பழனியில் பாலியல் தொழில்..பஸ் ஸ்டாண்டில் தெறித்து ஓடும் பக்தர்கள்! பறந்த புகார்..போலீஸ் அதிரடி ஆக்சன்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஆன்மீக தலமான பழனி மலையில் அடிவாரம் மற்றும் அதற்கு செல்லும் வழியில் ஏராளமான தங்கும் விடுதிகளில் பாலியல் தொழில் கொடி கட்டி பறப்பதாக பகீர் புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் சபல புத்தி கொண்டவர்களை மடக்கி பணம் பறித்த பாலியல் புரோக்கரை கைது செய்துள்ளனர் பழனி போலீசார்.
அறுபடை வீடுகளில் ஒன்றான திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

குறிப்பாக தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற நாட்களில் பக்தர்கள் வெள்ளம் கரை புரண்டு ஓடும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நாளில் பழனியில் திரள்வதால் அங்கு வணிகமும் பெருகி வருகிறது. ஆனால் பழனியில் மோசடி சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.
தரிசன மோசடி, அறை எடுத்து தருவதாக மோசடி, பிக்பாக்கெட் தொல்லை, திருநங்கைகள் தொல்லை பாலியல் தொழில் என பழனி பரிதாபகரமான நிலையில் இருக்கிறது. அந்த வகையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு மோசடி கும்பல் சிக்கியது. சாமி தரிசனம் செய்ய வரும் நபர்களை ஆசை காட்டி தனியார் விடுதிக்கு அழைத்து சென்று பணம், செல்போனை ஆண் நண்பர்கள் மூலம் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடித்து வந்த இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து சில நாட்கள் பாலியல் தொழில் கும்பலின் நடமாட்டம் முடங்கியிருந்த நிலையில், தற்போது அவர்களின் அட்டகாசம் மீண்டும் அதிகரித்துள்ளது. பழனி பேருந்து நிலையம் மற்றும் அடிவாரத்திற்கு செல்லும் வழிகளில் ஏராளமான தங்கும் விடுதிகள் இருக்கின்றன. அதில் ஒரு சில தங்கும் விடுதிகளில் பாலியல் தொழில் நடப்பதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. தரிசனம் மட்டுமல்லாது சுற்றுலாவுக்காக வரும் வெளியூர் மற்றும் வெளி மாநில பயணிகளை ஆசை காட்டி அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடும் கும்பல் அவர்களிடம் மிரட்டி பணம் பறித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இது மட்டுமல்லாமல் பழனி பேருந்து நிலையம் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பாலியல் தொழிலாளிகளும் புரோக்கர்களும் சுற்றுலாப் பயணிகளை சூழ்ந்து கொண்டு ஆசை காட்டி ஏமாற்றி வருவதாக கூறப்படுகிறது, சபல புத்தியால் விடுதிகளுக்குச் செல்லும் சிலர் அவர்களது பணம் செல்போன் உள்ளிட்டவற்றை இழந்ததாகவும் புகார் சொல்லப்படுகிறது.
வெளியில் புகார் தெரிவித்தால் அசிங்கமாக இருக்கும் என நினைக்கும் சிலர் புகார் அளிக்காமலேயே சென்று விடுகின்றனர். இதனை பயன்படுத்திக் கொண்டு பாலியல் தொழில் மற்றும் மிரட்டலில் ஈடுபடும் கும்பல் பல இடங்களில் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். இந்த நிலையில் பழனியில் அதிகரித்துள்ள பாலியல் தொழிலை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதை அடுத்து பழனி காவல் துறையினர் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் கல்யாண மண்டபங்களில் சோதனை நடத்தினர். அதில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்திய புரோக்கர் ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications