அமமுகவிற்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
Recommended Video
டெல்லி: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் இன்று உத்தரவை பிறப்பித்தது.
இரட்டை இலைச் சின்னம் தங்களுக்குத்தான் சொந்தம் என்று சசிகலா, டிடிவி தினகரன் தரப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், இரட்டை இலை சின்னம் ஓ.பன்னீர்செல்வம் அணிக்குத்தான் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில், தினகரன் தரப்பினர் மேல்முறையீடு செய்துள்ளனர். அதில் வழக்கு விசாரணை முடிவடைந்து, தீர்ப்பு வெளியாவதற்கு முன்பாகவே இடைக்கால சின்னமாக தங்கள் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தனது பதில் மனுவை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி இதுவரை பதிவு செய்யப்படாத கட்சி என்பதால் அதற்கு பொது சின்னம் வழங்க முடியாது, என்று தேர்தல் ஆணையம் 300 பக்கங்கள் அடங்கிய, பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.
இந்த நிலையில் வேட்பு மனு தாக்கல், இன்றுடன் நிறைவடைய உள்ளதால், புதன்கிழமை வழக்கை விசாரிக்க வேண்டும் என்று தினகரன் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இதையடுத்து இன்று காலை 10.30 மணிக்கு வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
நீங்கள் குக்கர் சின்னமும் கேட்கிறீர்கள், இரட்டை இலை சின்னமும் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளீர்கள் என்று நீதிபதிகள் கேட்டனர். அதற்கு, குக்கர் இல்லாவிட்டால் ஏதாவது ஒரு பொதுச் சின்னத்தையாவது வழங்குங்கள் என்று தினகரன் தரப்பில் கோரப்பட்டது. இன்றே அமமுகவை நாங்கள் பதிவு செய்ய தயார் என்றும் கூறினர்.
இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், இன்றே அமமுக கட்சியை பதிவு செய்தாலும், குக்கர் அல்லது பொதுச் சின்னத்தை ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், குக்கர் சின்னத்தை ஒதுக்கி சுப்ரீம்கோர்ட் உத்தரவிட முடியாது. ஆனால், பொதுவான ஒரு சின்னத்தை அமமுகவிற்கு ஒதுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கலாம் என்று தேர்தல் ஆணையத்திற்கு, உச்சநீதிமன்றம் தெரிவித்தது.