ஒன்றிய அரசு எனச் சொல்வது தவறு.. கருணாநிதியே சொல்லல.. தமிழகம் என்பது தவறில்லை.. சொல்கிறார் அண்ணாமலை!
திண்டுக்கல் : திமுக பயன்படுத்தக்கூடிய ஒன்றிய அரசு என்பது தவறான கருத்து. 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதி கூட அப்படிக் கூறவில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், தமிழகம், தமிழ்நாடு இரண்டும் ஒன்றுதான். முதல்வர் ஸ்டாலின் பலமுறை தமிழகம் என்று பேசியிருக்கிறார். ஆளுநர் தமிழகம் என்று குறிப்பிட்டது ஒன்றும் தவறில்லை என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று கூறுவதே சரியானது எனப் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தன.
அதைத் தொடர்ந்து, சட்டமன்றக் கூட்டத்தொடரில், ஆளுநர் உரையை ஆளுநர் ரவி முழுமையாக வாசிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளுநர் வாசித்த உரை அவைக்குறிப்பில் ஏற்றப்படவில்லை. இந்நிலையில், இதுபற்றி அண்ணாமலை பேசியுள்ளார்.
திண்டுக்கல்லில் பாஜக உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவு மாநில செயற்குழு கூட்டம் மற்றும் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அஜித் அல்லது விஜய்.. யாரை பிடிக்கும்.. பிரஸ்மீட்டில் வந்த கேள்வி.. அண்ணாமலை சொன்ன பதில்
தமிழ்நாடு - தமிழகம்
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, "தமிழகம், தமிழ்நாடு இரண்டும் ஒன்றுதான். முதல்வர் ஸ்டாலின் பலமுறை தமிழகம் என்று பேசியிருக்கிறார். ஆளுநர் தமிழகம் என்று குறிப்பிட்டது ஒன்றும் தவறில்லை. அரசியலுக்காக திமுக இதைப் பெரிதுபடுத்துகிறது. ஆளுநர் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை முழுவதுமாக உணர்ந்தவர். ஆளுநர் உரை கூட தமிழில்தான் அவர் பேசியிருக்கிறார். தமிழர் கலாச்சாரத்தை ஒருபோதும் பாஜக விட்டுக் கொடுக்காது. ஆளுநர் அறிக்கையில் தமிழ்நாடு அமைதிப் பூங்கா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது பொய். இப்போதுதான் கோவையில் குண்டு வெடித்தது. தமிழ்நாடு அமைதி பூங்கா அல்ல.
ஒன்றிய அரசு என்பது தவறு
திமுக கொடுக்கக்கூடிய அறிக்கையை அப்படியே ஆளுநர் படிக்கக்கூடாது. தமிழ்நாடு அரசுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால் உண்மையான தகவல்தான் கொடுக்கிறோமா என்று பார்த்து ஆளுநரிடம் அளிக்க வேண்டும். பல இடங்களில் மத்திய அரசும், மாநில அரசும் சுமுகமாகச் செயல்படுகின்றன. அதிகாரிகளைப் பொறுத்தமட்டில் மத்திய அரசும் வேண்டும், மாநில அரசும் வேண்டும். வண்டியில் இருக்கும் இரு சக்கங்களைப் போன்றது மத்திய அரசும் மாநில அரசும். இரண்டும் ஒரே வேகத்தில் செல்ல வேண்டும். ஒன்றிய அரசு என்பது தவறான கருத்தாகும். திமுக பயன்படுத்தக்கூடிய ஒன்றிய அரசு என்பது தவறான வார்த்தை. 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதி கூட அப்படிக் கூறவில்லை.
வாக்குறுதிகள்
பத்து ஆண்டு காலம் திமுக எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முதல்வர் ஸ்டாலின் பல வாக்குறுதிகளை அள்ளி வீசினார். பல இடங்களில் நடக்க முடியாது எனத் தெரிந்தும் வாக்குறுதி அளித்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யப்படும் என வாக்குறுதி அளித்தார். ஆனால் அதனை தற்போது நிறைவேற்ற மறுத்து வருகிறார். இதன் காரணமாக அரசு ஊழியர்கள் செவிலியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தவே முடியாது என்பது திட்டவட்டமாகத் தெரியும்.
ஆளுநர் எதிரி அல்ல
நிதி அமைச்சரே பழைய ஓய்வூதிய திட்டம் வரப் போவதில்லை என்று சொல்லிவிட்டார். அதே நேரம் புதிய பென்ஷன் திட்டத்தை சரியாக செயல்படுத்தப்பட வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் பெருந்தன்மையோடு நடந்துகொள்ள வேண்டும். பழனி முருகன் கோவிலில் குடமுழுக்கு தமிழில்தான் நடத்த வேண்டும் என்று சொன்னது பாஜகதான். ஆளுநரை தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரி என சித்தரிக்கக் கூடாது. ராஜ்பவனில் ஆளுநர் பொங்கல் கொண்டாடுவதில் பெருமைப்படுகிறேன். ஆளுநரை வேலை வாங்க வேண்டியது முதல்வரின் கடமை. அதே போல் முதல்வரை வேலை வாங்குவது ஆளுநரின் கடமை. ஆளுநரிடம் தமிழக அரசு சண்டை போடுவது நியாயமா? இதனால் பாதிக்கப்படுவது மாமானிய மக்கள் தான்.
சட்டம் ஒழுங்கு
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அதலபாதாளத்தில் உள்ளது. இந்திய வரலாற்றிலேயே ஒரு அரசியல் கட்சி தலைவர் கேட்ட கேள்விக்கு பதில் கொடுத்த ஒரே டிஜிபி நம் தமிழக டிஜிபி. அந்த பதிலும் தவறாக உள்ளது. தினமும் தமிழ்நாட்டு மக்களை பதற வைக்கக்கூடிய அளவிற்கு கூட்டு பாலியல் பலாத்காரம், சங்கிலி பறிப்பு உள்ளிட்ட ஏதாவது ஒரு சம்பவம் நடைபெறுகிறது. காவல் நிலையங்களில் திமுகவினரின் கட்டுப்பாட்டை முதலமைச்சர் குறைக்க வேண்டும். இந்தியாவில் சட்டம் ஒழுங்கில் மோசமான செயல்பாடு தமிழ்நாடு." என கடுமையாக விமர்சித்துள்ளார்.