நள்ளிரவில் ஜீப்பில்.... திண்டுக்கல் அமமுக சுரபி ஜோதிமுருகன் மீது பாலியல் புகார்-மாணவிகள் ஆவேச மறியல்
திண்டுக்கல்: திண்டுக்கல் சுரபி நர்சிங் கல்லூரி தாளாளரும் அமமுக மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைத் தலைவருமான சுரபி ஜோதிமுருகன் மீது அவர் நடத்தி வரும் நர்சிங் கல்லூரி மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்து சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்லை சேர்ந்த தொழிலதிபர் ஜோதி முருகன். இவர் திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டாரங்களில் சுரபி, கபி, ராமபிரபா உள்ளிட்ட பெயரில் நர்சிங் உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளை நடத்தி வருகிறார். வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் கவுரவத் தலைவராகவும் இருக்கிறார்.
வ.உ.சி. நினைவுநாளை குருபூஜை என்ற பெயரில் நடத்தி வருபவர் சுரபி ஜோதி முருகன். வ.உ.சி. நினைவுநாளான நேற்றும் இவரது தலைமையில் 85-வது வ.உ.சி. குருபூஜை நிகழ்ச்சி திண்டுக்கல்லில் நடைபெற்றது.

அமமுக வேட்பாளர்
மேலும் அமமுகவின் மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணித் தலைவராகவும் இருக்கும் சுரபி ஜோதிமுருகன், அக்கட்சியின் திண்டுக்கல் லோக்சபா தொகுதி வேட்பாளராக கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலிலும் போட்டியிட்டவர். அவருக்கு ஆதரவாக திண்டுக்கல்லில் டிடிவி தினகரன் பிரசாரமும் செய்தார்.

மாணவிகள் பாலியல் புகார்- மறியல்
இவரது திண்டுக்கல்லை அடுத்த முத்தனம்பட்டி சுரபி நர்சிங் கல்லூரி மாணவிகள்தான் இன்று திடீரென சாலை மறியல் போராட்டம் நடத்தினர். நர்சிங் கல்லூரி தாளாளரான சுரபி ஜோதிமுருகன், பாலியல் தொல்லை தருவதாக கூறி மாணவிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி மாணவிகளை கலைந்து போகச் செய்தனர்.

நள்ளிரவில் ஜீப்பில் லீலை
தாளாளர் ஜோதி முருகன் இரவு நேரங்களில் மாணவிகளை வெளியே கூட்டிச் செல்வதாகவும் அவரது வாகனத்தில் ஒரே நேரத்தில் 20க்கும் மேற்பட்ட மாணவிகளை அமர வைத்து பல்வேறு விதமான பாலியல் தொந்தரவுகளை கொடுத்து வந்ததாகவும் மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் மாணவிகள் வலியுறுத்தினர். மேலும் தங்களது உயிருக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் மாணவிகள் கண்ணீருடன் ஆவேசமாகவும் கூறினர்.

திண்டுக்கல்லில் பரபரப்பு
திண்டுக்கல்லில் பிரபல தொழிலதிபரான ஜோதிமுருகன் மீது அவர் நடத்தும் கல்லூரி மாணவிகளே பாலியல் தொல்லை புகார் கூறி மறியலில் ஈடுபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழிலதிபரான சுரபி ஜோதிமுருகன், 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களிலும் நடித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் ஓரமாக கோரஸ் பாடுபவராகவும் வருவார். அந்த போட்டோவை அண்ணாத்த படத்தில் சிறப்புத் தோற்றத்தில் உங்கள் ஜோதிமுருகன் என ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

சினிமா தயாரிப்பாளர் ஜோதிமுருகன்
திண்டுக்கல்லுக்கு வருகை தரும் அத்தனை சினிமா பிரபலங்களையும் சந்தித்து படம் எடுத்துக் கொள்வதுடன் அவரது கல்லூரியை சினிமா ஷூட்டிங்குக்கும் இலவசமாக வழங்குவார். இதனால் அவருக்கும் அந்த படங்களில் ஏதேனும் ஒரு சிறப்பு தோற்றத்தை இயக்குநர்கள் வழங்கிவிடுவர். மேலும் ஒருசில திரைப்படங்களையும் சுரபி முருகன் தயாரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications