ஆஹா ஆரம்பிச்சுட்டாங்கல்ல..விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் அட்டூழியம்! பெண் போலீஸ் முன்னாடி இப்படியா?
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டதோடு, ஊர்வலத்தில் காவலுக்கு நின்ற பெண்காவல் ஆய்வாளர் மீது வேட்டியை கழற்றி வீசி எறிந்த சம்பவம் சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
விநாயகர் சதுர்த்தி விழா இந்தியா முழுவதும் வழக்கமான உற்சாகத்துடனும் கொண்டாட்டங்களுடனும் கொண்டாடப்பட்டு வருகிறது.
விநாயகர் சதுர்த்தி அன்று பிரதிஷ்ட்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மூன்று நாள் பூஜைகளுக்கு பிறகு நீர் நிலைகளில் கரைக்கப்பட்டு வருகிறது.

விநாயகர் சதுர்த்தி
பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை அருகில் உள்ள நீர் நிலைகளில் கரைத்து வரும் நிலையில், இந்து முன்னணி, பாஜக, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் பலத்த பாதுகாப்புடன் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகிறது. இதற்காகவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு , போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நிபந்தனைகளுடன் அனுமதி
இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் மதுரை உயர்நீதிமன்ற கிளை அனுமதி அளித்தது. அந்த வகையில் பொது மக்களை தொந்தரவு செய்யக்கூடாது, ஒரு குறிப்பிட்ட சமூகத்தையோ சாதியையோ இழிவு செய்யும் வகையில் பாடல்களை ஒளிபரப்ப கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் விதிகள் மீறப்பட்டதோடு பாதுகாப்புக்குச் சென்ற பெண் காவல் ஆய்வாளர் மீது வேட்டியை கழற்றி இந்து முன்னணி நிர்வாகி ஒருவர் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்து முன்னணி
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. உயர் நீதிமன்றம் விதித்த நடைமுறைகளின் படி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊர்வலம் நடத்த போலீசார் அனுமதி வழங்கினர். இருப்பினும் ஊர்வலத்தில் பங்கேற்ற இந்து முன்னணி பிஜேபி கட்சியினர் விநாயகர் சிலைகளுடன் வாகனங்களில் ஒலி பெருக்கி அமைத்து பாடல்களை அலற விட்டு வழிநெடுக நடனமாடிய வண்ணம் சென்றனர்.

தொண்டர்கள் அராஜகம்
இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் ஊர்வலத்தில் வந்தவர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டவரே சென்றனர். சிலை ஊர்வலத்தில் பாதுகாப்புக்கு சென்ற பெண் இன்ஸ்பெக்டர் மீது நடனமாடி சென்ற ஒரு இளைஞர் தான் கட்டியிருந்த வேஷ்டியை அவிழ்த்து சுழற்றி வீசினார். இச்சம்பவம் ஊர்வலத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொது மக்களிடையே முகச்சுளிப்பை ஏற்படுத்தியது. விநாயகர் சிலை ஊர்வல பாதுகாப்பு பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்த பட்டிருந்தனர்.












Click it and Unblock the Notifications