காலை வாரிய ‘அதிமுக’வேட்பாளர்..திடீர் ட்விஸ்டால் தேர்தலில் சுயேட்சைக்கு லக்..திண்டுக்கல் பரிதாபங்கள்
திண்டுக்கல் : வாக்குப்பதிவுக்கு இன்னும் மூன்று தினங்களே உள்ள நிலையில் திண்டுக்கல் மாநகராட்சி அதிமுக வேட்பாளர் ஒருவர் திடீரென திமுகவில் இணைந்ததை, தொடர்ந்து அதே வார்டில் சுயேச்சையாக போட்டியிட்ட பெண் வேட்பாளருக்கு வேறு வழியின்றி அதிமுக திடீர் ஆதரவு அளித்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு மிகக் குறுகிய இடைவெளியில் உள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாநகராட்சியில் மொத்தமுள்ள 48 வார்டுகளில் 47ல் அதிமுக போட்டியிடுகிறது. ஒரு வார்டு கூட்டணிக் கட்சியான தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு 38 வார்டுகளில் திமுக அதிமுக இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. 9 வார்டுகளில் திமுக கூட்டணிக் கட்சிகளை அதிமுக எதிர்கொள்கிறது.

திண்டுக்கல் மாநகராட்சி
திண்டுக்கல் மாநகராட்சி பொருத்தவரை 48 வார்டுகள் உள்ள நிலையில், இருபத்தி ஐந்து இடங்களில் தனிப் பெரும்பான்மை பெறும் கட்சி அல்லது கூட்டணி கட்சிகளும் மேயர் பதவியையும் துணை மேயர் பதவியை கைப்பற்ற வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாகவே திண்டுக்கல் மாநகராட்சியில் அதிமுக நாற்பத்து ஏழு இடங்களிலும் திமுக முப்பத்தி மூன்று இடங்களிலும் தனிப்பெரும்பான்மை பெற முயற்சித்து போட்டியிடுகின்றன. எப்படியாவது தனிப் பெரும்பான்மை பெற்று பதவியை கைப்பற்ற வேண்டும் என இரு கட்சிகளும் தீவிரமாக முயன்று களத்தில் பணியாற்றி வருகின்றனர்.

தீவிர பிரச்சாரம்
இதற்கு ஏற்றார் போலவே வேட்பாளர்களும், திண்டுக்கல் மாவட்டத்திற்கு தலைமை ஏற்றிருக்கும் திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி, அதிமுக திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் திண்டுக்கல் சீனிவாசன், கிழக்கு மாவட்ட செயலாலர் நத்தம் விஸ்வநாதன், முன்னாள் மேயர் மருதராஜ் ஆகியோர் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். வேட்பாளர்கள் தங்கள் வார்டுகளில் வாக்கு சேகரிக்கும் நிகழ்ச்சிகள் அல்லாமல் அமைச்சர்களும், முன்னாள் அமைச்சர்களும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தற்போது தேர்தல் களம் சுறுசுறுப்பாக உள்ளது.

திமுகவுக்கு தாவும் வேட்பாளர்
இந்த நிலையில் நாம் தமிழர்,மக்கள் நீதி மையம், அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள், தொண்டர்கள், மாவட்டச் செயலாளர்கள் கொத்துக்கொத்தாக திமுகவுக்கு தாவி வருகின்றனர். குறிப்பாக மக்கள் நீதி மையத்தின் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து இரண்டு வேட்பாளர்கள் திமுகவுக்கு தாவி கட்சித் தலைமைக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர். வாக்குப்பதிவுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் அதிமுக வேட்பாளர் ஒருவர் திமுகவுக்கு கடைசி நேரத்தில் தாவி உள்ளது திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காலை வாரிய அதிமுக வேட்பாளர்
திண்டுக்கல் மாநகராட்சி 1வது வார்டு பகுதியில் அதிமுக வேட்பாளராக முத்துப்பாண்டி என்பவர் களமிறக்கப்பட்டார். கடந்த சில நாட்களாக பிரச்சாரத்தில் அவ்வளவாக தீவிரம் காட்டாத நிலையில் இன்று திடீரென முத்துப்பாண்டி திமுகவில் இணைந்துள்ளார். திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ.பெரியசாமி முன்னிலையில் முத்துப்பாண்டி, முன்னாள் கவுன்சிலர் ஒருவர், மற்றும் நிர்வாகிகள் திமுகவில் இணைந்துள்ளனர். இதனால் திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளரான முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அதிமுகவினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சுயேட்சைக்கு ஆதரவு
கடைசி நேரத்தில் காலை வாரிய அதிமுக வேட்பாளர் காரணமாக அதிமுக போட்டியில் இருந்து விலகியதாக கூறப்பட்டது. இதனால் தேர்தலில் அதிமுகவுக்கு தர்மசங்கடமான சூழல் உருவானது. இதையடுத்து வேட்பாளர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட அதிமுகவினர் அதே வார்டில் சுயேச்சையாக போட்டியிடும் சர்க்கரைத்தாய் என்பவரை அதிமுகவில் இணைத்துள்ளனர். திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் திண்டுக்கல் சீனிவாசன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த சர்க்கரை தாய் அதிமுகவின் ஆதரவு பெற்ற வேட்பாளராக தேர்தலில் போட்டியிடுவார் என அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசி நேரத்தில் அதிமுக காலை வாரிய வேட்பாளர் திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications