சவப்பெட்டிக்குள் தங்கவேலு.. எனக்கு என்ன ஆச்சு.. மீண்டும் மருத்துவமனைக்கு... தீவிர சிகிச்சை!
திண்டுக்கல் அருகே இறந்தவர் உயிரோடு எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒட்டன்சத்திரம்: சவப்பெட்டியில் கிடந்தவர் திடீரென கண்ணை விழித்து பார்த்ததும் எல்லோருக்கும் தூக்கி வாரி போட்டது.
ஒட்டன்சத்திரம் அருகில் விருப்பாச்சி சாமியார்புதூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேலு. இவர் தென்னை மரங்களிலிருந்து தேங்காய்களை பறித்து மண்டிகளுக்கு தரும் வேலையை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், தங்கவேலு மரத்தில் ஏறி தேங்காய் பறித்து கொண்டிருந்தார். அப்போது மரத்திலிருந்த ஒரு விஷ வண்டு கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் வலி தாங்காமல் தங்கவேலு அலறி துடித்து மயங்கி விழுந்துவிட்டார்.
இறந்துவிட்டார்
இவரது சத்தத்தை கேட்ட குடும்பத்தினர் பதறியடித்து கொண்டு, அவரை உடனடியாக அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு போனார்கள். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டரும், தங்கவேலு ஏற்கனவே இறந்துவிட்டதாக சொன்னார்கள்.
மாலையுடன் வருகை
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அழுது துடித்தனர். தங்கவேலுவை வீட்டிக்கு கொண்டு வந்து, உறவினர்கள், நண்பர்களுக்கெல்லாம் தகவல் சொன்னார்கள். நேரம் ஆக ஆக எல்லோரும் மாலையுடன் வீட்டிற்குள் நுழைந்தனர்.
எனக்கு என்ன ஆச்சு
அங்கே குளிர்சாதன பெட்டியில் தங்கவேலுவை கிடத்தி வைத்திருந்தார்கள். வந்தவர்கள் மாலையை பெட்டி மேல் அணிவித்து அஞ்சலி செலுத்தி கண்ணீர் விட்டனர். அப்போது பெட்டிக்குள் கிடந்த தங்கவேலு திடீரென கண் விழித்தார். பிறகு "எனக்கு என்ன ஆச்சு" என்று கேட்டார்.
தீவிர சிகிச்சை
இதனால் சுற்றி இருந்தவர்கள் ஒரு கணம் ஷாக் ஆனார்கள். உடனே குடும்பத்தினர் விவரத்தை சொல்லி, அவரை திரும்பவும் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று அனுமதித்தனர். அங்கு தங்கவேலுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.