லாக்டவுனிலுமா? திண்டுக்கல் வான்பகுதியில் மீண்டும் கேட்கும் விமான இரைச்சல் சப்தம்- புரியாத புதிர்
திண்டுக்கல்: கொரோனா பாதிப்பு அச்சத்தால் பீதியில் இருக்கும் திண்டுக்கல் மாவட்ட மக்களை வானில் திடீரென விமானம் பறக்கும் இரைச்சல் சப்தங்கள் மீண்டும் கேட்பது அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ரங்கமலை, கருமலை பகுதிகளில் மத்திய புவியியல் துறையினர் நீண்டகாலமாக ஆய்வு நடத்தி வருகின்றனர். இதற்காக அவ்வப்போது குட்டி விமானங்கள் பறக்கவிடப்பட்டன.
இந்த விமானங்கள் திடீரென தாழ்வாகப் பறக்கும் போது ஏற்படும் கடும் இரைச்சல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பலரும் கேள்விகளை எழுப்பிய போதும் மாவட்ட நிர்வாகம் கனத்த மவுனத்தையே வெளிப்படுத்தியது.
கொடைக்கானலில் பீதி.. திடீரென போர் விமானம் பறந்ததாக பரபரப்பு!
பின்னர் திண்டுக்கல் மாவட்டமே அதிரும் வகையில் பயங்கரமான வெடிசப்தம் கேட்டது. அப்போது கூட மாவட்ட நிர்வாகம், ஆய்வு செய்து வருகிறோம் என்கிற அறிக்கை வெளியிட்டது. ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் என்ன மாதிரியான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன? வானில் பறப்பவை எவை என்பது தொடர்பாக விளக்கம் எதுவும் கொடுக்கப்படவில்லை.
கனிமவளம் தொடர்பான ஆய்வை கைவிடாவிட்டால் உண்ணாவிரதம்.. வேடசந்தூர் பகுதி மக்கள் கொந்தளிப்பு!
அதேநேரத்தில் திண்டுக்கல்லில் முகாம் அமைத்து மத்திய புவியியல் துறை அதிகாரிகள் வேடசந்தூர் பகுதியில் பல்வேறு கள ஆய்வுகளை இப்போதும் மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாகவும் விளக்கம் எதுவும் அளிக்கப்படவும் இல்லை.
திண்டுக்கல் அருகே வானில் தொடரும் பயங்கர சப்தம்? குட்டி விமானங்கள் மூலம் கனிம வள ஆய்வா?
தற்போது லாக்டவுன் அமலில் உள்ள நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் வான்பரப்பில் இன்று காலையில் மீண்டும் அதேபோல் விமானங்கள் பறக்கும் ஓசை கேட்டதாகவும் லாக்டவுன் அமலில் உள்ள போது விமானங்கள் பறப்பது எப்படி சாத்தியம் என்கிற கேள்விகளும் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதற்காவது உரிய விளக்கம் கிடைக்குமா? என்பது புரியாத புதிர்தான்.