ராஜீவ் காந்தி தியாகியா? ஊழல் செய்தவர்தானே? சீமான் விமர்சனத்துக்கு எதிர்ப்பு- உருவ பொம்மை எரித்த காங்.
திண்டுக்கல்: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை விமர்சித்ததாக கூறி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் உருவபொம்மையை திண்டுக்கல்லில் காங்கிரஸ் நிர்வாகிகள் எரித்ததால் பதற்றம் ஏற்பட்டது. மேலும் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தினர்.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. பேரறிவாளன் விடுதலையை தமிழகம் கொண்டாடி மகிழ்கிறது. விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து பல்வேறு தலைவர்களை சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார். முன்னதாக சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை பேரறிவாளன் சந்தித்தார். இச்சந்திப்பின் போது பேரறிவாளனை ஆரத்தழுவி வரவேற்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

வரவேற்பும் எதிர்ப்பும்
இதனையடுத்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி, இடதுசாரித் தலைவர்கள் என பலரையும் பேரறிவாளன் சந்தித்து நன்றி தெரிவித்தார்.ஆனால் பேரறிவாளன் விடுதலையை தமிழ்நாடு காங்கிரஸ் கடுமையாக எதிர்த்து வருகிறது. பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வாயில் வெள்ளை துணி கட்டி போராட்டம் நடத்தியது காங்கிரஸ். காங்கிரஸ் கட்சியின் இப்போராட்டத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

சீமான் கேள்வி
இது தொடர்பாக கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒசாமா பின்லேடன் ஒரு சர்வதேச பயங்கரவாதி என்றால் ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை இந்திய அமைதிப்படை படுகொலை செய்தது. அந்த அமைதிப்படையை அனுப்பிய ராஜீவ்காந்தியும் ஒரு சர்வதேச பயங்கரவாதிதான். ஆகையால் காங்கிரஸ் கட்சியின் பேரறிவாளன் விடுதலையை எதிர்க்காமல், திராவிட கட்சிகளுடன் 4 அல்லது 10 சீட்டுக்காக ஒட்டிக் கொண்டு போக வேண்டும் என்றார்.

ராஜீவ் என்ன தியாகியா?
மேலும் ராஜீவ் காந்தி என்ன தியாகியா? போபர்ஸ் பீரங்கிகள் வாங்கியதில் ரூ400 கோடி ஊழல் செய்தார் என்கிற குற்றச்சாட்டுக்குள்ளானவர்தானே? ஈழத் தமிழர் பிரச்சனையில் தவறு செய்தது ராஜீவ் காந்திதானே.. பேரறிவாளன் விடுதலை தவறு என்றால் ராஜீவ் செய்த தவறு தொடங்கி நாம் பேசுவோம் என்றும் சீமான் கூறியிருந்தார்.

சீமான் உருவ பொம்மை எரிப்பு
சீமானின் இந்த விமர்சனத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சீமானின் இப்பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் திண்டுக்கல் மாநகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் மணிகண்டன் தலைமையில் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் சீமானின் உருவ பொம்மையை காங்கிரஸ் கட்சியினர் எரித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் உருவ பொம்மையை பறிக்க முயன்ற போது சிறிது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பேருந்துகள் வந்து செல்லும் போக்குவரத்து நெரிசலான சாலையில் உருவ பொம்மைய எரித்தபோது காவலர்கள் விரைந்து வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இந்த உருவபொம்மை எரிப்பு சம்பவம் காரணமாக திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications