தொப்பூரில் பயங்கர விபத்து - 15 வாகனங்கள் ஒன்றின் மீது ஒன்று மோதியதில் 4 பேர் பலி
தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாயில் கண்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து 10க்கும் மேற்பட்ட கார்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
தருமபுரி: பெங்களூரு சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பாலத்தில் நிகழ்ந்த பயங்கர விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக பலர் அனுமதிக்கப்பட்டுள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
Recommended Video
தருமபுரியில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி ஒரு கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. தொப்பூர் கணவாய் பாலத்தை கடந்த போது பாரம் தாங்காமல் லாரி கட்டுப்பாட்டை இழந்தது. பிரேக் முறிந்த லாரி வேகமாக ஓடி முன்னே சென்ற வாகனத்தை இடித்து தள்ளிக்கொண்டு சென்றது.
அந்த நேரத்தில் சாலையின் வலது பக்கத்தில் வந்து கொண்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள், கார்களை லாரியின் கண்டெய்னர் பகுதி மோதி நசுக்கியது. இந்த பயங்கர விபத்தில் வாகனங்கள் உருக்குலைந்தன. கார்களில் இருந்தவர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த பயங்கர விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயம் அதிகமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு கண்டெய்னர் லாரி ஒன்று தொப்பூர் ஆஞ்சநேயர் கோவிலை கடந்து கணவாய் பகுதியில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் டிரைவர்கள் 2 பேரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து காரணமாக சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மரணசாலையாகும் தொப்பூர் கணவாய் பாலம்
பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் வரும் போது தர்மபுரியில் இருந்து 26 கிலோமீட்டர் தூரத்தை கடக்கும் போது வரும் அடர்ந்த மலைப்பகுதி தான் தொப்பூர் கணவாய். சுமார் 3 கி செல்லும் இந்த அடர்ந்த காடுகள் அடங்கிய வனப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகிறது.
அதிபயங்கர விபத்துக்கள் நடந்து வரும் தொப்பூர் கணவாய் கடந்த 2007ஆம் ஆண்டு வரை இருவழிச் சாலையாகவே இருந்து வந்தது. அந்த ஆண்டில் தான் 4 வழிச்சாலையாக மாற்றப்பட்டது. இருவழிச் சாலையாக இருந்த போது அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்த நிலையில், 4 வழிச்சாலையாக மாற்றப்பட்ட பின்னரும், விபத்துகள் குறையவில்லை.
சேலத்தில் இருந்து தர்மபுரி செல்லும் சாலை மேடாக இருப்பதால் அந்த சாலையில் எந்த பிரச்சனையும் இருப்பதில்லை. அதில் வரும் வாகனங்கள் வழக்கம் போல் வந்துவிடுகின்றன . ஆனால் தர்மபுரியில் சேலம் செல்லும் வாகனங்கள் தான் அடிக்கடி விபத்துக்களில் சிக்குகின்றன. இதனால் ஏராளமான உயிரிழப்புகள், வாகனங்கள் சேதம், படுகாயம் என மரணசாலையாக மாறி உள்ளது.

தர்மபுரியில் இருந்து 24வது கிலோமீட்டரில் குறிஞ்சி நகர் சுங்கச்சாவடி உள்ளது. இங்கிருந்து பூரிக்கல் ஜங்சன், ஆஞ்சநேயர் கோயில், வனத்துறை பூங்கா, தடுப்பணை பகுதியை தாண்டி தொப்பூர் வழியாக அனைத்து வாகனங்களும் சேலம் செல்லும். இந்த பகுதி 3 கிலோமீட்டர் தூரம் உள்ளது. அடுத்தடுத்து 3 அபாயகரமான வளைவுகள் பள்ளமாக இருக்கும்.
கனரக வாகனங்கள் இந்த சாலையில் செல்வது மிக சிரமமான காரியம் ஆகும். இந்த 3 கிலோமீட்டர் தூரத்திற்கு குறைவான வேகத்தில் தான் வாகனங்கள் செல்ல வேண்டும். அதை தாண்டி வேகமாக சென்றால், அதாவது இரண்டாவது கியரிலேயே செல்ல வேண்டும். அதை மீறி வேகமாக சென்றால் வாகனங்கள் விபத்தில் சிக்கி விடுகின்றன.
இந்த சாலையில் தினமும் 25 ஆயிரம் வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக லாரி, பேருந்து என சுமார் 10 ஆயிரம் கனரக வாகனங்கள் தினமும் கடந்து செல்கின்றன. அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் உயிரிழப்புகள் அதிகரித்து மரணசாலையாக மாறி வருகிறது தருமபுரி தொப்பூர் கணவாய் பாலம். விபத்துகளையும் உயிரிழப்புகளையும் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும் பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications