அமைச்சர் அன்பில் மகேஷை கவுரவித்த துபாய் இந்திய தூதர்.. அரசு பள்ளி மாணவர்களுக்கு தேநீர் விருந்து..
துபாய்: தமிழகத்தில் நடந்த வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற 68 மாணவிகளை தமிழக அரசு துபாய்க்கு 4 நாள் சுற்றுலா அழைத்து சென்றுள்ளது. இந்நிலையில் இன்று துபாய் சென்று இறங்கிய மாணவர்களுக்கு இந்திய தூதரகத்தில் உயர் தேநீர் விருந்து வழங்கப்பட்டது. மேலும் அமைச்சர் அன்பில் மகேஷை துபாய்க்கான இந்திய தூதர் கவுரவித்தார். மேலும் முதல்வர் ஸ்டாலினையும் பாராட்டினார்.
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இல்லம் தேடி கல்வி, ஐஐடி கல்வி திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு முறையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தனியார் பள்ளிக்கு நிகராக மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த தொடர்ந்து அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சமீபத்தில் இணையவழியாக வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களை சர்வதேச கல்வி சுற்றுலாவுக்கு அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டது.

அதன்படி தற்போது 68 மாணவ-மாணவிகள் 4 நாள் கல்வி சுற்றுலாவாக இன்று துபாய் புறப்பட்டு சென்றனர். இதில் 33 மாணவிகள் அடங்குவர். மாணவ- மாணவிகளுடன் ஆசிரியர், ஆசிரியைகள், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அதிகாரிகள் சென்றுள்ளனர். அனைவரையும் அமீரக திமுக பொறுப்பாளர் எஸ்எஸ் மீரான், தமிழ் அமைப்பினர், நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். மதியம் அனைவருக்கும் பிரியாணி விருந்து வழங்கப்பட்டது.
முன்னதாக துபாயில் உள்ள இந்திய தூதரகத்தில் உயர் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. அரசு பள்ளி மாணவர்களை துபாய்க்கு சுற்றுலா அழைத்து வந்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை துபாய்க்கான இந்திய தூதர் கவுரவித்தார். அதோடு தமிழக முதல் அமைச்சர் ஸ்டாலினையும் பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சிகளுக்கு பிறகு இன்றைய தினம் மாணவர்கள் அனைவரும் அங்குள்ள பாலைவனத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். மேலும் மாணவ-மாணவிகள் பல இடங்களை சுற்றிப்பார்க்க உள்ளனர். அதன்படி உயரமான கட்டடமான புர்ஜ் கலீபா, கிராணட் மசூதி, ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சி உள்பட பல இடங்களுக்கு செல்ல உள்ளனர்.
முன்னதாக தமிழ்நாட்டின் திருச்சி விமான நிலையத்தில் துபாய் புறப்பட்ட போது பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியபோது, ‛‛இந்த 4 நாட்கள் கல்வி சுற்றுலாவில் நான் தான் இந்த மாணவர்களுக்கு தாயாகவும் தந்தையாகவும் இருக்க போகிறேன்" என மகிழ்ச்சியாக கூறியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications