கரூர் அருகே.. பட்டப் பகலில் மோட்டார் வாகன ஆய்வாளர் வேன் ஏற்றி கொலை.. நீதிமன்றத்தில் டிரைவர் சரண்
திண்டுக்கல்: ஈரோடு அருகே உள்ள சென்னிமலையைச் சேர்ந்தவர், கனகராஜ். இவர் கரூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளராக கலால் பிரிவில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த நவம்பர் 22ஆம் தேதி காலை கரூர் - திண்டுக்கல் சாலையில் உள்ள வெங்கட்கல்பட்டி மேம்பாலம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுவந்தார்.
அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த வேனை நிறுத்தி சோதனையிட கனகராஜ் முயன்றார். ஆனால், அந்த வேன் கனகராஜ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

வாகனம் மோதி தூக்கி வீசப்பட்ட கனகராஜ் உயிருக்கு ஆபத்தான நிலையில், கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக தாந்தோனிமலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கனகராஜ் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் உத்தரவின்பேரில் கரூர் நகர காவல் துணைக் கண்காணிப்பாளர் தேவராஜ் தலைமையிலான 5 தனிப்படை காவல் துறையினர் நெடுஞ்சாலையில் உள்ள சிசிடிவி காட்சிகளை சோதனையிட்டு வந்தனர்.அதனடிப்படையில், கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புத்தாம்பூர் சிப்காட் பூங்காவில் உள்ள டெக்ஸ்டைல் நிறுவனத்திற்கு ஆட்கள் ஏற்றிவரும் வேன் என்பதை கண்டறிந்தனர். தொடர்ந்து விபத்து ஏற்படுத்திய வேனை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் அந்த வேனை ஓட்டி வந்த தோகைமலை பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (28) என்பவரை காவல் துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனர் சுரேஷ்குமார் இன்று திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்திலுள்ள ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முன்பு சரணடைந்துள்ளார். அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி லலிதராணி உத்தரவிட்டுள்ளார்












Click it and Unblock the Notifications