"உங்களுக்கு 24 மணி நேரம் தான் டைம்!" தேச துரோக வழக்கில்.. மத்திய அரசிடம் கடுகடுத்த உச்ச நீதிமன்றம்
டெல்லி: தேச துரோக சட்டங்கள் தொடர்பான வழக்கில், மத்திய அரசை நோக்கி உச்ச நீதிமன்றம் சில காட்டமான கேள்விகளை எழுப்பி உள்ளது.
ஆங்கிலேய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தேச துரோக சட்டம், இப்போது இந்தியாவில் தேவையில்லை என்பது சமூக ஆர்வலர்களின் வாதமாக உள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன.
“ஹிட்லர் கதி இதுதான்” - அதற்கு 6 ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன பெரியார்.. என்ன ஒரு தீர்க்க தரிசனம்!!
கடந்த இரு நாட்களுக்கு முன்பு இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது, தேச துரோக சட்டம் நாட்டில் தொடர வேண்டும் என்று வாதிட்ட மத்திய அரசு, இதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது.
மத்திய அரசு
இதனிடையே வெறும் இரண்டு நாட்களில் மத்திய அரசு இந்த விவகாரத்தில் யூ-டர்ன் அடித்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, அதாவது இந்தச் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. தேச துரோக சட்ட விதிகள் குறித்து பிரதமர் மோடி முக்கிய கருத்துகளைக் கொண்டிருக்கிறார் என்று தெரிவித்த மத்திய அரசு வழக்கறிஞர், சிவில் உரிமைகளைப் பாதுகாக்க என்றும் அவர் தயங்குவதில்லை என்றும் இது தொடர்பாக உரியக் குழு அமைக்கப்பட்டு சட்டம் மறுபரீசிலனை செய்யப்படும் என்றும் தெரிவித்தனர்.
எவ்வளவு காலம்
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தேச துரோக சட்டத்தை மறுபரிசீலனை செய்யும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார். இதற்குத் தலைமை நீதிபதி என்வி ரமணா தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, "தேச துரோக சட்டத்தை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசு எவ்வளவு காலம் எடுக்கும்" என்று பெஞ்ச் கேள்வி எழுப்பியது.
சொலிசிட்டர் ஜெனரல்
இதற்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பதில் அளிக்கையில், "இதற்குக் குறிப்பிட்ட காலகட்டத்தைக் கூறுவது கடினம். ஆனால் இதற்கான செயல்முறை தொடங்கிவிட்டது. பிரமாணப் பத்திரத்தின் காலவரையறையை நீங்கள் பார்க்க வேண்டும். இது துறை ரீதியான பதில் மட்டுமில்லை. நிலைபாட்டிலேயே மாற்றம் உள்ளதை நீங்கள் பார்க்க முடியும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள தேச துரோக வழக்குகள் குறித்த தனது நிலைப்பாட்டை நாளை காலைக்குள் தெளிவுபடுத்துமாறு மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
கபில் சிபல்
இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், "சட்டத்தை மாற்றுவது அவர்களின் உரிமை. ஆனால் நாங்கள் தற்போது அமலில் இருக்கும் சட்டத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்து உள்ளோம். இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இந்த நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும். எனது பரிந்துரை என்னவென்றால், அவர்கள் சட்டத்தை மாற்றினாலும், இந்த விவகாரத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவை அனைத்தும் தற்போதைய சட்டத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும்" என்றார்.
நாடு & அரசு
இதையடுத்து கபில் சிபில் பேசுகையில், "இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு" என்று பிரிவு 124A எங்குக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த சொற்றொடர் 19(2) இல் மட்டுமே உள்ளது. இந்தச் சட்டப்பிரிவு 124A என்பது அரசின் மீதான அதிருப்தி பற்றியது. இந்தச் சட்டப்பிரிவு 124 என்பது அரசியலமைப்பிற்கு முந்தைய சட்டமாகும், அந்த காலகட்டத்தில் அரசும் நாடும் ஒன்று தான். ஆனால், இப்போது இருக்கும் அரசியலமைப்பின் கீழ், அவை வேறு வேறானது" என்று அவர் கூறினார்.
இரண்டு விவகாரங்கள்
இதற்கு மத்திய அரசின் பிரமாணப் பத்திரத்தை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி ரமணா, "காலனித்துவ பண்புகளை அகற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்த விவகாரத்தை அவர்கள் சீரியஸாக எடுத்துக் கொண்டு உள்ளார்கள் என்று கருதுகிறோம். இந்த வழக்கை நாங்கள் முடிக்கவில்லை. சில கவலைகள் இருக்கவே செய்கிறது. ஒன்று நிலுவையில் உள்ள வழக்குகள். மற்றொன்று சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. இவற்றை நாம் எப்படிப் பாதுகாக்கப் போகிறோம் என்பது தான் எங்கள் முன் இருக்கும் கவலை" என்றார்.
மாநில அரசுகள்
அப்போது சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "மாநில அரசுகள் தான் வழக்குகளைப் பதிவு செய்கின்றன. இதற்கு மத்திய அரசால் எதையும் செய்ய முடியாது. சட்டப் பிரிவு 124A நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதாகும். இது தவறாகப் பயன்படுத்தப்படும் போதெல்லாம் நீதிமன்றங்களில் தீர்வுகள் உள்ளன" என்றார். இதற்குக் குறுக்கிட்ட தலைமை நீதிபதி, "அனைத்து மக்களாலும் நீதிமன்றத்திற்குச் செல்ல முடியாது. அதுவும் அரசே அவர்களுக்கு எதிராகச் செயல்படும்போது, அவர்கள் சிறையில் இருக்க நேரிடும்" என்றார்.
கால அவகாசம்
மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, அரசிடம் இருந்து கருத்துகளைப் பெற்று, நாளை புதன்கிழமை பெஞ்ச் முன் விளக்குவதாகத் தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள், "நாங்கள் மிகத் தெளிவாகச் சொல்கிறோம். இந்த விவகாரத்தில் தெளிவான அறிவுறுத்தல் வேண்டும். நாளை வரை அவகாசம் தருகிறோம். நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் எதிர்கால வழக்குகளை அரசு எப்படி எடுத்துக்கொள்ளும் என்பதில் தெளிவான பதில் தேவை" என்றார்.