Exclusive: கொங்கு கட்சியா அதிமுக? திமுக இந்தி எதிர்ப்புக்கு இதுதான் காரணம்! விபிபி பரமசிவம் அதிரடி!
திண்டுக்கல் : தென் மாவட்டங்களில் முக்கிய நிகழ்ச்சிகளை எடப்பாடி பழனிசாமி புறக்கணித்து வருவதால் கொங்கு மண்டல கட்சியா அதிமுக என்ற கேள்விக்கும், பாஜக அதிமுகவை விட சிறப்பாக செயல்படுகிறதா?, திமுக இந்தி எதிர்ப்புக்கு காரணம் என்ன? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளரான விபிபி பரமசிவம் பதிலளித்துள்ளார்.
அதே நேரத்தில் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுகவின் முக்கிய வாக்கு வங்கியான முக்குலத்து சமுதாய மக்கள் வசிக்கும் பகுதிகளில் எடப்பாடி பழனிச்சாமி பயணம் மேற்கொள்ளாமல் தவிர்ப்பது அதிமுகவிற்கு நல்லது அல்ல என விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்குமான கட்சியாக இருந்த அதிமுக தற்போது கொங்கு மண்டல கட்சியாக மாறி வருவதாகவும் இது அதிமுகவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என கூறப்படும் நிலையில், இது போன்ற குற்றச்சாட்டுகளை அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளரான விபிபி பரமசிவம் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
அதிமுக தான் திமுக அரசை காப்பாத்தி இருக்கு.. கொளத்தூர் என்ன கன்னித்தீவா? - கொதித்த ஜெயக்குமார்!
அதிமுக எதிர்கட்சி
இது தொடர்பாக ஒன் இந்தியா தமிழிடம் பேசிய அவர் பாஜக குறித்தும் பேசியுள்ளார். அதிமுக என்பது மிகப்பெரிய மக்கள் இயக்கம். 50 ஆண்டு காலம் அதிமுக அரசியல் பயணத்தை முடித்துள்ளது. 5 முதலமைச்சர்களை கொடுத்திருக்கிறது. ஒரு குடும்பத்தின் பிடியில் இல்லாமல் யார் வேண்டுமானாலும் தலைவராக வரலாம். அனைத்து கட்சிகளுக்கும் எதிர்கட்சியாக வர வேண்டும், ஆளும் கட்சியாக வர வேண்டும் என்ற ஆசை இருக்கும். திமுக பொய் வாக்குறுதி கொடுத்து திமுக ஆட்சிக்கு வந்தாலும் ஆக்கபூர்வமாக செயல்பட்டு வருகிறது. பாஜகவாக இருந்தாலும், யாராக இருந்தாலும் மக்கள் அங்கீகரிக்க வேண்டும். அதனை அதிமுக செய்து வருகிறது. மற்ற கட்சிகளுக்கு அது ஒரு விளம்பரம். அதிமுக ஒருபோதும் விளம்பரம் செய்யாது. அதேபோல் அதிமுக சாதி பார்க்கும் கட்சியல்ல அனைவருக்குமான இயக்கம்.
இந்தி எதிர்ப்பு பொய்
திமுக தனது கையாலாகாத தனங்களை மறைப்பதற்காக இப்படி ஏதாவது ஒரு பிரச்சினையை கையில் எடுப்பார்கள். ஆயிரம் ரூபாய் உதவித்தொகை எங்கே என கேட்டால் தமிழை கையில் எடுப்பார்கள். இலவச லேப்டாப் எங்கே என்று கேட்டால் இந்தி திணிப்பு என போராட்டம் செய்வார்கள். இப்படி மக்களை மடை மாற்றுவது தான் திமுகவின் வேலை. கோவை கார் வெடிப்பு சம்பவம் வெறும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது. ஆனால் அதைப்பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் இந்தி திணிப்பு போராட்டத்தை திமுகவினர் கையில் எடுத்திருக்கிறார்கள்.
தமிழ் வழிக் கல்வி
இது உண்மையிலேயே மக்களை திசை திருப்பும் செயல். இதையெல்லாம் மக்கள் நம்பி ஏமாற மாட்டார்கள். இந்தியை விருப்பம் இருந்தால் படித்துக் கொள்ளுங்கள் அதற்கான வாய்ப்பைத் தான் மத்திய அரசு ஏற்படுத்தித் தருகிறது. மருத்துவ கல்வியை கூட தங்கள் தாய் மொழியில் படித்துக் கொள்ளுங்கள் என்றுதான் மத்திய அமைச்சர் அமித் ஷா கூறினார் இதில் எங்கே இருந்து இந்தி திணிப்பு வந்தது. தமிழக அரசு இந்தி திணிப்பை எதிர்ப்பதாக கூறினாலும் மருத்துவக் கல்வி பாட புத்தகங்களை தமிழில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் அப்படி அறிமுகப்படுத்தும் போது தெளிவாக இருக்க வேண்டும் என்பதால் தமிழ் ஆங்கிலம் மருத்துவம் துறை சார்ந்த நிபுணர்கள் இதில் பங்கெடுப்பது அவசியம். கண்துடைப்புக்காக மருத்துவ நூல்களை தமிழில் மொழிமாற்றம் செய்வது பயன் தராது.
மருந்து பற்றாக்குறை
மழைக்காலத்தில் அதிகமான நோய்கள் பரவி வரும் நேரத்தில் சுகாதாரத்துறை சிறப்பாக செயல்பட்டு வருவதாக அவர்களே கூறிக் கொள்கிறார்கள். ஆனால் நிலைமை அப்படி இல்லை. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த போது சுகாதாரத் துறை சிறப்பாக செயல்பட்டது. அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா காலத்திலும் வடகிழக்கு பருவமழை காலத்திலும் நேரடியாக களத்தில் இறங்கி மருத்துவப் பணிகளை மேற்கொண்டார். ஆனால் தற்போது சுணக்கம் ஏற்பட்டுள்ளது. பல மருத்துவமனைகளில் மருந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக மக்களே கூறுகின்றனர். தலைக்காயம் உள்ளிட்ட பிரிவுகளுக்கு உரிய மருத்துவர்கள் இல்லை.
நாடாளுமன்ற தேர்தல் வெற்றி
விபத்தில் சிக்கியவர்களை 48 மணி நேரத்திற்கு உயர் சிகிச்சை அளிக்கும் திட்டம் செயல்பாட்டில் இல்லை. மருத்துவமனைகளுக்கு உரிய முறையில் நிதி வழங்காததால் இந்த திட்டத்தை செயல்படுத்தவே அவர்கள் தயங்குகின்றனர். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் மருத்துவர்களே இல்லை. முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டமும் செயல்பாட்டில் இல்லை. இப்படி பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி வரும் திமுகவுக்கு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நிச்சயம் பதிலடி கொடுப்பார்கள். அதிமுகவின் நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு திமுகவே காரணமாக இருக்கப் போகிறது.
தேர்தல் வாக்குறுதிகள்
திமுக தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக கூறுகிறார்கள். முதலமைச்சர் ஒரு சதவீதத்தையும், உதயநிதி ஸ்டாலின் ஒரு சதவீதத்தையும், அமைச்சர்கள் ஒரு சதவீதத்தையும் மாறிமாறி குறிப்பிடுகின்றனர். அவர்களின் தேர்தல் அறிக்கையை நிறைவேற்றியதை அவர்களாலேயே சரியாக கூற முடியவில்லை. வேண்டுமென்றால் திமுகவின் தேர்தல் பக்கங்களை எடுத்துக் கொள்ளலாம். ஒரு பக்கத்துக்கு 10 வாக்குறுதிகள் இருக்கிறது என்றால் அதில் மூன்று வாக்குறுதிகள் கூட நிறைவேற்றப்பட்டிருக்காது. ஆனால் 75 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக பொய்யுரை கூறி வருகின்றனர். இதற்கெல்லாம் காலம் நிச்சயம் பதில் சொல்லும். திமுக ஆட்சியை அகற்றிவிட்டு விரைவில் மக்கள் அதிமுகவை ஆட்சியில் அமர்த்த போகிறார்கள்" என கூறினார்