ராமர் கோவில்.. அயோத்தியில் ஜெய் ஸ்ரீ ராமுக்கு பதில் ஜெய் சியா ராம் என முழங்கிய மோடி.. காரணம் என்ன?
டெல்லி: நேற்று ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டிய பின் பேசிய பிரதமர் மோடி, ஜெய் ஸ்ரீ ராம் என்பதற்கு பதிலாக ஜெய் சியா ராம் என்று குறிப்பிட்டார். இது தொடர்பாக தற்போது இந்து துறவிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
நேற்று இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் பிரதமர் மோடி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினர். உலகின் மூன்றாவது பெரிய இந்து கோவிலாக இது அமைய உள்ளது. இதற்கான பூஜையோடு நேற்று அடைக்கல நாட்டும் விழா நடந்தது.
பிரதமர் மோடி வெள்ளி செங்கல்லை எடுத்து வைத்து பூஜை செய்து பின் அடிக்கல் நாட்டினார். அதோடு குழந்தை ராமரின் சிலையும் கோவிலில் வைக்கப்பட்டது.
மோடியை பேசினார்
நேற்று ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டிய பின் பேசிய பிரதமர் மோடி, ஜெய் ஸ்ரீ ராம் என்பதற்கு பதிலாக ஜெய் சியா ராம் என்று குறிப்பிட்டார். பிரதமர் மோடி தனது பேச்சில், நாம் எல்லோரும் ராமரையும் மாதா ஜானகியையும் நினைவு கூறவேண்டும். எல்லோரும் சேர்ந்து கூறவோம், ஜெய் சியா ராம், என்று தனது பேச்சில் குறிப்பிட்டார். அவர் இப்படி வித்தியாசமாக குறிப்பிட்டது குறித்து நேற்று இணையத்தில் பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர்.
முழக்கம்
ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக அயோத்தி பிரச்சனை தொடங்கிய 1984ம் ஆண்டில் இருந்தே ஜெய் ஸ்ரீ ராம்என்ற கோஷம்தான் மக்கள் மத்தியில் பிரபலம். இந்து அமைப்புகள் எல்லாமே இந்த ஜெய் ஸ்ரீ ராம் கோஷத்தை மட்டுமே பயன்படுத்தி வருகிறது . அதிலும் தற்போது கடந்த 6 வருடங்களாக ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில் பிரதமர் மோடி ஜெய் சியா ராம் என்று குறிப்பட்டு உள்ளார்.
அர்த்தம் என்ன
பிரதமர் மோடியின் ஜெய் சியா ராம் முழக்கத்தின் அர்த்தம் என்ன, காரணம் என்ன என்று விவரங்கள் வெளியாகி உள்ளது. இந்து மத துறவிகளின் கூற்றுப்படி, ஜெய் சியா ராம் என்பது சாந்தத்திற்கான முழக்கம் . ஜெய் ஸ்ரீ ராம் எப்படி அதிரடியான, ஒரு போர் முழக்கம் போல இருக்கிறதோ அதற்கு எதிர் மாறானது ஜெய் சியா ராம். ஜெய் சியா ராம் என்பது சகோதரத்துவம், காதல், அன்பை உணர்த்தும் கோஷம் என்கிறார்கள்.
அன்பு முக்கியம்
ஜெய் ஸ்ரீ ராம் என்பது மிகவும் வலுவான ஒரு கோஷம். சண்டை, வீரம் ஆகியவற்றை பறைசாற்றும் விதமாக இந்த கோஷம் எழுப்பப்படும். அதேபோல் ஜெய் ஸ்ரீ ராம் என்பதில் சீதையின் பெயர் இல்லை. ஆனால் ஜெய் சியா ராம் என்பது சீதையையும் போற்றும் குணம் கொண்டது. அவரையும் போற்றும் வகையில் ஜெய் சியா ராம் உருவாக்கப்பட்டது.
சீதை பெயர்
ஜெய் சியா ராம் என்பது அன்பை, குறிக்கும், ஜெய் ஸ்ரீ ராம் என்பது அச்சமற்ற தைரியத்தை குறிக்கும், இதனால்தான் பிரதமர் மோடி இந்த கோஷத்தை பயன்படுத்தினார் என்று கூறுகிறார்கள். அதாவது அயோத்தி பிரச்சனை சுமுகமாக முடிந்துள்ளது. இந்தியா வளர இனி சகோதரத்துவம், அன்பு முக்கியம். அதை குறிப்பால் உணர்த்தும் விதமாகவே பிரதமர் மோடி, இப்படி ஜெய் சியா ராம் என்று குறிப்பிட்டுள்ளார் என்கிறார்கள்.
Recommended Video
கருத்து என்ன
இன்னொரு பக்கம் ஜெய் ஸ்ரீ ராம் கோஷத்தை ஆதரிக்கும் இந்துக்கள், இரண்டுமே ராமரை புகழும் கோஷம்தான் என்று கூறியுள்ளனர். இரண்டு கோஷத்திற்கும் வேறுபாடு இல்லை. ஜெய் ஸ்ரீ ராமில் இருக்கும் ஸ்ரீ என்பதே சீதையை குறிக்கும் சொல்தான். அதனால் இரண்டுக்கும் வேறுபாடு இல்லை. இதை எப்படி வேண்டுமானாலும் உச்சரிக்கலாம். ராமரை நினைவு கூறுகிறோமா என்பதே முக்கியம், என்று குறிப்பிட்டுள்ளனர்.