ஏன் ஒரு நாடு கூட.. இந்தியாவுக்கு ஆதரவாக பாகிஸ்தானை கண்டிக்கவில்லை – ராகுல் காந்தி கேள்வி
டெல்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது. இதில் மத்திய பாஜக அரசின் செயல்பாடுகள் மீது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன. அந்த வகையில், "பாகிஸ்தானை கண்டிக்கும் இந்தியாவின் நடவடிக்கைக்கு ஏன் ஒரு நாடு கூட ஆதரிக்கவில்லை." என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது திடீர் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். நாட்டையே அதிரவைத்த இந்த கொடூர தாக்குதலில் 26 அப்பாவிகள் பலியாகினர். இதற்கு இந்தியா தரப்பில் கடந்த மே 7 ஆம் தேதி , ‛ஆபரேஷன் சிந்தூர்' என்கிற பெயரில் பதிலடி கொடுத்தது.

பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே கடுமையான போர் நிலவியது. இரண்டு நாடுகளும் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டன. இதில் பாகிஸ்தான் அதிக சேதத்தை எதிர்கொண்டது. இதையடுத்து அமெரிக்கா மத்தியஸ்தம் செய்து இரு நாடுகள் இடையே போர் நிறுத்த உடன்பாட்டை எட்டின. போர் முடிவுக்கு வந்து சில வாரங்கள் ஆகிவிட்டாலும் அது குறித்த விவாதங்கள் அரசியல் களத்தில் அனல் பறந்து கொண்டிருக்கிறது.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், "ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் தீவிரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட உள்ளது. உங்கள் ராணுவம் மீது தாக்குதல் நடத்தவில்லை. என்று பாகிஸ்தானுக்கு மெசேஜ் அனுப்பியிருந்தோம். இதன் மூலம் பாகிஸ்தானுக்கு தெளிவுபடுத்தி போர் பதற்றம் ஏற்படாமல் இருக்க முன்கூட்டியே தகவல் சொன்னோம்." என்றார்.
இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கடுமையான கேள்வியை முன் வைத்து வருகின்றன. நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, "தாக்குதலுக்கு முன்பாகவே பாகிஸ்தானுக்கு தகவல் தெரிவித்தது குற்றம். இதை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். இப்படி ஒரு முடிவை யார் அங்கீகரித்தார். இதனால் நம் விமானப்படை எத்தனை விமானங்கள் இழந்தன." என்று கேட்டிருந்தார்.
இது சர்ச்சையான நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அளித்த விளக்கத்தில், "வெளியுறவுத்துறை அமைச்சரின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடங்குவதற்கு முன்பாக மெசேஜ் அனுப்பப்பட்டது. ஆனால் இந்த மெசேஜ் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டதாக புரிந்து கொள்ளப்படுவது தவறு'' என்று கூறியிருந்தது.
இதுகுறித்து மீண்டும் கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி, "இந்த விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் மௌனம் மிகவும் மோசமானது. நான் மீண்டும் மீண்டும் கேட்கிறேன். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே தெரிந்ததால் நாம் எத்தனை விமானங்களை இழந்தோம். இது தவறு மட்டுமல்ல. இது குற்றம்." என்று விமர்சித்திருந்தார்.
மேலும் காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் தள பக்கத்தில் இந்தியா - பாகிஸ்தான் போரில் அமெரிக்காவின் மத்தியஸ்தம், அதிபர் டொனால்ட் டிரம்பின் பங்கு உள்ளிட்டவை தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ஜெய்சங்கர் தடுமாறுவது போன்ற வீடியோ வெளியிட்டு, "இவரின் பேச்சில் ஏன் இவ்வளவு தடுமாற்றம்." என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதை ரீ - போஸ்ட் செய்துள்ள ராகுல் காந்தி, "பாகிஸ்தானுடன் திடீர் இணக்கம் காட்டியது ஏன், பாகிஸ்தானை கண்டிக்கும் நடவடிக்கையில் ஒரு நாடு கூட இந்தியாவை ஆதரிக்கவில்லை, இந்தியா - பாகிஸ்தான் இடையே டிரம்பை மத்தியஸ்தம் செய்ய சொல்லியது யார். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சீர்குலைந்துவிட்டது." என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications