அய்யா.. மாசம் 1000 ரூபாய்! டைம் ஆச்சு வெளிய போகனும்.. திடீர் கேள்வியால் நழுவிய அமைச்சர் ஐ.பெரியசாமி!
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவு துறை அமைச்சரும் திமுகவின் மூத்த நிர்வாகியுமான ஐ.பெரிசாமியிடம் திமுக ஆட்சியில் அளிக்கப்பட்ட வாக்கு செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி நிலையில் அவசர வேலையாக வெளியே செல்ல வேண்டும் என பதில் அளிக்காமல் மழுப்பிய சம்பவம் அரங்கேறி உள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை தமிழக அரசு விழாவாக அறிவித்திருந்த நிலையில் திண்டுக்கல் அருகே உள்ள இலங்கை தமிழர்களுக்காக புதிய வீடுகள் கட்டி வரும் இடத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி பார்வையிட்டார்.

அமைச்சர் ஐ.பெரியசாமி
மேலும் வனத்துறை சார்பாக ஏற்பாடு செய்த மரக்கன்றுகளையும் நட்டு வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத் துறை அமைச்சர்," தமிழகம் முழுவதும் வனத்துறையால் 2 கோடி மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளது திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 20 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளது. மேலும் தமிழக பாஜக தலைவர் சுயலாபத்திற்காக மத்திய அரசு மூலம் பதவிகளை எதிர்பார்த்து தற்போது தமிழக அரசு மீது குற்றம் சாட்டி அவதூறு பிரச்சாரம் செய்து வருகிறார்.

செய்தியாளர்களுக்கு பேட்டி
அமைச்சர்கள் மீது ஊழல் செய்துள்ளார்கள் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என கூறி வருகிறார் புலி வருது புலி வருது என்று என்று கூறி பூனை கூட வராது. தமிழக மக்களை யாரும் ஏமாற்ற முடியாது மத ரீதியாகவும் சாதி ரீதியாகவும் தமிழக மக்களை யாராலும் பிரிவினை ஏற்படுத்த முடியாது. பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை முதலில் தனது முதுகை அவர் பார்க்க வேண்டும். மத்திய அரசு கூறிய எந்த திட்டமும் தற்போது வரை இந்தியாவில் உள்ள பொதுமக்களுக்கு சென்றடையவில்லை.

நீட் தேர்வு ரத்து
அதேபோல் விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்ட பணத்தை கூட மீண்டும் பிடுங்கியது மத்திய அரசு. அதேபோல் ஒருவர் ஊழல் செய்திருந்தால் அவரை தண்டிப்பதற்கு நீதிமன்றம் உள்ளது. அதே போல் ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது காவல் நிலையம் மூலம் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரட்டும். தமிழக முதல்வர் தமிழகத்திற்கு மட்டும் நீட் தேர்வு ரத்து செய்யுங்கள் என்று சொல்லவில்லை . இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாணவ மாணவியரின் நலன் கருதி நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கூறினார்" என பேசினார்.

மாதம் ஆயிரம் ரூபாய்
அப்போது ஒரு செய்தியாளர் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் நிதி உதவி எப்போது வழங்கப்படும் என கேட்டார். அதற்கு பதிலளித்த அமைச்சர் ஐ.பெரியசாமி தேர்தல் வாக்குறுதிகளில் கூறப்பட்ட அந்த ஒரு வாக்குறுதி மட்டும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. அதனை கண்டிப்பாக முதல்வர் ஸ்டாலின் நிச்சயம் அறிவிப்பார் என்றார். தொடர்ந்து சிலிண்டர் மானியம் குறித்த கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில், நான் பல நிகழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து இருக்கிறது" பதில் அளிக்காமல் நழுவினார். ஆனாலும் தொடர்ந்து பத்து நிமிடத்திற்கு மேலாக பேசிய ஐ.பெரியசாமி அந்த கேள்விக்கு மட்டும் பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications