தமிழகத்தில் திமுக, அதிமுகதான் களம் காண முடியும்.. வேறு எந்த கட்சிக்கும் இடமில்லை.. திமுக எம்பி
தருமபுரி: தமிழகத்தில் எதிர்க்கட்சி என்றால் அது அதிமுகதான் என்றும் அதை தவிர வேறு எந்த கட்சியும் இல்லை என்றும் தருமபுரி எம்பி செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
தருமபுரி- மொரப்பூர் இடையே அமைய உள்ள ரயில் பாதை பணிக்கான இடத்தை கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ரயில் பாதை அமையவுள்ள ராமக்காள் ஏரி அருகே எம்பி செந்தில்குமார் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியிருப்பதாவது: தருமபுரி - மொரப்பூர் இடையிலான ரயில் பாதை அமைக்கும் பணிக்கான இடம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன. இந்த பணி முழுமையாக முடிந்த பிறகுதான் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கும்.
முழுமூச்சாக எதிர்க்கும் திமுக.. முதல் ஆளாக வரவேற்கும் ஆளுநர்! வெடிக்கும் புதிய கல்வி கொள்கை விவகாரம்
100 க்கும் மேற்பட்ட வீடுகள்
இதில் இரு பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் வழியாக ரயில் பாதை அமைய உள்ளது. இதனால் வீடுகள் பாதிக்காமல் இருக்க மாற்று பாதை அமைக்க ரயில்வே துறை அதிகாரிகளை சந்திக்கவுள்ளேன். திமுகவிற்கு பிரதான எதிர்க்கட்சி என்றால் அது அதிமுகதான். தமிழகத்தில் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகள் மட்டும்தான் இருக்க வேண்டும்.
பாஜக பெரிய கட்சி
தமிழகத்தில் பாஜக பெரிய கட்சியாக வளர வேண்டும் என கருதுகிறது. இதற்காக அதிமுகவின் பலவீனத்தை பயன்படுத்தி ஏற்கெனவே பிளவுப்பட்டுள்ள 3 அணிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது. இந்த இணைப்புக்கு மறுத்தால் தேர்தல் ஆணையத்தை வவைத்து இரட்டை இலை சின்னத்தை பாஜக முடக்கும்.
தாக்கம் இல்லை
தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய இந்த இரு கட்சிகளும்தான் களம் காண முடியும். இதில் மற்ற யாருக்கும் இடம் கொடுக்க வாய்ப்பில்லை. பாஜகவால் அதிமுகவின் இடத்தை மட்டுமே பிடிக்க முடியும். ஆனால் அதனால் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த வித தாக்கமும் ஏற்படாது என்றும் செந்தில் குமார் எம்பி தெரிவித்துள்ளார்.
அதிமுகவுக்கு மாற்று பாஜகதான்
தமிழகத்தில் அதிமுகவுக்கு மாற்று பாஜகதான் என பல முறை அந்க கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர். இதற்கு அதிமுக நிர்வாகிகளும் எதிர்வினையாற்றியிருந்தார்கள். தமிழகத்தில் அதிமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டு எப்படியாவது வளர்ந்து விட வேண்டும் என பாஜக கருதுகிறது. இதற்காகவே அதிமுகவை எப்போதும் டெல்லி தலைமை பதற்றமான சூழ்நிலையில் வைத்து அவர்கள் தேர்தலில் கவனம் செலுத்தாமல் உள்கட்சி விவகாரத்திலேயே நேரத்தை செலவிட வேண்டும் என கருதுகிறது. அது போல் தமிழகத்திலிருந்து 25 எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்படுவார்கள் என பாஜக தலைவர் அண்ணாமலை அவ்வப்போது கூறி வருகிறார்.
அதிமுக கூட்டணி
அதிமுக கூட்டணியில் இருந்து எப்படி 25 எம்பிக்கள் பாஜகவுக்கு கிடைப்பர் என தெரியவில்லை. ஒரு வேளை பாஜக இன்னும் ஓராண்டுகளில் தமிழகத்தில் வளர்த்துக் கொண்டு பின்னர் அதிமுகவுடன் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதே வேளை எடப்பாடி பழனிசாமியை டெல்லி தலைமை அங்கீகரிக்க காரணமே நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதி பங்கீட்டுக்காகத்தான் என மூத்த அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். அதாவது எடப்பாடி பழனிசாமி கடந்த 2019ஆம் ஆண்டு 5 தொகுதிகளை மட்டும் பாஜகவுக்கு ஒதுக்கினார்.
5 தொகுதிகள்
அது போல் தற்போதும் பாஜகவுக்கு 5 தொகுதிகளையே ஒதுக்குவார் என தெரிகிறது. ஆனால் பாஜகவோ எப்படியும் அதிமுகவிடம் இருந்து 20 தொகுதிகளை பெற்றுவிட நினைக்கிறது. இதற்கு எடப்பாடி பழனிசாமி ஒப்புக் கொள்வாரா என தெரியவில்லை. கடந்த சட்டசபை தேர்தலிலேயே அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததால்தான் பாஜக 4 இடங்களிலாவது வென்றது என சொல்லப்படுகிறது. மேலும் அதிமுக செல்வாக்கு உள்ள இடங்கள் பாஜகவுக்கு விட்டுக் கொடுக்கப்பட்டதால் அங்கு பாஜகவும் வெல்லாமல் அந்த வெற்றி வாய்ப்பு எதிரணிக்கு சாதகமாகிவிட்டதாக மூத்த அதிமுக நிர்வாகிகள் கருதுகிறார்கள். எனவே இந்த முறை பாஜகவுக்கு 5 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்கினால் எடப்பாடி பழனிசாமிக்கு கட்சி நிர்வாகிகளால் கடும் நெருக்கடி ஏற்படும் என தெரிகிறது.