"நல்ல மனிதர்!" நேரு பற்றி பேசும்போது கண் கலங்கிய காந்தியின் பேரன்.. என்ன சொன்னார் தெரியுமா
டெல்லி: காந்தியின் பேரன் ராஜ்மோகன் காந்தி நிகழ்ச்சி ஒன்றில் நாட்டின் முதல் பிரதமர் நேரு குறித்துப் பேசும் போது கண் கலங்கி அழுதுவிட்டார்.
இந்தியாவின் முதல் பிரதமராக இருந்தவர் ஜவஹர்லால் நேரு. இவர் 1950 முதல் 1964 வரை தொடர்ந்து 14 ஆண்டுகள் நாட்டின் பிரதமராக இருந்து உள்ளார்.
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வரலாற்று ஆசிரியரும் காந்தியின் பேரனுமான ராஜ்மோகன் காந்தி நாட்டின் முதல் பிரதமர் நேரு குறித்துப் பல முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
ராஜ்மோகன் காந்தி
ஹிமாச்சல பிரதேசத்தில் கசௌலியில் குஷ்வந்த் சிங் லிட் ஃபெஸ்ட் நடைபெற்றது. இதில் நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர் லால் நேருவை நல்ல மற்றும் பெரிய என்று குறிப்பிட்ட ராஜ்மோகன் காந்தி, அவரை பற்றிப் பரப்பப்படும் பொய்யான தகவல்களைக் கேட்டால் இமய மலைகளும் பூமியும் கூட எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தும் என்றார். மேலும், நீங்கள் அவரது கொள்கைகளை விமர்சிக்கலாம் என்றும் ஆனால் அவரை போன்ற ஒரு உன்னத மனிதர் குறித்து பொய்களைப் பரப்பும் அளவுக்கு மோசமாக இருக்க வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.
பொய்கள்
திரிணாமுல் எம்பி மஹுவா மொய்த்ரா மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, பிரிவினை மற்றும் சமகால இந்தியா குறித்துக் கேட்ட கேள்விக்கு அவர் இப்படி பதில் அளித்தார். மேலும் அவர், "ஒபாமா அமெரிக்காவில் பிறக்கவில்லை என்று இன்னும் கூட பல வெள்ளை அமெரிக்கர்கள் நம்புகிறார்கள். இப்படித்தான் கோடிக்கணக்கான இந்தியர்கள் மோதிலால் நேரு ஒரு முஸ்லீம் என்று நம்பத் தொடங்கினர். இந்த பொய் பல ஆண்டுகளாகப் பரப்பப்பட்டு வருகிறது. நேரு முஸ்லிமாக இருந்தாலும், இல்லையென்றாலும் அதில் குற்றமில்லை.
14 ஆண்டுகள் சிறை
உங்கள் மூதாதையர் குறிப்பிட்ட மதத்தைப் பின்பற்றுவதால் ஒருவரைக் கொல்லவோ, தண்டிக்கவோ அல்லது குற்றம் சாட்டவோ முடியாது.. சுதந்திரப் போராட்டத்தின் போது நேரு 14 ஆண்டுகள் சிறையில் இருந்தார். இதை யாராலும் மறக்க முடியாது. உண்மையில் 14 ஆண்டுகள் என்பது நீண்ட காலம்.. அவர் விடுவிக்கப்பட்ட கொஞ்சக் காலத்திலேயே அவரது மனைவி இறந்துவிட்டார்.
நல்ல மனிதர்
நேரு ஒரு நல்ல மனிதர், பெரிய மனிதர், புத்திசாலியான மனிதர். அவர் இமயமலையை நேசித்தார். அவர் குறித்துப் பரப்பப்படும் பொய்களைக் கேட்டால் இமயமலையும் பூமியும்கூட எதிர்ப்பு தெரிவிக்கும் நீங்கள் அவருடைய கொள்கைகளை விமர்சிக்கலாம் ஆனால் பொய்யைப் பரப்ப உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இதை நினைத்தாலே எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது.
காந்தி
காந்திக்கு இப்போது எதுவும் ஆகாது.. காந்தி பாதுகாப்பாக இருக்கிறார்.. அவர் எப்போது உயிருடன் இல்லை என்று அறிவிக்கப்பட்டதோ அப்போது இருந்து தான் காந்தி பாதுகாப்பாக இருக்கிறார். காந்தி மற்றும் இந்தியத் தலைவர்கள் பற்றி ஆச்சரியமான விஷயம் ஒன்று இருக்கிறது. வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை என்று அவர்களைக் குறை கூறுகிறோம்.. நமது காலத்தின் பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை என்றும் அவர்களைக் குற்றம் சாட்டுகிறோம்.
கொள்கை
இது அநியாயம் என்றே நான் நினைக்கிறேன். இங்கு அனைவரும் மனிதர்கள் தான். சில பிரச்சனைகளை நாமாகவே தீர்க்க வேண்டும். நாம் காந்தியின் தவறுகளில் கவனம் செலுத்தக்கூடாது. சரி காந்தி 1,000 தவறுகளைச் செய்தார் என்று வைத்துக் கொள்ளலாம். காந்தி நேரு மற்றும் படேல் இணைந்து 10,000 தவறுகள் செய்துள்ளனர் என்றே வைத்துக் கொள்வோம்.. ஆனால், அவர்களின் கொள்கைகள் என்ன? அதைப் பற்றி நாம் பார்க்க வேண்டும்.
மவுனம்
அனைத்து பின்னணியில் இருந்தும் வரும் ஒரு இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றே அவர்கள் விரும்பினர். இங்குப் பல மோசமான சம்பவங்கள் இப்போது நடக்கின்றன.. இதில் மேலும் சோகமான விஷயம் என்னவென்றால் பல அறிவார்ந்தவர்கள் இதைக் கண்டு அமைதியாக இருக்கிறார்கள். மௌனம் ஒரு அற்புதமான நற்பண்பு தான். ஆனால் நீங்கள் செல்வாக்கு மிக்க நபராக இருக்கும்போது அப்படி இருக்கக் கூடாது" என்றார்.