Year Ender 2025: சுக்கிரன் உச்சத்துல இருக்குங்க.. பாஜகவை டாப்பில் உட்கார வைத்த 2025! காங்கிரஸுக்கு கொஞ்சம் ஆறுதல்!
டெல்லி: 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்கள், இந்திய அரசியலில் பல முக்கிய மாற்றங்களை உருவாக்கிய ஆண்டாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இரண்டு முக்கிய சட்டப்பேரவைத் தேர்தல்கள், பல மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்கள், உள்ளாட்சித் தேர்தல்கள் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் ஆகியவை இந்த ஆண்டை அரசியல் ரீதியாக மிகவும் பரபரப்பான ஆண்டாக மாற்றின. இந்தத் தேர்தல் முடிவுகளில் மிகப்பெரிய லாபம் அடைந்தது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியே என்பதில் ஐயமில்லை.
ஏற்கனவே 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்திருந்த பாஜக, 2025 ஆம் ஆண்டில் நாட்டின் தலைநகரான தில்லியை 27 ஆண்டுகளுக்குப் பிறகு கைப்பற்றியதன் மூலம் அரசியல் ரீதியாக மிகப்பெரிய சாதனையைப் பதிவு செய்தது.
2015 மற்றும் 2020 ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி, இந்த முறை கடும் பின்னடைவை சந்தித்தது அரசியல் பார்வையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்திய அரசியல்
70 உறுப்பினர்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றியது. குறிப்பாக, சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் வடகிழக்கு தில்லி பகுதிகளில் உள்ள பெரும்பாலான தொகுதிகளை பாஜக வென்றது, அந்தக் கட்சியின் தேர்தல் வியூக வெற்றியை வெளிப்படுத்தியது. அதே நேரத்தில், ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
டெல்லி தேர்தல்
மூன்றாவது முறையாக முதல்வராக வருவேன் என்று நம்பிக்கை தெரிவித்த அரவிந்த் கேஜரிவால், புதுதில்லி தொகுதியில் தோல்வியடைந்தது கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. மணீஷ் சிசோடியா உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் தோல்வியும் ஆம் ஆத்மி கட்சிக்கு கடும் பின்னடைவாக அமைந்தது.தில்லியில் நீண்ட காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஒரு இடத்தையும் பெற முடியாமல் தோல்வியைச் சந்தித்தது.
ஆம் ஆத்மி தோல்வி
இருப்பினும், கடந்த தேர்தலை விட சுமார் 2 சதவீதம் வாக்கு சதவீதம் உயர்ந்தது, அந்தக் கட்சிக்கு ஒருவகை ஆறுதலாகப் பார்க்கப்படுகிறது. அதே சமயம், பாஜகவின் வாக்கு சதவீதம் உயர்ந்ததும், ஆம் ஆத்மியின் வாக்குகள் கணிசமாக குறைந்ததும் தேர்தல் முடிவுகளில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தின.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தல்
தில்லி தேர்தலைத் தொடர்ந்து, பிகார் சட்டப்பேரவைத் தேர்தலும் 2025 அரசியலின் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. இந்தியா கூட்டணியில் இருந்து விலகி பாஜகவுடன் இணைந்த நிதீஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, பிகாரில் மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. 243 தொகுதிகளில் 202 இடங்களில் வெற்றி பெற்று, பத்தாவது முறையாக நிதீஷ் குமார் முதல்வராகப் பொறுப்பேற்றார். இதற்கு மாறாக, ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் தோல்வியைச் சந்தித்தன.
ஜன் சுராஜ் கட்சி
பிகார் தேர்தலில் 67 சதவீதம் வாக்குப் பதிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்குப் பிறகு நடைபெற்ற முதல் தேர்தல் என்பதால், தேர்தல் நடைமுறைகளும் அரசியல் ரீதியாக அதிக கவனத்தைப் பெற்றன. பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி ஒரு இடம் கூட பெற முடியாதது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது.
கேரள உள்ளாட்சி தேர்தல்
இதற்கு மாறாக, கேரளத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்கள் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளித்தன. நீண்ட காலமாக இடதுசாரிகள் ஆதிக்கம் செலுத்தி வந்த கேரளத்தில், காங்கிரஸ் கூட்டணி பெரும்பாலான மாநகராட்சிகளை கைப்பற்றியது. இது 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக அரசியல் சூழலை மாற்றக்கூடிய அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், பாஜக கூட்டணியும் கேரளத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நகர்ப்புறங்களில் முன்னேற்றம் கண்டது.
துணை குடியரசுத் தலைவர்
2025 ஆம் ஆண்டின் அரசியல் நிகழ்வுகளில் மற்றொரு முக்கிய சம்பவமாக குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் அமைந்தது. பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றது, தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது. எதிர்க்கட்சிகளின் சில வாக்குகளும் அவருக்கு கிடைத்ததாக பேசப்பட்டதும், அரசியல் வட்டாரங்களில் விவாதமாக மாறியது. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, 2025 தேர்தல்கள் பாஜகவின் தேசிய அரசியல் ஆதிக்கத்தை மேலும் உறுதி செய்த ஆண்டாகவும், காங்கிரஸுக்கு சில மாநிலங்களில் ஆறுதல் தரும் அறிகுறிகளை காட்டிய ஆண்டாகவும் அமைந்துள்ளன.












Click it and Unblock the Notifications