குத்தால அருவியில குளிச்சது போல் இருக்குதா? அரசு பஸ்ஸில் நவீன டெக்னாலஜி! பயணத்தின் போதே குளிக்கலாம்!
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அரசு பேருந்து ஒன்றின் மேற்கூரை சேதம் அடைந்ததால் பேருந்துக்குள் மழை நீர் கொட்டியது. இதனால் அவதியுற்ற பயணிகள் மழை நீரில் நனைந்தபடியும், பேருந்துக்குள்ளே குடையை பிடித்த படியும் பயணித்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், தரமான அரசு பேருந்துகளை இயக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்னமும் தனியார் பேருந்து சேவை இல்லாத நிலையில், தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்கும் அரசு பேருந்து சேவை தான் மக்களுக்கு மிக முக்கியமானதாக இருக்கிறது.

நாள் ஒன்றுக்கு 20,000 மேற்பட்ட பேருந்துகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்களை சுமந்து பயணிக்கின்றன. குறிப்பாக கடைக்கோடி கிராமங்களுக்கும் மலைப்பகுதிகளுக்கும் அரசு பேருந்து சேவை தான் வரப்பிரசாதமாக உள்ளது.
மேலும் ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் இலவச பஸ் பாஸ், மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை, பெண்களுக்கு இலவசப் பயணம் என அரசு பேருந்து சேவையை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் பயன்படுத்தப்படும் அரசு பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை எனவும், ஓட்டை உடைசலுடன் இயக்கப்படும் பேருந்துகளால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாக புகார் எழுந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட திருச்சியில் இருந்து கேகே நகருக்கு சென்ற அரசு பேருந்தில் வளைவில் திரும்பிய போது நடத்துனர் முருகேசன் பேருந்தில் இருந்து இருக்கையுடன் வெளியே விழுந்தார். இந்த சம்பவத்தை குறிப்பிட்டு தமிழகத்தில் அரசு பேருந்துகள் பராமரிப்பு மிகவும் பரிதாபகரமான நிலையில் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சித்தனர். மேலும் அரசு பேருந்தை முறையாக பராமரிக்கவில்லை என பணிமனை மேனேஜர் உள்ளிட்ட மூன்று பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இதுமட்டுமல்லாமல், புதிய பேருந்தை பயணிகளே தள்ளிக் கொண்டு சென்றது, ஹெட்லேம்ப் இல்லாத பேருந்தை இருசக்கர வாகன வெளிச்சத்தில் இயக்கியது என தொடர் புகார்கள் எழுந்து வருகிறது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகளின் தரம் குறித்து சோதனை நடத்த உத்தரவிடப்பட்டது.

ஆனாலும் பல இடங்களில் அரசு பேருந்துகள் தரமின்றி இயக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அப்படி ஒரு சம்பவம் தான் திண்டுக்கல்லில் நடந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்து வந்தது. இந்த நிலையில் இன்று மாலை திண்டுக்கல்லில் இருந்து நத்தம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப்பேருந்து தற்போது பெய்த மழையில் பேருந்தின் மேற்கூரை வழியாக நீர்வீழ்ச்சி போல் மழை நீர் கொட்டியது.
இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் இருக்கையில் இருந்து எழுந்து நின்று கொண்டு நனைந்து கொண்டே மிகவும் சிரமப்பட்டு பேருந்தில் பயணம் செய்தனர். இதனால் அவதியுற்ற பயணிகள் மழை நீரில் நனைந்தபடியும், பேருந்துக்குள்ளே குடையை பிடித்தபடியும் பயணித்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வருகிறது. மழை நேரங்களில் பொதுமக்களுக்காக இயக்கப்படும் அரசு பேருந்துகளை தரமான முறையில் இயக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications