சிதைந்த நிலையில் முகம்.. செயற்கை கால்! ஈரான் தலைவரின் நிலை இதுதான்.. நியூயார்க் டைம்ஸ் தகவல்
வாஷிங்டன்: ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா கமேனிக்கு கடுமையான காயம் ஏற்பட்டிருப்பதாகவும், அவர் செயற்கை கால் உதவியுடன் உயிர் வாழ்ந்து வருவதாகவும் அமெரிக்க பத்திரிகையான நியூயார்க் டைம்ஸ் தெரிவித்திருக்கிறது.
கடந்த பிப்ரவரியில் அவரது தந்தை அலி கமேனி அமெரிக்க-இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில், மொஜ்தபாவும் கடுமையாகக் காயமடைந்திருந்தார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. தற்போது இது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

மொஜ்தபா கமேனிக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டு மூன்று முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் செயற்கைக் கால் பொருத்தப்படுவதற்காகக் காத்திருக்கிறார். முகத்திலும் உதடுகளிலும் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அவர் பேசுவதில் சிரமம் உள்ளது என நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டிருந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அவர் உடல்ரீதியாகப் பலவீனமாக இருந்தாலும், மனதளவில் மிகவும் கூர்மையாக இருப்பதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் ரகசிய இடத்தில் வைக்கப்பட்டுள்ளார். இஸ்ரேல் உளவுத்துறையால் இருப்பிடத்தைக் கண்டறிய முடியும் என்பதால், பெரிய தளபதிகள் கூட அவரைச் சந்திக்க அனுமதிக்கப்படுவதில்லை என்றும் நியூயார்க் டைம்ஸ் தெரிவித்திருக்கிறது.
தான் குணமடையும் வரை, நாட்டின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை புரட்சிகர காவல்படை (IRGC) தளபதிகளிடம் அவர் ஒப்படைத்துள்ளார். மொஜ்தபா தற்போது எந்தப் பொது நிகழ்விலும் பங்கேற்பதில்லை. அவரது உத்தரவுகள் அனைத்தும் ரகசியமாக கைகளால் எழுதப்பட்ட கடிதங்கள் மூலமாகவே மனிதச் சங்கிலி முறையில் பரிமாறப்படுகின்றன என சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications