யார் மீதும் நம்பிக்கை இல்லை.. அதான் ஃபாரீன் போனாலும் பொறுப்பை ஒப்படைக்கவில்லை- தினகரன் சாடல்
திண்டுக்கல்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு யார் மீதும் நம்பிக்கை இல்லாததால்தான் வெளிநாடு சென்றுள்ள போதிலும் பொறுப்புகளை யாரிடமும் ஒப்படைக்கவில்லை என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
லண்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து திண்டுக்கல்லில் அமமுக பொதுச் செயலாளர் தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொழில் முதலீடுகளை கவர்வதற்காக வெளிநாடு செல்கிறார். பொதுவாக முதல்வர் பொறுப்பில் இருப்போர் அதிக நாட்கள் வெளிநாடு செல்லும் போது தனது பொறுப்புகளை யாரிடமாவது ஒப்படைப்பது வழக்கம்.
தமிழகத்தை விட்டு
ஆனால் எடப்பாடி பழனிச்சாமிக்கோ யார் மீதும் நம்பிக்கை இல்லாததாலும் பயத்தாலும் தனது பொறுப்புகளை ஒப்படைக்காமல் சென்றுள்ளார். தமிழகத்தில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற தொழில் முனைவோர் ஏன் தமிழகத்தை விட்டு வேறு மாநிலத்துக்கு சென்றார்கள்?
ஆட்சி இருப்பதால்
இங்கு கட்டமைப்பு வசதிகள் இல்லாததால்தான் அவர்கள் வேறு மாநிலத்துக்கு சென்றுவிட்டார்கள். முன்னாள் மாநிலங்களவை எம்பி மைத்ரேயன் சொன்னது போல் அதிமுகவில் யாரும் உள்ளத்தால் இணைந்திருக்கவில்லை. ஆட்சி இருப்பதால்தான் கட்சியில் உள்ளனர்.
சசிகலா
ஆட்சி இல்லாவிட்டால் நெல்லிக்காய் மூட்டை போல் சிதறிவிடுவர். நான் பெங்களூரில் சசிகலாவை சந்திக்காமல் திரும்பி வந்ததாக கூறுகின்றனர்.
செப். 5-ஆம் தேதி
கடந்த மாதம் சசிகலாவின் தோழி சந்திரலேகா சந்தித்து வந்ததால் எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. ஒரு மாதத்தில் 6 பேர் மட்டுமே அவரை சந்திக்க முடியும். செப்டம்பர் 5-ஆம் தேதி அவரை சந்திப்பேன் என்றார் தினகரன்.