.
ஆம் ஆத்மியின், அரவிந்த் கேஜ்ரிவால் கடந்த 2015ம் ஆண்டு டெல்லி முதல்வராக பொறுப்பேற்றது முதலே, மத்திய அரசுடனும், துணை நிலை ஆளுநருடனும் மோதல் முற்றத் தொடங்கியது. ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்த பிறகு டெல்லி துணை நிலை ஆளுநர்களாக பதவிக்கு வந்துள்ள இருவருடனும் கேஜ்ரிவால் அரசுக்கு மோதல் தொடருகிறது.
இந்த நிலையில் ஊழல் ஒழிப்பு பிரிவு ஒன்றை டெல்லி அரசு உருவாக்கியது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு
ஊழல் வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய இந்த பிரிவுக்கு அதிகாரம் உண்டு. டெல்லி காவல்துறைதான் இதற்கான பணியாளர்களை வழங்க வேண்டும். ஆனால் டெல்லி காவல்துறை கட்டுப்பாடு மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் உள்ளது. இதுபோல எந்தெந்த துறைகள் யாரின் அதிகாரத்திற்கு கீழே வருகிறது என்ற குழப்பம் ஏற்பட்டதால், இதுதொடர்பாக சுமார் 9 வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி மற்றும் அசோக் பூஷன் ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வு இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியது.
தீர்ப்பு
சிக்ரி தனது தீர்ப்பில் கூறியதாவது: இணை செயலாளர்கள் மட்டத்திற்கு மேலேயுள்ள அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யும் அதிகாரம் துணை நிலை ஆளுநருக்குத்தான் உள்ளது. அதற்கும் குறைவான அதிகாரத்தில் உள்ள பணியாளர்களை பணியிடமாற்றம் செய்யும் அதிகாரம்தான் டெல்லி அரசிடம் உள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறையும், துணை நிலை ஆளுநர் கட்டுப்பாட்டில் உள்ள துறையாகும். டெல்லி அரசிடம் காவல்துறை அதிகாரம் கிடையாது. எனவே மத்திய, மாநில அரசுகள் நடுவே ஒற்றுமை இருக்க வேண்டும். மக்கள் நலனை இரு அரசுகளும் கருத்தில் கொள்ள வேண்டும்.
எந்த துறைகள் யாருக்கு
சிறப்பு அரசு வழக்கறிஞரை நியமிக்கும் உரிமை டெல்லி அரசிடம் உள்ளது. மின்சாரத்துறை சீரமைப்பு துறை டெல்லி அரசிடம் உள்ளது. வருவாய் துறை, கிரேட் 3 மற்றும் 4வது நிலை அதிகாரிகளுக்கு பணி வழங்குவது, பணியிடமாற்றம் செய்வது போன்றவை, டெல்லி அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. கிரேட் 1 மற்றும் கிரேட் 2 அதிகாரிகள் பணி தொடர்பான விஷயங்களை மத்திய அரசுதான் எடுக்க முடியும். இவ்வாறு அவர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
3 நீதிபதிகள் அமர்வு
அதேநேரம், அசோக் பூஷன், தனது தீர்ப்பு உரையில், இணை செயலாளர்கள் மட்டத்திற்கு கீழான அதிகாரிகளையும் பணியிடமாற்றம் செய்யும் அதிகாரம் டெல்லி அரசுக்கு இல்லை என கூறினார். இரு நீதிபதிகளின் தீர்ப்பில் முரண் எழுந்ததால், இந்த வழக்கு 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்படுவதாக நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். உச்சநீதிமன்ற 2 நீதிபதிகள் அமர்வின் பெரும்பாலான உத்தரவுகள், டெல்லி அரசுக்கு எதிரானதாக இருப்பதால், இது கெஜ்ரிவால் அரசுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.