"நீதி கிடைக்கும் வரை துணை நிற்பேன்.." டெல்லியில் தலித் சிறுமி படுகொலை.. பெற்றோருக்கு ராகுல் ஆறுதல்
டெல்லி: டெல்லியில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட 9 வயது சிறுமியின் பெற்றோரை ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை துணை நிற்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.
டெல்லி நங்கல் பகுதியைச் சேர்ந்த 9 வயது தலித் சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள மயானத்திற்கு கூலரில் இருந்து தண்ணீர் பிடிக்கச் சென்றுள்ளார்.
ஆனால், அதன் பிறகு நீண்ட நேரம் ஆகியும் அந்தச் சிறுமி வீடு திரும்பவில்லை.
ராகுலின் பிரேக் ஃபாஸ்ட் மீட்டிங்கும்.. ஒன்று திரளும் எதிர்க்கட்சிகளும்.. திகுதிகு டெல்லி
டெல்லி சிறுமி
அப்போது சுமார் 6 மணியளவில் அச்சிறுமியின் தாயை மயானத்தின் பூசாரி ராதேஷ்யம் என்பவர் அழைத்துள்ளார். எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து அச்சிறுமி உயிரிழந்துவிட்டதாகத் தாயிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அச்சிறுமியின் தயார் உடனடியாக போலீசாருக்கும் ஆம்புலன்ஸுக்கும் கால் செய்யும்படி கூறியுள்ளார். இருப்பினும், அவர்கள் அதற்கு மறுத்ததாக அச்சிறுமியின் தாய் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மிரட்டிய பூசாரி
அந்த பூசாரி சிறுமியின் தாயிடம், "இது குறித்து போலீசாரிடம் தெரிவிக்க வேண்டாம். ஏனென்றால், போலீசாருக்கு சொன்னால், அவர்கள் உடகூராய்வு செய்ய வேண்டும் எனச் சிறுமியின் உடலை எடுத்துக் கொண்டு போய்விடுவார்கள். சிறுமியின் உடல் உறுப்புகளைத் திருடிவிடிவார்கள். அமைதியாக வீட்டுக்குச் சென்று படுத்துத் தூங்கு. இது குறித்து யாரிடமும் சொல்லாதா. அழுது ஆர்பட்டாம் செய்யாமல் அமைதியாக இருந்தால் எல்லாரும் நல்லது" என மிரட்டும் வகையில் பேசியுள்ளார்,
3 பேர் கைது
மேலும், பெற்றோரின் முழு சம்மதமில்லாமல் அவசர அவசரமாக அச்சிறுமியின் உடலை எரியூட்டியுள்ளனர். தங்கள் மகள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக அச்சிறுமியின் பெற்றோர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இது தொடர்பாக அவரது உறவினர்கள் சாலை மறியால் போராட்டம் நடத்திய பிறகே, போக்சோ சட்டம், எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாகப் பூசாரி மற்றும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராகுல் காந்தி ஆறுதல்
தலைநகர் டெல்லியிலேயே 9 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு பல்வேறு தலைவர்களும் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் உயிரிழந்த அச்சிறுமியின் பெற்றோரை இன்று நேரில் சந்தித்த ராகுல் காந்தி, அவர்களுக்கு ஆறுதல் கூறினார். இந்த வீடியோ ட்விட்டரில் வெளியாகியுள்ளது. ராகுல் காந்தியிடம் பேசிக் கொண்டு இருந்த போதேல அச்சிறுமியின் தந்தை கதறி அழத் தொடங்குகிறார். உடனடியாக அவரை அரவணைத்துக் கொண்ட ராகுல், அவருக்கு ஆறுதல் கூறுகிறார்.
துணை நிற்பேன்
இது குறித்து ராகுல் காந்தி கூறுகையில், "நான் அச்சிறுமியின் குடும்பத்தினருடன் பேசினேன். அவர்கள் நீதி வேண்டும், வேறு எதையும் அவர்கள் கேட்கவில்லை. தங்களுக்கான நீதி மறுக்கப்படுவதாகவும் உதவி தேவை என்றும் அவர்கள் கூறுகின்றனர். நாங்கள் அவர்களுக்கு உதவுவோம். நீதி கிடைக்கும் வரை அவர்களுக்கு துணையாக நான் இருப்பேன்" என்று அவர் தெரிவித்தார்.
நாட்டின் மகளுக்கு நீதி வேண்டும்
மேலும், இந்தச் சம்பவம் குறித்து ராகுல் காந்தி சில ட்வீட்களையும் பதிவிட்டுள்ளார். ஒரு ட்வீட்டில் இந்த சம்பவம் தொடர்பான செய்தியைப் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, ஒரு தலித்தின் மகளும் இந்த நாட்டின் மகள் தான். அவருக்கான நீதி வழங்கப்பட வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார். ராகுல் காந்தி மட்டுமின்றி பல்வேறு தலைவர்களும் இந்தச் சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அரவிந்த் கெஜ்ரிவால்
இந்தச் சம்பவம் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டரில், "டெல்லியில் ஒன்பது வயது அப்பாவி சிறுமி, வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மிகவும் வெட்கக்கேடானது. சட்டம் ஒழுங்கு நிலைமையை மேம்படுத்த வேண்டிய அவசியத்தை இது உணர்த்துகிறது. இதில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு விரைவாகத் தண்டனை வழங்க வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.