பழனியில் இரவு மட்டுமே தேடி வரும் விஐபி.. செல்லமாக கூப்பிட்டால்.. ஆச்சர்யப்படுத்தும் ஊசிக்கொம்பன்
திண்டுக்கல்: நான் ராஜா.. நான் ராஜா... எங்கேயும் நான் ராஜா.. என்று பழனி வரதமாநதி அணை பகுதியில் 'ஊசிக்கொம்பன்' யானை உலா வருகிறது. இந்த யானை குறித்து அந்த பகுதி மக்கள் கூறும் தகவல்கள் மிகவும் ஆச்சரியமானது. இந்த யானையின் தந்தம் கூர்மையாக 'ஊசி’ போன்று இருப்பதால் ஊசிக்கொம்பன் என்று அழைக்கிறார்கள்.. இந்த ஊசிக்கொம்பன் யானை மிகவும் சாதுவானது என்றும், அதனை செல்லமாக அழைத்தால் நம் பின்னாடியே வரும் என்று மக்கள் கூறுகிறார்கள்.
பொதுவாக கூட்டமாக சுற்றும் யானைகளால் பிரச்சனைகள் வருவது இல்லை.. அந்த யானைகள் குடும்பம் குடும்பமாக வசிக்கும் போது, தங்களுக்கு தேவையான உணவுகளை தேடி சாப்பிட்டு விட்டு யாருக்கும் பிரச்சனை இல்லாமல் வாழும். கூட்டம் கூட்டமாக உள்ள யானைகள் உணவு தேடி ஊருக்கு வருவது குறைவு.

அப்படியே கூட்டம் கூட்டமாக யானைகள் வந்தாலும், காடுகளை ஒட்டி போடப்படும் கரும்பு தோட்டங்களில் தான் மேயும். அல்லது பலா பழத்தோட்டத்தில் அவற்றை சர்வ சாதாரணமாக பார்க்கலாம். மற்றபடி கூட்டமாக யானைகள் ஊருக்குள் வந்து மக்களை அச்சுறுத்தாது. அதேநேரம் தனியாக உள்ள யானைகள் ஆபத்தை விளைவிக்கும். தன் குடும்பத்தை பிரிந்த யானைகள் ஆக்ரோஷமாக செயல்படும்.
இந்நிலையில் திண்டுக்கல் பழனியை அடுத்த ஆயக்குடி, சட்டப்பாறை, கோம்பைப்பட்டி, கணக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் கொய்யா, மக்காச்சோளம், கரும்பு ஆகியவை அதிகளவில் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். இக்கிராமங்களில் உள்ள விளைநிலங்கள் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் இருக்கிறது.
எனவே காட்டு யானைகள், காட்டு மாடுகள், காட்டு பன்றிகள் உள்ளிட்டவை இரவு நேரங்களில் தோட்டங்கள், விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும். அந்த வகையில் பழனி அருகே ஆயக்குடி சட்டப்பாறை பகுதியில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு 2 குட்டிகளுடன் 6 காட்டுயானைகள் முகாமிட்டு வந்தது. இவை அங்குள்ள தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது. அந்த யானைகளை, ஒட்டன்சத்திரம் வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டிவிட்டார்கள்.
தற்போது அந்த யானைகள் பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் வழியில் உள்ள பொன்னிமலைக்கரடு, ஆயக்குடி பிரிவு, வரதமாநதி அணை பகுதிகளில் இரவு நேரங்களில் தனியாகவும், குட்டிகளுடனும் சுற்றி திரிவது வனத்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த ஒட்டன்சத்திரம் வனச்சரகர் ராஜா மேற்பார்வையில், வனக்காப்பாளர் ரமேஷ் தலைமையிலான வேட்டை தடுப்பு காவலர்கள் அங்கு முகாமிட்டு யானைகளை கண்காணித்து வருகிறார்கள்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், பழனி வரதமாநதி அணையில் 2 குட்டிகளுடன் 6 யானைகள் உள்ளன. இவை, இரவு நேரத்தில் அப்பகுதியில் சுற்றித்திரிவது வழக்கம். அந்த யானை கூட்டத்தில் இருந்து இரவில் தனியாக பிரிந்து 'ஊசிக்கொம்பன்' என்ற யானை மட்டும் தனியாக உலா வருகிறது. இந்த ஊசிக்கொம்பன் யானை மிகவும் சாதுவானது. அதனை செல்லமாக அழைத்தால் நம் பின்னாடியே வந்துவிடும். பயிர்களை பெரிதாக சேதப்படுத்தாது.. எனினும் வரதமாநதி பகுதி தோட்ட விவசாயிகள் இரவு நேரங்களில் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும். யானைகள் நடமாட்டம் இருந்தால், வனத்துறைக்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் " இவ்வாறு வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications