எடப்பாடிக்கு அப்படியே எதிராக திண்டுக்கல்! இரு சீனியர்கள் மீது தொண்டர்கள் எதிர்பார்ப்பு! பரபர அதிமுக!
திண்டுக்கல் : கழக இணை ஒருங்கிணைப்பாளர் பதவி வகித்து வரும் நிலையில், சேலம் மாவட்ட செயலாளர் பதவியை தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்த நிலையில், திண்டுக்கல் கட்சியில் 3 முதல் 4 பதவிகளை வகித்து வரும் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் தொண்டர்களுக்கு பதவிகளை விட்டுத் தருவார்களா என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் மாவட்ட செயலாளர்கள் ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு அதிமுக உட்கட்சி தேர்தல் நடைபெற்றது. தேர்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பட்டியலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது.
புதியவர்களுக்கு பெரும்பாலும் பதவி கொடுக்கப்படாமல் பல ஆண்டுகளாக அந்த பதவிகளை வகித்து வரும் நபர்களுக்கு மாவட்ட செயலாளர் மற்றும் ஒன்றிய செயலாளர் பதவிகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதிமுக எடப்பாடி பழனிசாமி
கடந்த வாரம் சேலம் மாவட்டத்தில் உட்கட்சித் தேர்தல் நடைபெற்ற நிலையில் சட்டமன்றக் கூட்டத் தொடருக்கு செல்லாமல் சேலத்திலேயே தங்கி இருந்த எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட செயலாளர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். ஏற்கனவே அவர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஆக பதவி வகித்து வரும் நிலையில், மாவட்ட செயலாளர் பதவிக்கும் மனு செய்தார். காரணம் கடந்த 2012ஆம் ஆண்டு முதலே சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக அவர் பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் அப்போதே அவருக்கு தொண்டர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ஒருவருக்கு ஒரு பதவி
இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தான் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் என அதிமுகவினர் நினைத்துக்கொண்டு நேரத்தில் யாரும் எதிர்பாராத விதமாக இளங்கோவன் புறநகர் மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டது. அவர் ஏற்கனவே சேலம் புறநகர் மாவட்ட ஜெ பேரவை செயலாளராகவும் கூட்டுறவு வங்கி மாநில தலைவராகவும் இருக்கிறார். இதற்கு பின்னணியில் பல்வேறு கருத்துக்கள் உலாவினாலும் அதிமுகவினரிடையே இந்த சம்பவம் பெரும் விவாத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொண்டர்கள் எதிர்பார்ப்பு
இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை வகிப்பதால் புறநகர் மாவட்ட செயலாளர் பதவியை எடப்பாடி பழனிச்சாமி விட்டுக் கொடுத்ததாக கூறப்படும் நிலையில் இதேபோல தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளை வகித்து வரும் நிர்வாகிகள் விட்டுக்கொடுத்து தொண்டர்களுக்கு வழிவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் மூன்று முதல் நான்கு பதவிகளை கட்சியில் வகித்துவரும் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வார்களா என தொண்டர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

திண்டுக்கல் சீனிவாசன்
முன்னாள் அமைச்சரும் தற்போதைய திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினருமான திண்டுக்கல் சீனிவாசன், திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர், கழக அமைப்புச் செயலாளர், கழக வழிகாட்டுதல் குழு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளை வகித்து வருகிறார். மேலும் இவரது உறவினர்கள் திண்டுக்கல் மாநகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் குறிப்பிட்ட அளவு பதவிகளை வகித்து வருகின்றனர். இவர் ஏற்கனவே அதிமுக பொருளாளராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நத்தம் விஸ்வநாதன்
இதேபோல முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் அதிகாரமிக்க ஐவர் அணியில் இருந்தவரும், முன்னாள் அமைச்சரும் தற்போதைய நத்தம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான நத்தம் விசுவநாதன் அதிமுகவில் 4 பதவிகளை வகித்து வருகிறார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர், கழக அமைப்புச் செயலாளர், கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழு, மனுக்கள் பரிசீலனைக் குழு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளையும் இவர் வகித்து வருகிறார்.

மூத்த நிர்வாகிகள் கோரிக்கை
திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை கட்சியில் பல சீனியர்கள்இருந்தாலும் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் இல்லை என்றே கூறப்படுகிறது. குறிப்பாக திண்டுக்கல்லில் மிக மூத்த அதிமுக நிர்வாகியான சாணார்பட்டி இராமராசு, திண்டுக்கல் முன்னாள் மேயர் மருதராஜ், ஆத்தூர் ராஜ்மோகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரேம்குமார் உள்ளிட்ட பலர் கட்சிக்காக நீண்ட காலமாக உழைத்தாலும் அவர்களுக்கான உரிய அங்கீகாரம் மாவட்ட அளவில் தற்போது வரை இல்லை என கூறும் அதிமுகவினர், மாவட்ட அளவிலான பொறுப்புகளை மூத்த நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் இரு சீனியர்களும் விட்டுக் கொடுப்பார்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications