ஒரு முக்கிய புள்ளி.. பக்கத்துலயே ஒரு நாய்.. டெல்லியை உலுக்கிய ஒற்றை போட்டோ.. வசமா மாட்டிக்கிட்டாரே!
டெல்லி: ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் நாயுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று டெல்லியை உலுக்கி உள்ளது. தேசிய ஊடகங்களில் வைரலாக பரவி வரும் இந்த புகைப்படத்தில் இருப்பது என்ன.. நடந்தது என்ன என்று பார்க்கலாம்!
டெல்லியில் இருக்கும் பிரபல மைதானங்களில் ஒன்று தியாகராஜ் மைதானம். இங்கு பல விளையாட்டு வீரர்கள் வந்து தினமும் பயிற்சி மேற்கொள்வது வழக்கம்.
காமன்வெல்த், ஏசியா கோப்பை, ஏன் ஒலிம்பிக் என்று பல போட்டிகளுக்கு தயாராகும் வீரர்கள் இந்த மைதானத்தை பயன்படுத்துவது வழக்கம். இங்கு தினமும் நூற்றுக்கணக்கில் வசதி இல்லாத இளம் வீரர்கள் இலவசமாக பயிற்சி எடுத்து வருகின்றனர்.
கட்சியிலிருந்து கூப்டாங்க... பிரச்சாரம் செய்தேன் - ஏன் அரசியலுக்கு வரல தெரியுமா? - சகாயம் ஐஏஎஸ்
டெல்லி மைதானம்
இரவு 10 மணி வரை இங்கு வீரர்கள் பயிற்சி எடுப்பது உண்டு. இங்கு இருக்கும் ரன்னிங் டிராக் சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டது. இதனால் பல ஓட்டப்பந்தய வீரர்கள் இங்கு தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக இங்கு வீரர்கள் மாலைக்கு பின் விளையாட அனுமதிக்கப்படுவது இல்லை என்று கூறப்படுகிறது. மாலை 7 மணிக்கு பின்பாக இங்கு வீரர்களை விளையாட மைதான அதிகாரிகள் அனுமதிக்கவில்லையாம்.
வெளியேறுங்கள்
ஏன் எங்களை அனுமதிக்கவில்லை என்று கேட்டதற்கு மைதான ஊழியர்கள் சரியாக பதில் சொல்லவில்லையாம் . மைதானத்தில் இருக்கும் அதிகாரிகள் எல்லோரையும் வெளியேற்றிவிட்டு கதவை சரியாக 7 மணிக்கே அங்கு பூட்டி உள்ளனர். இதனால் சர்வதேச போட்டிகளுக்கு தயாராகும் வீரர்கள் கடுமையாக கஷ்டப்பட்டு உள்ளனர். ஏன் இப்படி நம்மை 7 மணிக்கே துரத்தி விடுகிறார்கள் என்று தெரியாமல் வீரர்களும் குழம்பி உள்ளனர்.
என்ன நடந்தது?
வீரர்களை 7 மணிக்கே அனுப்பினாலும் 8.30 மணி வரை மைதானத்தில் விளக்குகள் எரிந்தபடி இருந்தன. இதுதான் வீரர்களை குழப்பி உள்ளது. உள்ளே அப்படி என்ன மர்மம்தான் நடக்கிறது என்ற குழப்பம் வீரர்கள் இடையே எழுந்துள்ளது. இந்த நிலையில்தான் டெல்லியை சேர்ந்த வருவாய் செயலாளர் ஐஏஎஸ் அதிகாரி சஞ்சீவ் கிர்வார் வாக்கிங் செல்வதற்காக இந்த மைதானம் மூடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
காரில் வாக்கிங்
தினமும் அவர் காரில் வந்து.. இங்கு தனது நாயுடன் வாக்கிங் செல்கிறார். அவர் நாயுடன் வாக்கிங் செல்ல வேண்டும் என்பதற்காக மொத்த மைதானத்தையும் கடந்த சில தினங்களாக காலி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீரர்கள் இடையே இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதோடு இது தொடர்பாக புகைப்படம் ஒன்றையும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது.
வெளியான போட்டோ
மைதானம் உள்ளே செய்தியாளர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், பக்கத்தில் கட்டப்பட்டு வரும் கட்டிடம் ஒன்றின் மேல் இருந்து மைதானத்தில் ஐஏஎஸ் அதிகாரி சஞ்சீவ் கிர்வார் வாக்கிங் செல்லும் புகைப்படத்தை எடுத்து இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ளது. அதிகாரி நாயுடன் நிற்கும் அந்த புகைப்படம் இணையத்தை உலுக்கி உள்ளது. ஐஏஎஸ் அதிகாரி சஞ்சீவ் கிர்வார் டெல்லியில் பிரபலம் ஆனவர் என்பதால் இந்த சம்பவம் அங்கு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பரபரப்பு சம்பவம்
ஒரு அதிகாரி.. ஒரு நாய்க்காக இப்படி எல்லா வீரர்களையும் வெளியே அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் ஐஏஎஸ் அதிகாரி சஞ்சீவ் கிர்வார் அளித்துள்ள விளக்கத்தில், நான் அப்படி எதுவும் செய்யவில்லை. இது தவறு. நான் எப்போதாவது அங்கே வாக்கிங் செல்வேன். ஆனால் வீரர்களை வெளியே அனுப்ப சொல்லவில்லை. நான் என் நாயை யாரும் இல்லாத சமயத்தில்தான் டிராக்கிற்கு கொண்டு செல்வேன்.. மற்றபடி நான் வீரர்களை வெளியே போக சொல்ல மாட்டேன். அவர்களும் விளையாட வேண்டும்.. என்று தெரிவித்துள்ளார்.