எஸ்வி சேகர் வர்றாரு! தாலி கட்டும் நேரத்தில் குண்டு வெடிக்கும்.. கல்யாண மண்டபத்துக்கு வந்த போன் கால்!
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பிரபல நடிகரும் முன்னாள் எம்எல்ஏவும் ஆன எஸ்வி சேகர் கலந்து கொள்ளவிருந்த திருமண மண்டபத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தாலிகட்டும் நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் மணமக்களின் வீட்டார் கலக்கமடைந்தனர்.
திண்டுக்கல் கரூர் தேசிய நெடுஞ்சாலை அருகே வேலு மஹால் என்ற தனியார் திருமண மண்டபம் செயல்பட்டு வருகிறது. இன்று அந்த மண்டபத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற இருந்த நிலையில் மணமகன் மணமகள் வீட்டார் உறவினர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் திரண்டு இருந்தனர்.

இந்த நிலையில் திடீரென அந்த திருமண மண்டபத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதை அடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு நிபுணர்கள் உடனடியாக அந்த மண்டபத்துக்கு திரண்டு வந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், நீண்ட நேர சோதனைக்குப் பிறகு அது வெறும் புரளி என தெரிய வந்தது.
திருமணம் நடக்கவிருந்த நேரத்தில் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலால் உறவினர்கள் கலக்கமடைந்தனர். இந்த நிலையில் அந்த மண்டபத்துக்கு பிரபல நடிகரும் முன்னாள் எம்எல்ஏவும் ஆன எஸ்வி சேகர் வருகை தர இருப்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக - அதிமுக ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த எஸ்வி சேகர் தற்போது திமுக ஆதரவாளராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் அவர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருந்த நிலையில், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது இந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications