நட்டா வீட்டில் நடந்த மீட்டிங்.. அடுத்தடுத்து வந்த தலைகள்.. உ.பி இடைத்தேர்தல் பற்றி முக்கிய ஆலோசனை!
டெல்லி: உத்தர பிரதேசத்தில் 10 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் டிசம்பரில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்று (அக்டோபர் 13) டெல்லியில் உள்ள பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா வீட்டில் பாஜகவின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமித் ஷா, யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு விரைவில் இடைத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. டிசம்பரில் 10 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், வரும் நவம்பரில் இந்திய தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் 10 தொகுதிகளில் தேர்தல் ஏற்பாடுகள், வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்டவை குறித்து பாஜக இன்று இரவு முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளது. டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவின் வீட்டில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மௌரியா, பிரஜேஷ் பதக், பாஜகவின் பொதுச் செயலாளர் தரம்பால் சிங், உ.பி மாநில பாஜக தலைவர் பூபேந்திர சௌத்ரி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 10 தொகுதிகளில் 9 தொகுதிகளுக்கு 27 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை கட்சி தயார் செய்துள்ளது. இடைத்தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகளுக்கு இறுதி வேட்பாளர்கள் பட்டியல் இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
பாஜகவின் கூட்டணிக் கட்சியான ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சி மீராபூர், கையர் ஆகிய தொகுதிகளைக் கேட்டுள்ள நிலையில், மீராபூர் தொகுதி ஒதுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. மற்றொரு கூட்டணிக் கட்சியான நிஷாத் கட்சி, கத்தாரி மற்றும் மஜ்வான் ஆகிய இரு தொகுதிகளைக் கோரி உள்ள நிலையில் அக்கட்சிக்கு மஜ்வா தொகுதி ஒதுக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
உத்தர பிரதேச மாநில இடைத்தேர்தல் பாஜகவுக்கு மிக முக்கியமானது. உத்தர பிரதேசத்தில் மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்பதில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 80 இடங்களில் பாஜகவால் 33 சீட்களில் மட்டுமே வெல்ல முடிந்தது.
நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் தங்கள் வலிமையை நிரூபிக்க பாஜக கங்கணம் கட்டியுள்ளது. சமாஜ்வாடி கட்சி ஏற்கனவே பத்து இடங்களில் 6 இடங்களில் வேட்பாளர்களை அறிவித்து, காங்கிரஸுடன் இணைந்து இடைத்தேர்தலில் போட்டியிடும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications