இலை ‘சீக்ரெட்’.. டஃப் கொடுக்கும் ஓபிஎஸ்! “நெருங்கிய புள்ளி” அமித்ஷாவை அதிமுக எம்பி சந்தித்த பின்னணி?
டெல்லி : அதிமுக எம்.பி தம்பிதுரை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பின்போது என்ன விஷயங்கள் குறித்துப் பேசப்பட்டது என்பது குறித்த தகவல்கள் தற்போது அதிமுக வட்டாரத்தில் இருந்து கசிந்துள்ளன.
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக ராஜ்யசபா எம்.பி தம்பிதுரை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பில் சில விஷயங்கள் பற்றி விரிவாக ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் பிரதமர் மோடியையும் தம்பிதுரை சந்தித்து பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசியுள்ளார் அதிமுக எம்.பி தம்பிதுரை.
முன்னதாக, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அண்ணாமலை மற்றும் மத்திய இணை அமைச்சர் முருகன் சந்தித்து பேசியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் இருக்கும்போது கூட்டணி குறித்து இப்போது முடிவுரை எழுத முடியாது என்றும் கூட்டணியில் பாஜக இருக்கிறது என்று தான் அமித்ஷா கூறினாரே தவிர கூட்டணியை உறுதி செய்யவில்லை என்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.

அமித் ஷா - தம்பிதுரை மீட்டிங்
இதனைதொடர்ந்து கூட்டணி குறித்து பாஜக மாநில தலைவர்கள் முடிவெடுக்க முடியாது, பாஜகவில் கூட்டணி குறித்து தேசிய தலைமை தான் முடிவெடுக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இந்நிலையில்,டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் அதிமுக எம்.பி தம்பிதுரை சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பின்போது அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என ஈபிஎஸ் சார்பில் தம்பிதுரை உறுதி அளித்ததாகக் கூறப்படுகிறது.
மே 10ஆம் தேதி நடைபெறவிருக்கும் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் சில தொகுதிகளில் போட்டியிட அதிமுக ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிகிறது. கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலை ஒட்டி களப் பணிகளை அதிமுக தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதையொட்டியே தம்பிதுரை - அமித் ஷா சந்திப்பு நடந்ததாகக் கூறுகிறார்கள் விவரமறிந்த வட்டாரத்தினர்.
கர்நாடகா தேர்தல் - அனுகூலம்
கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம், கர்நாடகாவில் தொகுதி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளை நியமித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தரப்பும் கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புகிறது. நீதிமன்ற தீர்ப்புகளின்படி தற்போது அதிமுக எடப்பாடி பழனிசாமி வசமே இருக்கிறது. ஆனால், தேர்தல் ஆணையம் இதுவரை பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கவில்லை.
ஏ பார்ம், பி பார்மில் கையெழுத்து போடும் அதிகாரம் பெற்றால் தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும். அது கர்நாடகாவில் கூடுதல் வாக்குகளை பெற நிச்சயம் கை கொடுக்கும். தேர்தல் ஆணையத்திடம் இருந்து எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும். ஓபிஎஸ் கர்நாடகா தேர்தலில் போட்டியிட முடிவு செய்தால் எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.
தேர்தல் ஆணையம் அங்கீகரித்தால் மட்டுமே எடப்பாடி பழனிசாமி தரப்பால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியும். இதையொட்டியே டெல்லியில் அமித் ஷா - தம்பிதுரை சந்திப்பு நிகழ்ந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பு கர்நாடகா தேர்தல் விஷயத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு அனுகூலம் தரக்கூடுமா, கட்சியில் அடுத்தகட்ட நகர்வுகளுக்கு உதவுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications