ஐயோ! கன்பியூஷனா இருக்கே! ஓபிஎஸ்- இபிஎஸ் கோஷ்டிகளை சமாளிக்க இரு கடிதங்களை அனுப்பியதா மத்திய அரசு?
அதிமுகவின் மக்களவை, மாநிலங்களவை தலைவர் என குறிப்பிட்டு ஓ.பி.ரவீந்திரநாத்திற்கும் தம்பிதுரைக்கும் மத்திய அரசு கடிதம்.
டெல்லி: அதிமுக என குறிப்பிட்டு ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத்திற்கும் எடப்பாடி தரப்பை சேர்ந்த தம்பிதுரைக்கும் மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளதால் அதன் ஆதரவு யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் இரு தரப்பினரையும் சமாளிக்க இது போல் இரு கடிதங்களை மத்திய அரசு எழுதியதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமைக்கான பிரச்சினையால் ஓபிஎஸ்ஸும் எடப்பாடி பழனிசாமியும் தனித்தனி அணிகளாக பிரிந்து கிடக்கிறார்கள். இதில் ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக் குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து ஓபிஎஸ், அவரது மகன் ஓ.பி. ரவீந்திரநாத், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரை எடப்பாடி பழனிசாமி கட்சியிலிருந்து நீக்கினார். அது போல் பதிலுக்கு ஓபிஎஸ்ஸும் எடப்பாடி பழனிசாமி, கே பி முனுசாமி உள்ளிட்டோரை நீக்கி உத்தரவிட்டார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

ஓ பி ரவீந்திரநாத்
அந்த கடிதத்தில் ஓ.பி. ரவீந்திரநாத் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார். எனவே அவரை எந்த காரணத்தை கொண்டு அதிமுக உறுப்பினராக பாவிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டிருந்தார். இதற்கு பதிலளித்த ஓபி ரவீந்திரநாத், அதிமுக பொதுக் குழு வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. அதன் முடிவுகள் வந்தால் மட்டுமே யார் உண்மையான அதிமுக என்பது தெரியவரும் என ஓம் பிர்லாவுக்கு கடிதம் மூலம் குறிப்பிட்டிருந்தார்.

டெல்லி தலைமை ஆதரவு
இந்த நிலையில் டெல்லி தலைமையின் ஆதரவு யாருக்கு என்ற போட்டியில் ஓபிஎஸ்ஸும் எடப்பாடி பழனிசாமியும் பல்வேறு செயல்களை செய்திருந்தனர். இந்த நிலையில்தான் ஜி20 ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து கட்சிகளுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்தது. அவ்வாறு அழைப்பு விடுத்த போது அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என குறிப்பிட்டு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கடிதம் எழுதியிருந்தார். இதனால் டெல்லி தலைமையின் ஆதரவு தங்களுக்கே என எடப்பாடி பழனிசாமி தரப்பு மகிழ்ச்சியில் இருந்தது.

இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி
இதையடுத்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என எடப்பாடி பழனிசாமியை குறிப்பிட வேண்டாம் என ஓபிஎஸ் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள மீண்டும் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் அதிமுக பொதுச் செயலாளர் என்று குறிப்பிட்டிருந்தது. இதனால் ஓபிஎஸ்ஸுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது.

அதிமுக பொதுக் குழு வழக்கு
அதிமுக பொதுக் குழுவுக்கு எதிரான வழக்கும், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற வழக்கும் நிலுவையில் உள்ள நிலையில் தற்போது மத்திய அரசு அதிமுகவுக்கு மீண்டும் ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளது. மத்திய பொது பட்ஜெட் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. இதை முன்னிட்டு இன்று மதியம் 12.30 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நாடாளுமன்றம்
அது போல் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பிற்பகல் 3.30 மணிக்கு ஆலோசனை நடத்தப்படுகிறது. இந்த இரு கூட்டங்களிலும் கலந்து கொள்ள மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அனைத்து கட்சிகளுக்கும் கூட்டணி கட்சிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

எதற்கு இரு கடிதம்
ஓபி ரவீந்திரநாத்தை அதிமுக மக்களவை உறுப்பினர் என குறிப்பிட்டு ஒரு கடிதமும் அதிமுக மக்களவை குழுத் தலைவர் என குறிப்பிட்டு இன்னொரு கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் ஓபிஎஸ் தரப்பு சந்தோஷப்பட்டு கொள்ள முடியாது. ஏனென்றால் இதே போன்று மக்களவைக்கு பதிலாக மாநிலங்களவை என குறிப்பிட்டு தம்பிதுரைக்கும் இரு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது. எனவே டெல்லி தலைமை யாரை அதிமுகவாக அங்கீகரிக்கிறது என்ற குழப்பம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications