ராகுல் குடியுரிமையை ஏன் பறிக்கல? சு.சாமிக்கு வந்ததே கோபம்.. பிரதமர் மோடிக்கு கேள்வி.. என்னாச்சு?
ராகுல் காந்தி பிரிட்டன் குடியுரிமை பெற்றதாக எழுந்த புகார் தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி புகாரில் உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
டெல்லி: இந்திய ஜனநாயகம் குறித்து லண்டனில் பேசி விவாதத்தை கிளப்பி உள்ள ராகுல் காந்தி பற்றி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளதோடு, பிரதமர் மோடியை விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி சுப்பிரமணியன் சுவாமி, பழைய விஷயங்களை குறிப்பிட்டு மோடி அரசு ஏன் ராகுல் காந்தியின் குடியுரிமையை பறிக்கவில்லை? என கேள்வி எழுப்பி விமர்சனம் செய்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய எம்பியுமான ராகுல் காந்தி லண்டன் சென்றார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அவர் மாணவர்கள் மத்தியில் பேசினார். அங்கு ராகுல் காந்தி பேசியது விவாதத்தை கிளப்பி உள்ளது.
அதாவது இந்தியாவில் ஜனநாயக அமைப்பு முற்றிலும் சிதைந்து கிடக்கிறது. இந்திய ஜனநாயகம் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது என மத்திய பாஜக அரசை அவர் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

முடங்கிய சபை
இதற்கிடையே தான் கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்றத்தின் 2வது அமர்வு கூட்டம் தொடங்கியது. கூட்டம் தொடங்கியது முதல் ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என தொடர்ந்து மத்திய அமைச்சர்கள், பாஜக எம்பிக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்தியாவின் மரியாதை, கவுரவத்தை ராகுல்காந்தி சிதைத்துவிட்டார். சபாநாயகர் இந்த விவகாரத்தில் தலையிட்டு உறுப்பினர் ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ராகுல்காந்தி சபையில் மன்னிப்பு கேட்க உத்தரவிட வேண்டும் என்றனர்.

நாளை வரை ஒத்திவைப்பு
இதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ராகுல் காந்தி எக்காரணம் கொண்டும் மன்னிப்பு கோரமாட்டார் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இதனால் இருசபைகளிலும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு நாடாளுமன்ற இருசபைகளும் இன்று 4வது நாடாக முடங்கி உள்ளது. இன்று காலையில் நாடாளுமன்ற இருசபைகளும் துவங்கிய நிலையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் மதியம் 2 மணி வரை இருசபைகளும் ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு 2 மணிக்கு சபைகள் தொடங்கியும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து நாளை வரை இருசபைகளும் ஒத்திவைக்கப்பட்டது.

ராகுலிடம் கேள்வி
இதற்கிடையே லண்டனில் இருந்து இந்தியா திரும்பிய ராகுல் காந்தி இன்று நாடாளுமன்றத்துக்கு வந்தார். அப்போது லண்டன் பேச்சு தொடர்பாக பாஜகவினர் மன்னிப்பு கோர வேண்டும் என கூறுகின்றனரே? என ராகுல் காந்தியிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ராகுல் காந்தி, ‛‛இந்தியாவுக்கு எதிராக நான் எதையும் பேசவில்லை. என்னை அனுமதித்தால் அதுபற்றி நாடாளுமன்றத்திலேயே விளக்கம் அளிப்பேன். அப்போது நான் நினைப்பதை கூறுவேன். '' என்றார்.

சுப்பிரமணியன் சுவாமி கேள்வி
இந்நிலையில் பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி விவகாரம் குறித்து கேள்வி எழுப்பி உள்ளார். இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛இந்திய குடியுரிமையை பறிக்கும் வகையில் பிரிட்டிஷ் குடியுரிமையை பெற்று மிகப்பெரிய அரசியல் சாசன குற்றத்தைச் ராகுல் காந்தி செய்துள்ளார். இதனால் அவர் நாடாளுமன்றத்தில் நாடகம் ஆடுவது என்பது வேடிக்கையானது. அவருக்கு உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி உள்ள நிலையில் மோடி அரசு ஏன் குடியுரிமையை பறிக்கவில்லை?'' என கேள்வி எழுப்பி உள்ளார்.

முன்பு நடந்தது என்ன?
அதாவது சில ஆண்டுகளுக்கு முன்பு ராகுல் காந்திக்கு பிரிட்டன் குடியுரிமை இருப்பதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக 2015ல் சுப்பிரமணியன் சாமி அளித்த புகாரில் ராகுல் காந்திக்கு பிரிட்டனில் குடியுரிமை இருக்கிறதா என்ற கேள்வியுடன் விளக்கம் கேட்டு இருந்தது. இந்நிலையில் தான் தற்போது சுப்பிரமணியன் சுவாமி பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications