பறந்த சேர்கள்.. கலவரமான கிரிக்கெட் மைதானம்! ஆப்கான். ரசிகர்கள் எப்போதும் இப்டிதான் - சொயிப் அக்தர்
துபாய்: ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான போட்டியின் முடிவில் இருநாட்டு ரசிகர்களும் மோதலில் ஈடுபட்ட நிலையில், ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் மீது பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சொயிப் அக்தர் குற்றம்சாட்டி இருக்கிறார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லீக் சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி நம்பிக்கை கொடுத்தது இந்தியா.
2 வது லீக் போட்டியில் குட்டி அணியான ஹாங்காங்கிற்கு எதிராக தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் இந்திய அணி வெற்றியை பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது.
பேட்டை தூக்கிக்கிட்டு அடிக்க பாய்ந்த வீரர்! சேரை வீசி தாக்கிய பேன்ஸ்.. "அந்த" காரணம்! நடந்தது என்ன?
இந்திய அணி
சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் முன்னேறின. கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானிடம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது இந்தியா. செவ்வாய்கிழமை இலங்கை அணிக்கு எதிரான போட்டியிலும் இந்தியா அதிர்ச்சித் தோல்வியை தழுவியது.
பாகிஸ்தான் VS ஆப்கானிஸ்தான்
இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதிபெறுவதற்கு நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான போட்டியில் ஆப்கானிஸ்தான் அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் நேற்று நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தானை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்.
வீரர்கள் மோதல்
இந்த போட்டியின்போது நெருக்கடியான நேரத்தில் முக்கியமான பாகிஸ்தான் பேட்ஸ்மேன் ஆசிப் அலியை ஆட்டமிழக்க செய்த ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர் ஃபரீத் அஹமத், பேட்ஸ்மேனுக்கு மிக அருகில் சென்று கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த ஆசிப் அலியை ஃபரீத் அஹமதுவை அடிப்பதற்காக பேட்டை சுழற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரசிகர்கள் மோதல்
வீரர்கள் மத்தியில் ஏற்பட்ட இந்த மோதல் ரசிகர்களுக்கும் தொற்றிக் கொண்டது. கடைசி வரை போராடியும் பாகிஸ்தான் வீழ்த்த முடியாததால் அதிர்ச்சியடைந்த ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் ஷார்ஜா மைதானத்தில் இருந்த இருக்கைகள் வீசி எரிந்தனர். அப்போது அங்கிருந்த பாகிஸ்தான் ரசிகர்களுக்கும் ஆப்கான் ரசிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் இரு தரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
சொயிப் அக்தர்
இது குறித்து ட்விட்டரில் வீடியோவை பதிவிட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சொயிப் அக்தர், "இதைதான் ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் செய்கிறார்கள். கடந்த காலங்களிலும் ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் இதுபோல் பலமுறை செய்துள்ளார்கள். இந்த விளையாட்டை நல்ல நோக்கத்துக்காக விளையாட வேண்டும். ஸ்டஃபிக் ஸ்டானிக்சாய், உங்கள் வீரர்களும் ரசிகர்களும் சில விசயங்களை கற்றுக்கொண்டால் மட்டுமே விளையாட்டில் வளர முடியும்." என்று பதிவிட்டு உள்ளார்.