இதெல்லாம் சரிப்பட்டு வராது.. சீர்திருத்தத்திற்கான நேரம் வந்துவிட்டது! கொரோனா மாநாட்டில் பிரதமர் மோடி
டெல்லி: இரண்டாவது சர்வதேச கோவிட் உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உலக சுகாதார அமைப்பில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
கடந்த 2019 இறுதியில் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், ஒட்டுமொத்த உலகையே புரட்டிப் போட்டுவிட்டது. இதுவரை எந்தவொரு நாட்டிலும் கொரோனா முழுமையாக அழிக்கப்படவில்லை.
மொத்தம் 5 பேர் இருக்கோம்.. போனை போட்டாலும் எடுக்கலயே ஏன்.. திராவிடமாடல்? ஸ்டாலினுக்கு செல்லூர் நறுக்
கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பது தான், அதை அழிப்பதில் சவாலாக உள்ளது. கொரோனா வேக்சின் பணிகள் காரணமாக உயிரிழப்புகளும், தீவிர பாதிப்புகளும் மட்டுமே இப்போது கட்டுக்குள் உள்ளது.
சீரமைக்க வேண்டும்
இதனிடையே இன்று இரண்டாவது சர்வதேச கோவிட் உச்சி மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "உலக சுகாதார அமைப்பைச் சீரமைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. விரைவாக முடிவெடுக்கக் கூடிய உலக சுகாதார மையத்தை உருவாக்கி, அதைப் பலப்படுத்தப்பட வேண்டும். கொரோனா வேக்சின் விநியோகச் சங்கிலியை முறையாக வைத்திருக்க வேக்சின் மற்றும் சிகிச்சை முறைகளுக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்கும் செயல்முறை நெறிப்படுத்த வேண்டும்.
ஒருங்கிணைந்த முயற்சி
எதிர்காலத்தில் ஏற்படும் சுகாதார அவசரநிலைகளை எதிர்த்துப் போராட இதுபோன்ற சர்வதேச அளவிலான ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவை என்பது தெளிவாகிறது. உலக சமூகத்தின் பொறுப்பான உறுப்பினராக, இந்தியா இந்த முயற்சிகளில் முக்கிய பங்கு வகிக்கவும் தயாராக உள்ளது. அறிவுசார் சொத்துரிமைகளின் வர்த்தகம் தொடர்பான அம்சங்களில் உலக வர்த்தக அமைப்பின் விதிகள் சற்று நெகிழ்வாக இருக்க வேண்டும்.
சுகாதாரத் துறைக்கு அதிக நிதி
இந்தியாவில் கொரோனா பரவல் ஏற்பட்ட போது, அதைத் தடுக்க மக்களுக்கு முன்னுரிமை அளித்து கொரோனா பரவல் தடுப்பு திட்டத்தை உருவாக்கினோம். இந்தியாவின் பட்ஜெட்டில் இதுவரை இல்லாத அளவுக்குச் சுகாதாரத் துறைக்கு அதிக நிதியை ஒதுக்கினோம். உலகின் மிகப் பெரிய வேக்சின் திட்டம் இந்தியாவில் நடைபெற்று வருகிறது 18 வயதைத் தாண்டியவர்களில் 90 சதவீத பேரும். 5 கோடிக்கும் அதிகமான குழந்தைகளுக்கு முழுமையாக வேக்சின் போடப்பட்டுள்ளது.
4 வேக்சின்கள்
உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்த 4 வேக்சின்களை இந்தியா தயாரிக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் இருந்து சுமார் 500 கோடி வேக்சின் டோஸ்களை உற்பத்தி செய்ய முடியும். நாங்கள் 98 நாடுகளுக்கு 200 மில்லியன் வேக்சின்களை வழங்கினோம். குறைந்த விலை கொரோனா சிகிச்சை தொழில்நுட்பங்களை இந்தியா உருவாக்கியுள்ளது. இதை நாங்கள் மற்ற நாடுகளுக்கும் வழங்கியுள்ளோம். வைரஸைப் பற்றிய உலகளாவிய தரவுத்தளத்தில் இந்தியாவின் ஜெனோமிக்ஸ் கூட்டமைப்பு குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்கியுள்ளது.
பாரம்பரிய மருந்துகள்
இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றவும் நாங்கள் எங்கள் பாரம்பரிய மருந்துகளைப் பயன்படுத்துகிறோம். கடந்த மாதம், இந்தியாவில் 'உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவத்திற்கான மையத்தை' உருவாக்க அடித்தளம் அமைத்தோம். இதன் மூலம் பழமையான அறிவு உலகிற்குக் கிடைக்கும்" என்று அவர் கூறினார்.