சித்தா, ஆயுர்வேதம் படித்தவர்கள் இனி அலோபதி சிகிச்சை அளிக்க முடியாது.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
சென்னை: சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி மற்றும் யுனானி போன்ற இந்திய மருத்துவம் படித்தவர்கள் இனி அலோபதி சிகிச்சை அளிக்க முடியாது. ஏனெனில் தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இந்திய மருத்துவப் பயிற்சியாளர்கள் அலோபதி மருந்துகளை பரிந்துரைக்கும் வகையில், 'பதிவுசெய்யப்பட்ட மருத்துவப் பயிற்சியாளர்' என்பதை வரையறுக்கும் மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு திருத்தம் செய்தது.

இந்த திருத்தப்படி, சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோ பதி மற்றும் யுனானி போன்ற இந்திய மருத்துவம் படித்தவர்கள், அலோபதி சிகிச்சை வழங்கலாம் என அனுமதி அளித்து தமிழக அரசு கடந்த 2010-ம் ஆண்டு செப்.8-ம் தேதி அரசாணை பிறப்பித்தது. இதற்கு இந்திய மருத்துவர்கள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்..
இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் தமிழ்நாடு கிளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, கடந்த 2021 நவம்பர் 14-ல் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
தனிநீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து இந்திய மருத்துவர்கள் சங்கத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்கள். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடந்து வந்தது.
இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆனந்த் டேவிட் இதுபற்றி வாதிடுகையில், "தமிழக அரசின் அரசாணை தொடர்பாக எதிர் தரப்பு கருத்தை கேட்கவில்லை. எந்த கருத்துகளையும் தெரிவிக்காமல் தனி நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். அதுவும் மற்ற வழக்குகளுடன் சேர்த்து இந்த வழக்கையும் விசாரித்து மொத்தமாக தள்ளுபடி செய்திருக்கிறார். எனவே, தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்" என்றார்.
அதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்கிறோம். அத்துடன் இந்த வழக்கை தனி நீதிபதி மீண்டும் விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications