ஷாக்.. ஆன்லைன் ரம்மியில் ரூ.18 லட்சம் இழப்பு.. தர்மபுரியில் 2 குழந்தைகளின் தந்தை தற்கொலை-சோகம்
தர்மபுரி: ஆன்லைன் ரம்மி மற்றும் கேரளா லாட்டரியில் ரூ.18 லட்சம் வரை இழந்த விரக்தியில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பிரபு என்ற இளைஞர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
தற்போதைய காலக்கட்டத்தில் எளிமையாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வகையில் சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என பலரும் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்த விளையாட்டில் வெற்றி பெற்றவர்கள் விரல் விரட்டும் எண்ணும் அளவில் மட்டுமே உள்ள நிலையில் பணத்தை பறிகொடுத்து வாழ்க்கையை இழந்தவர்களின் எண்ணிக்கை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் தான் தற்போது தமிழகத்தில் ஒருவர் ஆன்லைன் விளையாட்டால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சோக சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:
செல்போனில் ஆன்லைன் கேம் விளையாடியதால் திட்டிய தாய்- 9-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை!
ஆன்லைன் ரம்மி ஆடிய பிரபு
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த முத்தானூர் கிராமத்தில் வசித்து வரும் பிரபு. இவர் தனியார் கிரானைட் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர் ஆன்லைன் ரம்மி விளையாடுவதில் ஆர்வம் காட்டி அதற்கு அடிமையாகியுள்ளார். அதிர்ஷ்டம் கைக்கொடுக்கும் என்ற நம்பிக்கையில் ஆன்லைன் ரம்மி விளையாடி வந்தவருக்கு தொடர்ந்து ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இதனால் அவருக்கு பண இழப்பு ஏற்பட்டது.
ரூ.18 லட்சம் இழப்பு
முதலில் ஆயிரக்கணக்கில் பணத்தை இழந்த பிரபு, விட்டதை பிடிக்கும் நோக்கத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தொடர்ந்துள்ளார். இதனால் அவர் ரூ.15 லட்சம் வரை ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கேரளா லாட்டரியை நம்பியும் அவர் ரூ.3 லட்சம் வரை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. மொத்தம் அவர் ரூ.18 லட்சம் வரை இழந்தார்.
தூக்குப்போட்டு தற்கொலை
இதனால் கடனுக்கு ஆளானார். மேலும் அவர் தான் வசித்து வரும் வீட்டை விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
இதையடுத்து வீட்டை வைத்து அவர் முன்பணமாக குறிப்பிட்ட தொகையை வாங்கிய நிலையில் அதனையும் ஆன்லைன் ரம்மியில் இழந்தார். இதனால் செய்வறியது பிரபு மனம் உடைந்துபோனார். இந்நிலையில் அவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடரும் சோகம்
ஆன்லைன் ரம்மியால் தமிழகத்தில் இதுவரை 10க்கும் அதிகமானவர்கள் தற்கொலை செய்துள்ளனர். ஆன்லைன் ரம்மியால் ரூ. 20 லட்சம் வரை இழந்த த கோவை போலீஸ்காரர் காளிமுத்து கடந்த 15-ம் தேதி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபோன்ற தற்கொலை சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ந்து வருவது வேதனையான ஒன்றாக உள்ளது.
தடை விதிக்க கோரிக்கை
இதுபோன்று சமீப காலமாக எளிமையாக பணம் சம்பாதிக்கலாம் என இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை ஆன்லைன் விளையாட்டில் மூழ்கி பணத்தை இழந்து வருகின்றனர். மேலும் விரக்தி அடைந்து தற்கொலையும் செய்து வரும் சம்பவம் என்பது மிகவும் வேதனையான ஒன்றாக உள்ளது. இதனால் தான் ஆன்லைன் ரம்மி விளயைாட்டை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கட்சியினர் தொடர்ந்து கோரிக்கைகள் வைத்து வருகின்றனர்.