டெல்லியில் நாளை காலை முதல் மாலை வரை 'கெஜ்ரிவால் மேளா'.. பரபரக்கும் ஆம் ஆத்மி அலுவலகம்-என்ன நடக்கும்?
டெல்லி: டெல்லி முதல்வர் பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் நாளை மாலை ராஜினாமா செய்கிறார். டெல்லியில் நாளை காலை ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் புதிய முதல்வர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதன் பின்னர் மாலையில் துணை நிலை ஆளுநரை நேரில் சந்தித்து தமது ராஜினாமா கடிதம் கொடுக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால். அப்போது புதிய முதல்வர் யார் என்ற அறிவிப்பும் வெளியாக உள்ளது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து பெரும் போராட்டத்துக்குப் பின்னர் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

ஆனால் ஜாமீன் நிபந்தனைகளாக முதல்வர் அலுவலகம் செல்லக் கூடாது; முதல்வர் கோப்புகளை கையாளக் கூடாது எனவும் அதிரடியாக உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். இதனால் முதல்வர் பதவியில் தொடர முடியாத நிலை கெஜ்ரிவாலுக்கு ஏற்பட்டது.
இதனையடுத்து டெல்லியில் நேற்று ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளிடையே பேசிய கெஜ்ரிவால், 2 நாட்களில் அதாவது செப்டம்பர் 17-ந் தேதி தாம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறேன். டெல்லி சட்டசபைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில்தான் தேர்தல் நடைபெற வேண்டும். ஆனால் முன்கூட்டியே நவம்பரிலும் தேர்தல் நடத்த பரிந்துரைப்போம். அப்படி முன்கூட்டியே தேர்தல் நடைபெறாத நிலையில் புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுவார் என அதிரடியாக அறிவித்தார்.
இதனால் டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இன்றும் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைகளின் முடிவில், டெல்லியில் நாளை காலை 11 மணிக்கு ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும். அந்தக் கூட்டத்தில் புதிய முதல்வர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார். பின்னர் மாலை 4.30 மணிக்கு துணை நிலை ஆளுநரை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால். அப்போது புதிய முதல்வர் யார் எனவும் அறிவிக்கப்பட இருக்கிறது என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications