“பூணூல் அணிய கூடாது!” பெங்களூர் CET தேர்வறையில் கழற்ற வைத்த 3 பேராசிரியர்கள் சஸ்பெண்ட்!
பெங்களூர்: கர்நாடகாவில் நேற்றும், இன்றும் சிஇடி நுழைவு தேர்வு நடந்தது. பெங்களூரில் நடந்த இந்த தேர்வில் 5 மாணவர்கள் பூணூல் அணிந்திருந்து வந்திருந்தனர். அப்போது 3 பேராசிரியர்கள் அவர்கள் அணிந்திருந்த பூணூலை கழற்ற வைத்தனர். இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் 3 பேராசிரியர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, அவர்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவில் ஒவ்வொரு ஆண்டும் சிஇடி (CET) எனும் பொது நுழைவு தேர்வு (Common Entrance Exam) நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வின் மூலமாக பியூசி 2ம் ஆண்டு (பிளஸ் 2) முடித்த மாணவ-மாணவிகள் இன்ஜினியரிங் உள்பட பிற தொழில்நுட்ப படிப்புக்கு தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த தேர்வை கர்நாடகா தேர்வு வாரியம் (Karnataka Examinations Authority or KEA) ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது.

அதன்படி இந்த ஆண்டுக்கான சிஇடி பொது நுழைவு தேர்வு மாநிலம் முழுவதும் நேற்று முன்தினம் தொடங்கி இன்று வரை 3 நாட்கள் நடந்தது. முதல் நாளில் கன்னட மொழி பாடம், 2வது நாளில் இயற்பியல், வேதியியல் மெயின் தேர்வு, 3வது நாளான இன்று கணிதம், பயாலஜிக்கான மெயின் தேர்வுகள் நடந்தன. மொத்தம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
பூணூல் அணிந்த மாணவர்கள்
இந்த தேர்வின்போது மாணவ-மாணவிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மாணவிகள் அணிந்திருந்த கம்மல், மூக்குத்தி, மோதிரம் உள்ளிட்ட தங்க நகைகள் கழற்றி வைக்கப்பட்டு வந்த பின்னரே அவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். பெங்களூர் மடிவாளாவில் உள்ள கிருபாநிதி கல்லூரியிலும் இந்த தேர்வு நடந்தது. அப்போது 5 மாணவர்கள் தேர்வு எழுத சென்றனர். அவர்கள் பூணூல் அணிந்திருந்தனர்.
பூணூலை அகற்றிய பேராசிரியர்கள்
5 மாணவர்களை சோதனையிட்ட பேராசிரியர்கள் 3 பேர், பூணூலை அகற்றும்படி கூறினர். மாணவர்கள் தயங்கிய நிலையில் “நீங்கள் தேர்வு எழுத விரும்பினால் பூணூலை அகற்ற வேண்டும்” என்று பேராசிரியர்கள் கறாராக சொல்ல.. வேறு வழியின்றி மாணவர்கள் பூணூலை அகற்றினர்.
வழக்குப்பதிவு - சஸ்பெண்ட்
இந்த விவகாரம் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தெரிய வந்த நிலையில், பேராசிரியர்கள் மீது பெற்றோர் போலீசில் புகாரளித்தனர். இந்த புகாரை தொடர்ந்து மாணவர்களின் பூணூலை அகற்றிய 3 பேராசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு அவர்கள் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு உத்தரவை மீறி..
முன்னதாக கடந்த ஆண்டு சிவமொக்கா, பீதர் போன்ற இடங்களில் மாணவர்களின் பூணூல் அகற்றப்பட்டது. அது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து மதரீதியிலான நம்பிக்கை சார்ந்த பூணூல் உள்ளிட்டவற்றை அகற்ற கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் 3 பேராசிரியர்களும் அந்த உத்தரவை மீறி பூணூலை அகற்றியதால் வழக்கில் சிக்கி சஸ்பெண்ட் ஆகி உள்ளனர்.












Click it and Unblock the Notifications