137 நாட்களுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. இன்னும் எவ்வளவு உயர்த்தப்பட வாய்ப்பு இருக்கிறது?
டெல்லி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை சுமார் 137 நாட்களுக்குப் பின்னர் முதல்முறையாக மீண்டும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் நாட்டில் போர் தொடங்கிய பின்னர் கச்சா எண்ணெய் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சர்வதேச சந்தையில் 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 120 டாலரை நெருங்குகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்த்தப்பட்ட போதிலும், இந்தியாவில் பெட்ரோல்- டீசல் விலை கடந்த 4 மாதங்களாகவே உயர்த்தப்படவில்லை. இந்தியாவில் கடந்த ஆண்டு நவம்பர் 4 (தீபாவளி அன்று) பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி குறைக்கப்பட்டது.

பெட்ரோல் விலை
அதன் பிறகு பல வாரங்களாக இந்தியாவில் வரை பெட்ரோல், டீசவ் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் 137 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல் டீசல் விலை இன்று உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல் டீசல் விலை 76 காசுகள் உயர்ந்து, முறையே ரூ 102.16 மற்றும் ரூ 92.19க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், சுமார் 4 மாதங்களுக்குப் பின்னர், பெட்ரோல்- டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தை
சர்வதேச சந்தையில் இப்போது ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் $118.5க்கு விற்பனை செய்யப்படுகிறது இது OMC கடைசியாக எரிபொருள் விலையைத் திருத்தியபோது விற்பனை செய்யப்பட்ட $81.6 டாலரை விட 45 சதவீதம் அதிகமாகும். இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்தை இறக்குமதி செய்யும் நிலையில், கச்சா எண்ணெய் விலையேற்றம் கடும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்தச் சூழலில் தான் பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது,

37 டாலர்
சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை ஒரு டாலர் உயரும் போது, பெட்ரோல் மற்றும் டீசல் விலை சுமார் ரூ.0.52 உயர்த்தப்பட வேண்டும். கடந்த முறையை உடன் ஒப்பிடும் போது கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் கிட்டத்தட்ட $37 அதிகரித்துள்ளதால், நஷ்டங்களைச் சமாளிக்கக் குறைந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையையும் லிட்டருக்கு ரூ.19 உயர்த்த வேண்டியிருக்கும். இருப்பினும், கச்சா எண்ணெய் விலையுடன் ஒப்பிடும் பெட்ரோல் டீசல் மதிப்பு அதிகம் என்பதால் சுத்திகரிப்பாளர்களால் விலை வித்தியாசத்தைச் சற்று அதிகமாகவே சமாளிக்க முடியும்.

கொரோனாவுக்கு முந்தைய காலம்
கச்சா எண்ணெய் விலை உயர்வால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்க, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரிகளையும் மத்திய அரசு குறைக்கலாம் என்று சில ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். கொரோனாவுக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடுகையில் பெட்ரோல் மீதான மத்திய கலால் வரி இன்னும் 8 ரூபாய் அதிகமாக உள்ளது, அதே நேரத்தில் டீசல் மீதான கலால் வரி 6 ரூபாய் அதிகமாக உள்ளது.

ஒட்டுமொத்த விற்பனை
அதேபோல சில்லறை விற்பனை உடன் ஒப்பிடுகையில் ஒட்டுமொத்த விற்பனையில் டீசலின் விலை லிட்டருக்கு ரூ.25 அதிகமாக உள்ளது. எனவே இந்திய ரயில்வே, தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள் என டீசலை மொத்தமாக வாங்குபவர்கள் சில்லறை நுகர்வோரை விடக் கணிசமாக அதிக விலையைக் கொடுக்க வேண்டி உள்ளது. தொழில்துறையினராலும், மொபைல் டவர்களும் தான் முதன்மையாக டீசல் பயன்படுத்தப்படுகிறது. டீசல் விலை உயர்வு காரணமாக பவர் பேக்அப்பிற்கு ஆகும் செலவும் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications