திண்டுக்கல்லை பிரித்து உருவாகிறதா பழனி புதிய மாவட்டம்? என்னவாகும் வேடசந்தூர்? பரபரக்கும் விவாதம்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு பழனி புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்கிற அரசாணை வெளியாக இருக்கிறது என்ற தகவல் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி மிக முக்கியமான ஆன்மீக தலமாகும். திண்டுக்கல் மாவட்டத்துக்கு வருவாய் தரக் கூடிய முக்கியமான இடங்கள் பழனி முருகன் கோவில், ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்.
சட்டசபை தேர்தலின் போது பழனியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்படும் என அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளித்தன. திமுகவும் இந்த வாக்குறுதியை வழங்கியது.

திமுக வாக்குறுதி
பழனி தொகுதி திமுக எம்.எல்.ஏ.வான ஐ.பி.செந்தில்குமார் தேர்தலுக்கு முன்னர், திமுக ஆட்சியில் தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையான பழநியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்கப்படும். பழநி-கொடைக்கானல் ரோப்கார் திட்டம் நிறைவேற்றப்படும் என திட்டவட்டமாக கூறியிருந்தார். திமுக ஆட்சி அமைந்தது முதலே பழனி தனி மாவட்டம் குறித்து பல்வேறு விவாதங்கள் நடந்து வருகின்றன.

பழனி சுகாதார, கல்வி மாவட்டங்கள்
பழனியை தலைமையிடமாகக் கொண்டு ஏற்கனவே பழனி சுகாதார மாவட்டம், பழனி கல்வி மாவட்டம் செயல்பட்டு வருகின்றன. பழனி அரசு மருத்துவமனை கூட மாவட்ட தலைமை மருத்துவமனை என தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பழனி மாவட்டம் உருவாவது அனேகம் சாத்தியம் என்கின்றன அரசு வட்டாரங்கள்.

வேடசந்தூர் சேர்க்கப்படுமா?
அதேநேரத்தில் அப்படி உருவாகும் பழனி மாவட்டத்தில் நிச்சயம் ஒட்டன்சத்திரம் தொகுதி இடம்பெறும்; திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துகுளம், தாராபுரம் தொகுதிகளும் இணையக் கூடும். ஒட்டன்சத்திரம் தொகுதி எல்லைகளாக இருப்பவை ஆத்தூர், வேடசந்தூர் தொகுதிகள். ஆத்தூர் தொகுதியானது திண்டுக்கல் மாவட்டத்தின் மையப்பகுதி வரை விரிந்து உள்ளது. அதேநேரத்தில் வேடசந்தூர் தொகுதியானது திண்டுக்கல் மாவட்ட புறப் பகுதியாக உள்ளது. ஏற்கனவே வேடசந்தூர் தொகுதி, பழனி கல்வி மாவட்டத்தின் கீழ்தான் இருக்கிறது. ஆகையால் வேடசந்தூர் தொகுதியும் கூட பழனி மாவட்டத்தில் சேர்ந்துவிடுமா? என்கிற குழப்பம் உள்ளது.

குழப்பத்தில் வேடசந்தூர் தொகுதி மக்கள்
ஒட்டன்சத்திரம், மடத்துகுளம், தாராபுரம் பகுதிகள் பழனியை எளிதில் சென்றடைய முடியும். அதேநேரத்தில் வேடசந்தூர் தொகுதியில் இருந்து பழனி தொகுதி என்பது கணிசமான தொலைவில் உள்ளது. வேடசந்தூர் தொகுதியில் இருந்து பழனிக்கு தற்போதே போதுமான பேருந்துகள் கிடையாது. காலை, மாலையில் குறிப்பிட்ட நேரத்தில் இயக்கப்படுகிற பேருந்துகள்தான் உள்ளன. ஆகையால் வேடசந்தூர் தொகுதியை திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து பிரிக்கவே கூடாது என்பது அத்தொகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. இது சமூக வலைதளங்களில் விவாதங்களை கிளப்பி இருக்கிறது.












Click it and Unblock the Notifications