தலை தீபாவளி கொண்டாட இருந்த இளைஞர்.. மாமனாரால் வெட்டிக்கொலை! அதிர்ந்த திண்டுக்கல்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் வேறு சமூகத்தைச் சேர்ந்தவரை தனது மகள் காதல் திருமணம் செய்ததால், மருமகனை விரட்டி விரட்டி அரிவாளால் வெட்டி கொலை செய்த மாமனாரை போலீசார் கைது செய்தனர். காதல் திருமணம் செய்து 3 மாதம் ஆன நிலையில், தலை தீபாவளி கொண்டாடப் போகும் நேரத்தில் பால் வியாபாரத்திற்கு சென்று விட்டு வந்த மருமகனை இடைமறித்து, தாம் மறைத்து வைத்த அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 24). பால் வியாபாரம் செய்து வந்தார். இதேபோன்று பல்வேறு பகுதிகளுக்கு சென்று பால் கறந்தும் வந்தார். இப்படி பால் கறந்து வரும் போது, பக்கத்து வீட்டில் வசித்து வரும் சந்திரன் என்பவரின் மகள் ஆர்த்தி (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

ஆர்த்தி கரூரில் இருக்கும் தனியார் கல்லூரியில் பிகாம் படித்து வந்தார். நாளடைவில் இவர்களது பழக்கம் காதலாக மாறியது. இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். ஆனால் இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், பெண்ணின் குடும்பத்தினர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பின்னர் இவர்கள் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
இதற்கும் பெண்ணின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக, பெண்ணின் தந்தை சந்திரன் இவர்களது திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் பயந்து போன காதல் ஜோடி வீட்டை விட்டு சென்று திருமணம் செய்து கொண்டனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் இவர்களது திருமணம் நடந்தது. பின்னர் சிறிது நாட்களில் ராமச்சந்திரனின் குடும்பத்தினர் இவர்களை சேர்த்துக் கொண்டனர்.
அதன்பேரில் இந்த தம்பதியினர் ராமநாயக்கன் பட்டியில் தனியாக வசித்து வந்தனர். ஆனால் திருமணத்துக்கு பிறகும் ஆர்த்தியின் குடும்பத்தினர் அவ்வப்போது ராமச்சந்திரனின் குடும்பத்தினருடன் பேசி வந்தாலும், மாமனார் சந்திரன் பேசாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் தான் தீபாவளி பண்டிகை வருவதையொட்டி, காதல் தம்பதியினர் தலை தீபாவளி கொண்டாட தயாராகினர்.
நேற்று, ராமச்சந்திரன் நிலக்கோட்டை அருகே பால் கறப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அங்கிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது வழியில் மாமனார் சந்திரன் அவரை வழிமறித்து தகராறு செய்தார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது. அப்போது தாம் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்த மாமனார், மருமகனை வெட்டினார்.
இதில், அவரிடம் தப்பி ஓடிய ராமச்சந்திரனை விடாமல் துரத்தி சென்று அரிவாளால் ஓட ஓட விரட்டி வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் மாமனார் சந்திரனை கைது செய்தனர். ராமச்சந்திரனின் மனைவி ஆர்த்தி, கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார்.
அப்போது அவர், "என் தந்தை நாங்கள் இருவரும் வேறு சாதி என்பதால் தான் எங்களது திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. 3 வருஷமாக நாங்கள் காதலித்தோம். வீட்டில் சம்மதிக்காததால் தான் 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்தோம். எங்க அம்மாவும் கூட என்னை மிரட்டுகிறார். என் கணவரை தந்தை தான் கொன்றார்," எனக் கண்ணீர் மல்க கூறினார்.
இருவரும் வேறு வேறு சமூகம் என்றாலும், ஓபிசி கேடகிரிக்குள் தான் வருகிறார்கள் என்றும், அவர்கள் எஸ்.சி/எஸ்.டி-க்குள் இல்லை என்பதால், ஆணவக் கொலையாக வழக்குப் பதிவு செய்ய முடியாது என்று போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications