'உங்களைப் போல எங்களால் இருந்துவிட முடியாது'... ஆக்சிஜன் பற்றாக்குறை வழக்கு.. டெல்லி ஹைகோர்ட் அதிரடி
டெல்லி: தலைநகருக்குத் தேவையான முழு ஆக்சிஜன் கோட்டாவை வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டும், அதைச் செயல்படுத்தத் தவறியதாக மத்திய அரசுக்கு டெல்லி ஹைகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
கொரோனா 2ஆம் அலை காரணமாக டெல்லியிலுள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் நிரம்பியுள்ளன. மேலும், டெல்லியில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் கிடைக்காமல் நோயாளிகள் உயிரிழக்கும் சபம்வங்களும் தொடர்ந்து நடைபெறுகிறது.
இதுவரை சுமார் 40 நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகத் தலைநகரில் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசு டெல்லியுள்ள மருத்துவமனைகளுக்குத் தேவையான அளவு ஆக்சிஜனை அளிக்காமல் இருப்பதே இதற்குக் காரணம் என டெல்லி அரசு தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது.
இந்நிலையில், இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லிக்குத் தேவையான முழு ஆக்சிஜன் கோட்டாவை வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டும், அதைச் செயல்படுத்தத் தவறியதாக மத்திய அரசுக்கு டெல்லி ஹைகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், நீதிபதிகள் கூறுகையில், "இதுவரை நடந்தது எல்லாம் போதும். இனிமேலும் இல்லை என்ற பதிலை நாங்கள் ஒப்புக்கொள்ள மாட்டோம். நீங்கள் டெல்லிக்குத் தேவையான 700 மெட்ரிக் டன் ஆக்சிஜனை உடனடியாக வழங்க மாட்டீர்களா? இது தொடர்பாக வேறு எந்த கதையையும் கேட்க நாங்கள் தாயாராக இல்லை.
இங்கு நிலவும் நிலையைப் பார்த்தும் பார்க்காதது போல நீங்கள் இருக்கலாம். ஆனால் எங்களால் அப்படி இருக்க முடியாது" என்று தெரிவித்த நீதிபதிகள், டெல்லிக்குத் தினசரி வழங்க வேண்டிய 700 மெட்ரிக் டன் ஆக்சிஜனுக்கு பதில் வெறும் 490 டன் மட்டுமே வழங்கப்படுவதாகக் குறிப்பிட்டனர். மேலும், மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையும் எடுக்கப்படும் என எச்சரித்தனர்.