கல்வெட்டில் காணாத பெயர்..ஜால்ரா போடுபவர்களுக்குத் தான் பதவியா? தவெக நிர்வாகியின் விபரீத முடிவு! ஷாக்
திண்டுக்கல்: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் குறித்த பேச்சு தான் தமிழக அரசியலில் புயலாக மையம் கொண்டிருக்கிறது. ஆனால் ஆங்காங்கே ரசிகர் மன்ற நிர்வாகிகள், கட்சிப் பதவிக்கு அடித்துக் கொள்வது தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. உச்சபட்சமாக கட்சித் பதவி பறிக்கப்பட்டதால் விரக்தியடைந்த தவெக நிர்வாகி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகராக இருந்து அரசியல்வாதியாக உருவெடுத்து இருக்கிறார் விஜய். அவரை பின்பற்றி ரசிகர்களாக இருந்து தொண்டர்களாக உருவாகி இருக்கின்றனர் விஜய் ரசிகர்கள். அரசியலில் தனது முதல் மாநில மாநாட்டை வெற்றிகரமாக முடித்துள்ள விஜய் அடுத்த சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி இருக்கிறார்.

இதற்கிடையே தமிழகம் முழுவதும் நிர்வாகிகள் நியமனம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் மாநில தலைமை நிர்வாகிகள் சிலரின் பெயரும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஆனால் உள்ளூரில் தாங்கள்தான் தலைமை என பலர் காட்டி வருவதாக கூறப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் விஜய்க்கு நெருக்கமாக இருக்கும் 'தலைவர்' ஒருவர் விஜய் ரசிகர் மன்றத்திலிருந்து வந்த நிர்வாகிகளை கூட மதிப்பதில்லை என புகார் எழுந்திருக்கிறது. விஜய்க்கு அடுத்தபடியாக ஏன் தலைவரே நான் தான் என்பது போல அந்த 'தலைவர்' நடந்து கொள்வதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஏற்கனவே ரசிகர் மன்றங்களில் இருந்தவர்களுக்கும், தற்போது புதிதாக நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட புதுவையான நிர்வாகியின் ஆதரவாளர்களுக்கும் இடையே நிறைய பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் 'புதுவையான' நிர்வாகியின் புகழ்பாடுபவர்களுக்கே பதவிகள் வாரி வழங்கப்படுவதாகவும், இதனால் ரசிகர் மன்றம். மக்கள் இயக்கம் என விஜய்க்கு போஸ்டர் அடித்து பாலாபிஷேகம் செய்த நிர்வாகிகள் புலம்பி வருவதாக புகார் கூறப்படுகிறது. அந்த வகையில், இந்த பிரச்சினை கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் நடைபெற்ற பெரியார் சிலை மாலை அணிவிப்பு நிகழ்ச்சியில் வெளிப்படையாகவே தெரிந்தது. திண்டுக்கல்லில் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், இளைஞர் அணி, மகளிர் அணி, ஒன்றிய அணி , மாணவர் அணி என தனித்தனியாக பிரிந்து பெரியார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திமுக, அதிமுக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒரே அணியாக ஒற்றுமையாக பெரியார் திருவருவ சிலைக்கு மாலை அணிவித்து செல்லும் நிலையில், தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் ஒற்றுமை இல்லாதது போல் , நான்கு அணியாகப் பிரிந்து தங்களுக்குள் யார் பெரியவர் என்பது போல செயல்பட்டது உட்கட்சி விவகாரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
இந்நிலையில் மோதலின் உச்சமாக, திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் பதவி பறிக்கப்பட்ட விவகாரத்தில் தமிழக வெற்றி கழக நிர்வாகி தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வத்தலகுண்டு அருகே எழில் நகரை சேர்ந்தவர் அபினேஷ் (26) தமிழக வெற்றி கழகத்தில் வத்தலகுண்டு ஒன்றிய தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வத்தலகுண்டு பேருந்து நிலையம் முன்பு புதிதாக அமைக்கப்பட்ட கொடி மேடை திறக்கப்பட்டது.

அந்த கல்வெட்டில் வத்தலகுண்டு ஒன்றியத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டவர்களின் பெயர்கள் இல்லாமல்,சில புதிய நிர்வாகிகள் பெயர் பொறிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அபினேஷ், உள்ளிட்ட தவெக கட்சியினர் 30க்கும் மேற்பட்டோர் கொடியேற்று விழா தினத்தன்று புதியவர்களுக்கு பதவி வழங்கிய மாவட்ட தலைவர் தேவாவை கண்டித்து போராட்டம் நடத்தினர்.
இந்த விசயம் தலைமை வரை சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பதவி பறிக்கப்பட்டதாக எண்ணிய அபினேஷ் மன உளைச்சலில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை போட்டுக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அவரை உடனடியாக மீட்டு வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்

மேலும் இச்சம்பவம் தொடர்பாக வத்தலகுண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கட்சியை ஆரம்பித்து இன்னும் முழுமையாக அறிவிப்பு கூட வராத நிலையில், ஒரு தேர்தலைக் கூட சந்திக்காத நிலையில், பதவிக்காக போராட்டம், ஆர்ப்பாட்டம், தற்கொலை முயற்சி என தமிழக வெற்றிக் கழகத்தில் குழப்பம் நீடித்து வரும் நிலையில் தலைமைக்கு தலைவலி ஏற்படுத்தி வருகின்றனர் தொண்டர்கள். ரசிகர்களாக இருந்து தொண்டர்களாக மாறியவர்களை கட்டுக்கோப்பாக வைத்து இயக்கத்தை நடிகர் விஜயால் வழிநடத்த முடியுமா? என்ற கேள்வி பொதுமக்கள் இடையே எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications