செம ஷாக்.. மூன்றில் ஒரு கொரோனா உயிரிழப்பு இந்த ஐந்து நாடுகளில்.. மோசமான பட்டியலில் இந்தியா
டெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களில் மூன்றில் ஒருவர் பிரேசில், இந்தியா, ரஷ்யா, இத்தாலி, அமெரிக்கா ஆகிய ஐந்து நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளிலும் கொரோனாவின் தீவிரம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாகப் பல நாடுகளும் புதிய வைரஸ் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன.
இருப்பினும், வைரஸ் பரவல் கட்டுக்குள் வரவில்லை. ஒருபுறம் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வந்தாலும்கூட வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
இந்தியாவில் என்ன நிலை
இந்தியாவில் வைரஸ் பாதிப்பு கடந்த 10 நாட்களாகவே தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 1,69,914 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஒட்டுமொத்த வைரஸ் பாதிப்பு 1.35 கோடியைக் கடந்துள்ளது. நேற்று மட்டும் 904 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில், கொரோனா உயிரிழப்பும் 1.70 லட்சத்தைத் தொட்டுள்ளது.
துருக்கி
இந்தியாவுக்கு அடுத்தபடியாக தினசரி கொரோனா பாதிப்பு மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான துருக்கியில் அதிகமாக உள்ளது. இங்கு ஒரே நாளில் 54,562 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை துருக்கி நாட்டில் 39,03,573 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 243 பேர் கொரோனாவால் பலியாகியுள்ள நிலையில் உயிரிழப்பும் 34 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. கடந்த சில தினங்களாகவே துருக்கியில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நாடுகளில் மோசம்
அதைத்தொடர்ந்து அமெரிக்காவில் 52,049 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு கொரோனா பாதிப்பு 3.19 கோடியை கடந்துள்ளது. அதேபோல பிரேசில் நாட்டில் 38,866 பேருக்கும் ஈரான் நாட்டில் 23,311 பேருக்கும் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டில் இதுவரை 1,35,21,409 பேரும் ஈரான் நாட்டில் 20,93,452 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா உயிரிழப்புகள்
கொரோனா உயிரிழப்புகளும் கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக நேற்று மட்டும் பிரேசில் நாட்டில் 1,738 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதைத்தொடர்ந்து இந்தியாவில் 880 பேரும் ரஷ்யாவில் 337 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும், இத்தாலியில் 331 பேரும் அமெரிக்காவில் 285 பேரும் கொரோனால் பலியாகியுள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களில் மூன்றில் ஒருவர் இந்த ஐந்து நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Recommended Video
கொரோனா பாதிப்பு
உலகெங்கும் கடந்த 24 மணி நேரத்தில் 5,80,065 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் வைரஸ் பாதிப்பு 13,72,38,929 அதிகரித்துள்ளது. கொரோனா உயிரிழப்பும் கடந்த சில தினங்களாகவே அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 8,659 பேர் உயிரிழந்த நிலையில், கொரோனா உயிரிழப்பும் 2,958,139 ஆக அதிகரித்துள்ளது.