வேடசந்தூரில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த கவுன்சிலர்கள் - அதிமுக சேர்மன் பதவியிழப்பு
வேடசந்தூர் ஒன்றிய அலுவலக வளாகம் பதற்றமாக இருந்ததால் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் தலைமையில் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
திண்டுக்கல்: வேடசந்தூரில் அதிமுக தலைவர் மீது அதிமுக கவுன்சிலர்களே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறியதால் அதிமுகவைச் சேர்ந்த ஒன்றிய சேர்மன் பதவி இழந்தார். அ.தி.மு.க. கவுன்சிலர்களே எதிராக வாக்களித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வேடசந்தூர் ஒன்றியத்தில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் 8 வார்டுகளில் அ.தி.மு.க., 5 வார்டுகளில் தி.மு.க., தலா ஒரு வார்டில் தே.மு.தி.க., காங்கிரஸ் கவுன்சிலர்கள் இருந்தனர்.
இங்கு தே.மு.தி.க. ஆதரவுடன் அ.தி.மு.கவை சேர்ந்த சாவித்திரி சுப்பிரமணியன் ஒன்றியக்குழு தலைவராகவும், அ.தி.மு.க.வை சேர்ந்த சந்திராசவடமுத்து துணைத்தலைவராகவும் பதவி வகித்தனர்.
அது ரொம்ப ஆபத்தான விஷயம்.. சுப்பிரமணியன் சுவாமியே சொல்லிட்டாரு..கோவையில் கொந்தளித்த திருமாவளவன்
நம்பிக்கையில்லா தீர்மானம்
இந்தநிலையில் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர அனுமதி கோரி பழனி ஆர்.டி.ஓ. சிவக்குமாரிடம் 12 கவுன்சிலர்கள் மனு கொடுத்தனர். இதையடுத்து இன்று வேடசந்தூர் ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. இதற்கு பழனி ஆர்.டி.ஓ. சிவக்குமார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் பங்கேற்றனர்.
தீர்மானம் நிறைவேறியது
இதில் ஒன்றியக்குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு அதன் மீது வாக்கெடுப்பு நடந்தது. அப்போது அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த 12 கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புக்கு ஆதரவு தெரிவித்து கையை உயர்த்தினர். இதனால் தீர்மானம் நிறைவேறியது.
சேர்மன் பதவியிழந்த சாவித்ரி சுப்ரமணியன்
ஒன்றியக்குழு தலைவர் சாவித்திரி சுப்பிரமணி, துணைத்தலைவர் சந்திராசவடமுத்து, கவுன்சிலர் தேன்மொழிதங்கராஜ் ஆகியோர் மட்டும் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனையடுத்து சாவித்ரி சுப்பிரமணி பதவியிழந்தார்.
ஒரே வேனில் ஏறிய கவுன்சிலர்கள்
பின்னர் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த 12 கவுன்சிலர்களும் கூட்டம் முடிந்ததும் ஒன்றாக ஒரு வேனில் ஏறி சென்றனர். இதனிடையே ஒன்றிய அலுவலகத்தின் முன்பு வேடசந்தூர் தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் வீராசாமிநாதன், நகர செயலாளர் கார்த்திகேயன், தெற்கு ஒன்றிய செயலாளர் கவிதாபார்த்திபன், முன்னாள் மாவட்ட துணைச்செயலாளர் எரியோடு ஜீவா, எரியோடு பேரூர் இளைஞரணி முன்னாள் நிர்வாகி பண்ணை மு. கார்த்திகேயன் உள்பட தி.மு.க.வினர் திரளாக நின்று கொண்டு இருந்தனர். அவர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறியவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்க என்று முழக்கமிட்டனர்.
ரூ. 10 லட்சத்திற்கு விலை போனார்களா?
அதிமுகவைச் சேர்ந்த ஒன்றியக்குழு தலைவருக்கு எதிராக அதிமுக கவுன்சிலர்களே வாக்களித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே பத்து லட்சத்திற்கு திமுகவிடம் விலை போன அதிமுக கவுன்சிலர்களையும் கவுன்சிலர்களை விற்பனை செய்த நிர்வாகிகளையும் வன்மையாக கண்டிப்பதாக பா.சுப்ரமணியன் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேடசந்தூர் ஒன்றிய அலுவலக வளாகம் பதற்றமாக இருந்ததால் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் தலைமையில் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
அடுத்த தலைவர் திமுகவின் சவுடீஸ்வரி கோவிந்தன்?
வேடசந்தூர் சட்டசபை தொகுதியில் திமுகவுக்கு இணையான வாக்கு வங்கியை கொண்டது அதிமுக. ஆனால் ஆளும் திமுகவானாலும் எதிர்க்கட்சி அதிமுகவானாலும் இரு கட்சிகளிலும் மவுனமாக அரங்கேறும் உள்குத்துகள் காலந்தோறும் தொடருகிறது. அதிமுகவில் ஒன்றிய செயலாளர்களில் ஒருவர் சுப்பிரமணி. அவரது மனைவிதான் தற்போது அதிமுக கவுன்சிலர்களால் வேடசந்தூர் ஒன்றிய தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சாவித்திரி. ஒவ்வொரு தேர்தலின் போது தமக்கு எம்.எல்.ஏ. சீட் கிடைக்க வேண்டும் என்பதை எதிர்பார்ப்பவர் சுப்பிரமணி. ஆனாலும் அவருக்கு சீட் கிடைப்பதும் இல்லை. அந்த அளவுக்கு அவருக்கு செல்வாக்கும் இல்லை. இந்த நிலையில் சுப்பிரமணியின் மனைவி சாவித்திரியின் பதவியை அதிமுக கவுன்சிலர்களே பறித்துள்ளது அவருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அவரது அரசியல் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
யார் இந்த சவுடீஸ்வரி கோவிந்தன்
தற்போதைய நிலையில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் கோ.ரவிசங்கரின் தாயாரும் திமுக கவுன்சிலருமான தொட்டணம்பட்டியைச் சேர்ந்த சவுடீஸ்வரி கோவிந்தன், புதிய ஒன்றிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சவுடீஸ்வரி பிறந்த ஊர் எரியோடு அருகே உள்ள எ. பண்ணைப்பட்டி.. சவுடீஸ்வரியின் கணவர் தொட்டணம்பட்டி கோவிந்தன் என்ற சின்ராசு, நல்லமனார்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்தார். மக்கள் செல்வாக்கு மிக்க தலைவராக திகழ்ந்தவர். 1998-ம் ஆண்டு கள்ளச்சாராயம் மற்றும் மணல் கொள்ளைகளை மிக கடுமையாக எதிர்த்துப் போராடியதால் கொலைகார கும்பல்களால் பட்டப் பகலில் கோவிந்தன் என்ற சின்ராசு வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்போது வேடசந்தூர் தொகுதியில் மிகப் பெரும் கொந்தளிப்பையும் போராட்டங்களையும் உருவாக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.